ஜோதிகா அப்படிப்பட்டவர்தான்.. மதிப்பதே இல்லை.. குற்ற உணர்ச்சியாக இருக்கு.. ஓபனாக பேசிய சூர்யா
சென்னை: சூர்யாவும் ஜோதிகாவும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள். சில காலம் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்த ஜோதிகா 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் இப்போது பாலிவுட்டில் முழுக்க முழுக்க கவனத்தை செலுத்திவருகிறார். கடைசியாக அவர் டப்பா கார்ட்டெல் என்கிற வெப் சீரிஸில் நடித்தார். இந்நிலையில் சூர்யா கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
வசந்த் இயக்கத்தில் உருவான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில்தான் சூர்யாவும், ஜோதிகாவும் முதன்முதலாக சேர்ந்து நடித்தார்கள். அப்போதே அவர்களுக்குள் காதல் மலர்ந்துவிட்டது. தொடர்ந்து பல வருடங்கள் காதலித்த அவர்கள் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். முதலில் இந்தத் திருமணத்துக்கு சூர்யாவின் தந்தையும், நடிகருமான சிவக்குமார் ஒத்துக்கொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மகனின் தீவிரத்தால் அந்தத் திருமணத்துக்கு ஒருவழியாக ஒத்துக்கொண்டார்.

இரண்டாவது இன்னிங்ஸ்: திருமணம் ஆனதைத் தொடர்ந்து முழு நேர இல்லத்தரசியாக மாறினார் ஜோதிகா. அவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் பிறந்தார்கள். குழந்தைகள் வளர ஆரம்பித்தவுடன் மீண்டும் நடிக்க முடிவு செய்து 36 வயதினிலே படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் ஜோ. அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் ஜோதிகாவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடித்துக்கொண்டிருந்தார் அவர். அதன்படி தம்பி, காற்றின் மொழி, உடன்பிறப்பே, பொன்மகள் வந்தாள், ராட்சசி என ஏகப்பட்ட படங்களில் தனது சிறப்பான நடிப்பை கொடுத்தார். எனவே அவர் தொடர்ந்து கோலிவுட்டில் நிறைய படங்களில் நடிப்பார் என்று அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
பாலிவுட்டில்: சூழல் இப்படி இருக்க பாலிவுட் பக்கம் சென்றார் அவர். அங்கு ஷைத்தான், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், கடைசியாக டப்பா கார்ட்டெல் என்கிற வெப் சீரிஸில் நடித்தார். அந்த சீரிஸுக்கு ஓரளவுக்கே வரவேற்பு கிடைத்தது. இதற்கிடையே சூர்யாவையும் பாலிவுட்டில் கவனம் செலுத்த வைப்பதற்காக ஒட்டுமொத்த குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டார் சூர்யா. ஆனால் சிவக்குமாருகும், ஜோதிகாவுக்கும் நடந்த பிரச்னைதான் இந்த குடி பெயர்தலுக்கு காரணம் என்று கிசுகிசுக்கள் பரவின. ஆனால் அதனை அவர்கள் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்கள்.

