கெட்ட வார்த்தை சொல்லி திட்டிய மணிவண்ணன்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் சாணி அள்ளிய சுந்தர்.சி
சென்னை: மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சுந்தர்.சி. பிறகு முறைமாமன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான அவர் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். காமெடி ஜானரில் படம் இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பெற்ற அவர் கடைசியாக கேங்கர்ஸ் திரைப்படத்தை இயக்கியிருந்தார். வடிவேலு, சுந்தர்.சி உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பையே பெற்றது. இந்நிலையில் சுந்தர்.சி கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சுந்தர்.சி தமிழ் சினிமாவின் சீனியர் இயக்குநர்களில் ஒருவர். அவர் முதலில் இயக்கிய படம் முறைமாமன். ஜெயராம், கவுண்டமணி, குஷ்பூ உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதிலும் அப்படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் அனைத்துமே இன்றுவரை ரசிக்கக்கூடியவை. அடுத்ததாக அவர் இயக்கிய உள்ளைத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, மேட்டுக்குடி உள்ளிட்ட படங்கள் எல்லாம் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டாக திகழ்ந்துகொண்டிருப்பவை.
காமெடி ஜானரில் கிங்: சுந்தர்.சி படம் என்றாலே அதில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அப்படி அவர் இயக்கிய வின்னர் படம் எல்லாம் காலத்துக்கும் தனித்து நிற்பவை. இடையில் சில காலம் இயக்கத்தை நிறுத்தி நடிப்பதில் ஆர்வம் காட்டிய அவர் மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பினார். அப்படி அவர் இயக்கிய கலகலப்பு, அரண்மனை சீரிஸ் படங்கள் எல்லாம் மெகா ஹிட்டாகின.

கேங்கர்ஸ்: அவரது இயக்கத்தில் கடைசியாக கேங்கர்ஸ் திரைப்படம் ரிலீஸானது. இப்படத்துக்கு முன்னதாக அவர் இயக்கத்தில் வெளியான மதகஜராஜா, அரண்மனை 4 ஆகிய இரண்டு படங்களுமே ஹிட்டடித்தன. எனவே சுந்தருக்கு கேங்கர்ஸ் ஹாட்ரிக் வெற்றியை கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. வழக்கமான சுந்தர்.சியின் டெம்ப்ளேட்டில்தான் படம் அமைந்திருந்தது. இருப்பினும் முந்தையை இரண்டு படங்களை ஒப்பிடுகையில் கேங்கர்ஸ் சுமாரான வரவேற்பைதான் பெற்றது.
குஷ்பூவுடன் திருமணம்: இதற்கிடையே அவர் தனது முதல் படமான முறைமாமன் படத்தை இயக்கியபோது அதில் ஹீரோயினாக நடித்த குஷ்பூவை காதலித்தார். பிறகு இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சமீபத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாணி அள்ளிய சுந்தர்.சி: இந்நிலையில் சுந்தர். சி கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் அவர், "நான் உதவி இயக்குநராக மணிவண்ணனிடம் சேர்ந்தேன். அப்படி நான் சேர்ந்த முதல் படத்தில் பொள்ளாச்சி அருகே இருக்கும் ஆனைமலையில் ஷூட்டிங் நடந்தது. அப்போது ரோட்டில் சாணி இருந்தது. கேமராவில் அது தெரிந்தது. உடனே சாணியை அள்ளு ப்பா என்று மணிவண்ணன் என்னிடம் கூறினார்.
கெட்ட வார்த்தையில் திட்டிய டைரக்டர்: நான் உடனே அருகில் இருந்தவர்களிடம் சாணியை அள்ளுங்க என்று சொன்னேன். உடனே என்னை பார்த்த மணிவண்ணன், ஒரு கெட்டவார்த்தை சொல்லி ஏன் நீ சாணி அள்ளமாட்டியோ என திட்டினார். அதனையடுத்து நான் அள்ளினேன். அப்போதுதான் சினிமாவில் எந்த வேலையாக இருந்தாலும் இழுத்துப்போட்டு செய்ய வேண்டுமென கற்றுக்கொண்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











