பேருக்கு டேமேஜ் வரக்கூடாது.. அந்தப் பழக்கத்தையே விட்டுட்டேன்.. ஓபனாக போட்டுடைத்த சுந்தர்.சி
சென்னை: மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சுந்தர்.சி. பிறகு முறைமாமன் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமான அவர் ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். காமெடி ஜானரில் படம் இயக்கி தனக்கென தனி அடையாளத்தை பெற்ற அவர் கடைசியாக அரண்மனை 4 படத்தை இயக்கினார். அடுத்ததாக கேங்கர்ஸ் என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் வடிவேலுவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் சுந்தர்.சி அளித்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
சுந்தர்.சி தமிழ் சினிமாவின் சீனியர் இயக்குநர்களில் ஒருவர். அவர் முதலில் இயக்கிய படம் முறைமாமன். ஜெயராம், கவுண்டமணி, குஷ்பூ உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதிலும் அப்படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் அனைத்துமே இன்றுவரை ரசிக்கக்கூடியவை. அடுத்ததாக அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, மேட்டுக்குடி உள்ளிட்ட படங்கள் எல்லாம் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டாக திகழ்ந்துகொண்டிருப்பவை.

காமெடி ஜானரில் கிங்: சுந்தர்.சி படம் என்றாலே அதில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அப்படி அவர் இயக்கிய வின்னர் படம் எல்லாம் காலத்துக்கும் தனித்து நிற்பவை. இடையில் சில காலம் இயக்கத்தை நிறுத்தி நடிப்பதில் ஆர்வம் காட்டிய அவர் மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பினார். அப்படி அவர் இயக்கிய கலகலப்பு, அரண்மனை சீரிஸ் படங்கள் எல்லாம் மெகா ஹிட்டாகின. கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 படம் சூப்பர் டூப்பர் ஹிட். அடுத்ததாக கேங்கர்ஸ் என்ற படத்தை இயக்குகிறார். அதில் வடிவேலுவும் நடிக்கிறார்.
ட்ரெண்டாகும் வீடியோ: இந்நிலையில் சத்யராஜ் குறித்து சுந்தர்.சி பேசியிருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. அவர் பேசுகையில், “எனது வாழ்க்கையில் என்னுடைய குருநாதர் என்றால் அது சத்யராஜ்தான். நான் அவரிடமிருந்த பல விஷயங்களை காப்பி அடித்திருக்கிறேன். ஒருமுறை ஒரு படத்தின் ப்ரிவ்யூ ஷோவுக்கு நானும் சத்யராஜும் போனோம். அந்தப் படம் நன்றாகவே இல்லை. எங்களால் அந்தப் படத்தை பார்க்கவே முடியவில்லை. பாதியில் எழுந்து வந்தால் நன்றாக இருக்காது என்பதால் எப்படியோ அந்தப் படத்தை முழுதாக பார்த்தோம்.
புகழ்ந்த சத்யராஜ்: படம் பார்த்துவிட்டு வெளியே வந்த எங்களிடம் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் படம் எப்படி இருக்கிறது என்று எங்களிடம் கேட்டார். உடனே சத்யராஜோ, 'படம் அருமையாக இருக்கிறது. கண்டிப்பாக ஹிட்டாகும்’ என்று சொல்லிவிட்டு வந்தார். நானும் அவரும் காரில் போய்க்கொண்டிருந்தபோது, 'என்னங்க படம் அருமையாக இருக்குனு சொல்லிட்டு வந்துட்டீங்க’ என்று கேட்டேன். அதற்கு சத்யராஜோ, இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முன்னர் நம்மிடம் வந்திருந்தால் ஏதாவது ஐடியா சொல்லிருப்பார்.
புலம்புவார் பாவம்: ஆனால் பட ரிலீஸுக்கு இன்னும் ஒரு வாரம்தான் இருக்கிறது. இந்த சமயத்தில் படத்தை நாம் நன்றாக இல்லை என்று சொல்லிவிட்டால் பாவம் இந்த வாரம் முழுக்க சோகமாக இருப்பார். முக்கியமாக படம் நன்றாக இல்லை என்று இப்போது உண்மையை சொல்லிவிடலாம். படம் ரிலீஸான பிறகு யாரோ ஒருவர் வந்து அவரிடம் படம் நன்றாக இல்லை என்று சொன்னால்; அந்த நார வாயன் அப்போதே நன்றாக இல்லை என்று சொன்னான். அதனால்தான் படம் ஓடவில்லை என்று சொல்வார். அதனால் நன்றாக இருக்குனு சொல்லிட்டேன்.
அதேபோல் யாராவது அவரிடம் சென்று படம் பிடிக்கவில்லை என்று சொன்னால்கூட; யாருக்கு பிடிக்கவில்லை என்றால் என்ன சத்யராஜுக்கு பிடித்திருக்கிறதே என்று நம்மை பற்றி நல்லவிதமாகத்தான் நினைப்பார். எப்படி பார்த்தாலும் நம்முடைய பெயருக்கு டேமேஜ் வராது பாருங்க என்று சொன்னார். அதை நான் எனது வாழ்க்கையில் ஒரு பாடமாகவே வைத்திருக்கிறேன். அதேசமயம் என்னால் இப்படி பொய் சொல்ல முடியாது. அதனால் ப்ரிவ்யூ ஷோ பார்க்கப்போவதையே நிறுத்திவிட்டேன்” என்றார்.


Click it and Unblock the Notifications