சர்ச்சை ஜோதிகா: பாலிவுட்டில் நடிக்க ஆரம்பித்த ஜோதிகா தென்னிந்திய சினிமாக்களை சமீபத்தில் குறை கூறினார். அதாவது ஒரு பேட்டியில் அவர், "நான் தென்னிந்திய சினிமாவிலிருந்து வருகிறேன். அங்கு ஆண்களை முன்னிலையாக கொண்ட படங்கள்தான் அதிகம் வருகின்றன. இப்போது மாற்றங்கள் வந்திருக்கின்றன. பாலிவுட்டிலும் மாற்றங்கள் வந்திருக்கின்றன. தென்னிந்தியாவில் பெரும்பாலும் ஆண்களுக்காகத்தான் அதிகம் எழுதப்பட்டிருக்கும். பெண்கள் கதாபாத்திரம் முழுமையடைந்ததாக இருக்காது. தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை பெண்கள் நடனமாடவும், ஆண்களை புகழவும்தான் பயன்படுத்தப்படுகிறார்கள். அது இப்போதும் இருக்கிறது" என்றார்.
அதற்கு பலரும் தங்களது கடுமையான கண்டனத்தை முன்வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இங்கு ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், 'தமிழ் சினிமாவில் இப்போது நல்ல ரொமான்ட்டிக்கான படங்கள் எல்லாம் வருவதே இல்லை. சில்லுக்கருப்பட்டி ரொம்பவே ரேராகத்தான் ரொமான்ட்டிக்கான படங்கள் வருகின்றன. அப்படி ஒரு கதை அமைந்தால் நானும், சூர்யாவுமே சேர்ந்து நடிப்பதற்கு தயாராக இருக்கிறோம்" என்று சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள் ஜோதிகாவுக்கு தமிழ் சினிமாவை குறை சொல்வதே வேலையாக போய்விட்டது என்று சொல்லி கடும் ட்ரோல் செய்துவருகிறார்கள். மேலும் இதுதொடர்பாக சூர்யா கண்டிப்பாக மௌனம் கலைக்க வேண்டும்; அதுமட்டுமின்றி ஜோதிகா வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை வலுவாக வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
சூர்யாவின் பேட்டி: இந்நிலையில் ஜோதிகா பற்றி சூர்யா கொடுத்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் கொடுத்த பேட்டியில், "ஜோதிகா ஒரு அற்புதமான இல்லத்தரசி. அவர் குடும்பத்துக்காக தந்தை பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். அவர் தனது திரைப்பயணத்தை மீண்டும் தொடங்குவதற்கு சரியான நேரம் என்று ஒன்றை கருதினோம். அதற்குள் அவர் அற்புதமான குடும்பத்தை கட்டமைத்துவிட்டார். அப்போதுதான் மலையாளத்தில் ஹவ் ஓல்ட் ஆர் யூ படம் வெளியாகியிருந்தது. அது ஜோவின் கம்பேக் படமாக இருக்கலாம் என்று கருதினோம்.

தமிழில் ரீமேக்: ஆனால் 36 வயதினிலே என்று அந்தப் படம் தமிழீல் ரீமேக் ஆனது. அப்படம் பல விஷயங்களை உணர்த்தும் விதமாக இருந்தது. ஆண்களும், பெண்களும் அந்தப் படத்தை பார்த்து உத்வேகம் அடையலாம். பெண்களை மதிக்கும் விதமாக அந்தப் படம் இருக்கும். கணவன் மற்றும் மனைவிக்கு இடையே இதயப்பூர்வமான உரையாடல்கள் பெரும்பாலும் நடப்பதில்லை என்றே நான் நினைக்கிறேன். வீட்டில் பெண்கள் செய்யும் பணிகளை நாம் மதிப்பதே இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மை. இதை ஒத்துக்கொண்டுதான் ஆக வேண்டும்.
குற்ற உணர்ச்சியாக இருக்கும்: அதேபோல் சில நேரங்களில் என்னை நினைத்தால் எனக்கே குற்ற உணர்ச்சியாக இருக்கும். என் மீதும் தவறுகள் இருக்கத்தான் செய்கின்றன. பெண்கள் தங்களுக்கு விருப்பமானதை செய்ய முடியாமல் இருப்பதற்கு ஆண்கள் காரணமாக அமைகிறார்கள். ஜோதிகா ஒரு நல்ல தாயாகவும், மனைவியாகவும் இருந்து ஒரு குடும்பத்தை வழிநடத்துவதற்கு என்ன தேவையோ அதையே செய்தார். ஜோதிகாவை போல் என்னால் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய முடியாது. நான் ஒரு ஒழுக்கமான கணவர் என்று எனக்கு தெரியும். ஆனால் நான் ஒரு சிறந்த தந்தையா என்று எனக்கு தெரியவில்லை. எங்களது குழந்தைகளுக்கு ஜோதிகா சிறந்த தந்தையாகவும் செயல்படுகிறார்" என்றார்.
ஜோதிகா காட்டம்: முன்னதாக சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் வெளியானபோது பலரும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். அதற்கு ஜோதிகா தனது காட்டமான கருத்தினை தெரிவித்தார். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் அளித்த பேட்டியில் மீண்டும் கங்குவாவுக்கு எழுந்த விமர்சனங்கள் குறித்து பேசியிருந்தார். அந்தப் பேட்டியில் அவர், "பாக்ஸ் ஆஃபிஸ் வசூலில் வெற்றியடைந்த பல தரம் குறைந்த வணிக படங்கள் கரிசனத்துடன் விமர்சனம் செய்யப்பட்டன. ஆனால் நிறைய புதிய முயற்சிகள் செய்யப்பட்டிருந்த கங்குவா திரைப்படம் பிற மோசமான திரைப்படங்களைவிடவும் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. அப்போது என்னை அது ரொம்பவே பாதித்தது" என்றார். கங்குவா பற்றி மீண்டும் பேசியதற்கும் ஜோதிகாவை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











