சுறா எனது 50வது படம் இல்லை.. காட்டு மொக்கை படத்தை கை காட்டிய விஜய்!
சென்னை: தமிழ் சினிமாவில் மாஸான நடிகர்களில் டாப் லிஸ்ட்டில் உள்ளவர் விஜய். இவர் வரும் 22ஆம் தேதி தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை ரசிகர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். விஜய் படம் ரிலீசானாலே குறைந்தது 300 கோடி ரூபாய் வசூல் எனும் அளவிற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். கடைசியாக வெளியான லியோ படம் ரூபாய் 500 கோடிக்கு மேல் வசூலானது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் கோடிகளில் கோலோச்சிக் கொண்டு இருக்கக் கூடிய நடிகராக வலம் வரும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களில் நடித்துவிட்டு முழுநேர அரசியலில் களமிறங்க முடிவெடுத்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள தி கோட். விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கின்றார் எனக் கூறப்பட்டுவந்த நிலையில் அண்மையில் மூன்று கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றார் என்ற தகவல் வெளியானது. படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மைக் மோகன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்த் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முக்கியமான காட்சிகளில் வருவது போல் உருவாக்கப்பட்டுள்ளது என ஏற்கனவே விஜயகாந்த் குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர்.

தி கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து வருகின்றார். புதிய கீதை படத்திற்குப் பின்னர் யுவன் சங்கர் ராஜா விஜயின் கோட் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின், முதல் பாடல் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. விஜய் பாடியிருந்த அந்த பாடலுக்கு கலவையான விமர்சனங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது. விஜய் இந்த படத்தில் இன்னொரு பாடலை பாடியுள்ளார் என்றும், மறைந்த பாடகர் பவதாரணி குரலில் ஒரு பாடல் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகின்றது.

50வது படம்: தி கோட் படம் விஜயின் 68வது திரைப்படம். இவரது 50வது திரைப்படமான சுறா படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் தமன்னா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. இதனால் விஜய் மட்டும் இல்லாமல் விஜயின் ரசிகர்களும் சோர்ந்து போனார்கள். சுறா படம் மீனவ மக்களின் பிரச்னைகளை மையப்படுத்திய படமாக இருந்தாலும் சொதப்பலான திரைக்கதையாலும், மிகவும் வலுவான வில்லன் கதாபாத்திரம் அமைக்கப்படாததாலும் படம் தோல்வியைத் தழுவியது.

விஜய் பேட்டி: இந்நிலையில், நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில், "செய்தித் தாள்களில் 50வது படம் குறித்து அதிகமாக எழுதுகின்றனர். இதுவே எனக்கு கொஞ்சம் பதற்றத்தை கொடுக்கின்றது. ஆனால் வில்லு படத்தில் அனைத்து அம்சங்களும் மிகவும் கச்சிதமாக பொருந்தி வந்துள்ளது. இந்த படத்தை 50வது படமாக நினைத்துக் கொள்ளுங்கள். அதாவது இரண்டு படங்களுக்கு முன்னரே உங்களுக்கு 50வது படத்தைக் கொடுத்ததாக நினைத்துக் கொள்ளுங்கள்" எனக் கூறியுள்ளார்.

வில்லு: வில்லு திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் வெளியான படம். போக்கிரி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் வில்லு படத்திலும் இருவரும் மீண்டும் இணைந்தனர். இந்த படத்தின் ஓப்பனிங் சாங்கில் குஷ்பு ஆடியிருப்பார். நயன்தாரா, வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். இந்த படம் வெளியாகி கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஆனாலும் விமர்சன ரீதியாக, படத்தில் வலிந்து திணிக்கப்பட்ட கிளாமர் காட்சிகள் விமர்சிக்கப்பட்டது. அதேபோல், வடிவேலுவைக் கொண்டு எடுக்கப்பட்ட காமெடி காட்சிகளில் உருவக்கேலி செய்யும் விதமாக எடுக்கப்பட்டதும் கடும் விமர்சனத்திற்கு ஆளானது. வில்லு படத்தின் விமர்சனங்களுக்குப் பின்னர் பிரபுதேவா மற்றும் விஜய் இணைந்து படம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள கோட் படத்தில் பிரபுதேவா நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











