கைத்தட்டு வாங்கிய வடிவேலு; நெஞ்சில் ஏறி மிதித்து துரத்திவிட்ட கவுண்டமணி
சென்னை: என் ராசாவின் மனசிலே படத்தின் ஷூட்டிங்கின்போது வடிவேலுவை கவுண்டமணி நெஞ்சில் ஏறி மிதித்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
கோலிவுட்டின் நகைச்சுவை நடிகர்களில் கவுண்டமணி தனித்துவமானவர். தலைமுறையை கடந்து அவரது காமெடி கொண்டாடப்பட்டுவருகிறது. அவருடன் செந்தில் இணைந்து செய்த காமெடிகள் அனைத்துமே இன்றுவரை பலரது ஃபேவரைட்.

கவுண்டமணியின் சகாப்தம்
உடுமலைப்பேட்டையை சொந்த ஊராக கொண்ட கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணியன். நடிப்பு மீது ஆர்வம் கொண்ட அவர் ஒரு நாடக கம்பெனியில் இணைந்தார். அங்கிருந்தபடி சினிமாவுக்கும் அவர் முயற்சி செய்ய பாரதிராஜாவின் 16 வயதினிலே படம் மூலம் அவர் நகைச்சுவை நடிகராக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. டைமிங்கில் கவுண்ட்டர் அடிப்பதால் சுப்பிரமணி கவுண்டமணி ஆனார். முதல் படத்திலேயே அவரது நடிப்பும், டைமிங்கும் ரசிகர்களை கவர ஆரம்பித்தன.

கவுண்டமணி - செந்தில் காம்போ
எவர்க்ரீன் காமெடி காம்போ கவுண்டமணியும், செந்திலும் ஆவர். பல நூறு படங்களில் இருவரும் இணைந்து காமெடியில் கலக்கியிருக்கின்றனர். குறிப்பாக வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன் என அவர்கள் அதகளம் செய்த திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் பெரிது. ஒருகட்டத்தில் கவுண்டமணி இல்லாமல் செந்தில் இல்லை செந்தில் இல்லாமல் கவுண்டமணி இல்லை என்ற நிலையே திரைத்துறையில் நீடித்தது. அந்த அளவுக்கு இருவரும் நெருங்கி பழகினார்கள். கவுண்டமணி நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தபோது மீண்டும் நடிக்க வர வேண்டுமென்று அவருக்கு நீண்ட கடிதத்தையும் செந்தில் எழுதியது குறிப்பிடத்தக்கது.

வைகைப் புயல் வடிவேலுவின் எண்ட்ரி
இப்படி இருவரும் உச்சக்கட்டத்தில் இருந்தபோதுதான் வடிவேலு திரைத்துறைக்குள் நுழைந்தார். கவுண்டமணியும், செந்திலும் இருக்கும்போது அவர்களை மீறி வடிவேலுவால் திரைத்துறையில் நீடித்திட முடியுமா என்ற சந்தேகத்தையே பலர் எழுப்பினர். ஆனால் அதற்கெல்லாம் அசராத வடிவேலு தனது திறமையால் கடந்த 20 வருடங்களாக டாப் காமெடி நடிகராக இருந்தது கவனிக்கத்தக்கது. இருப்பினும் மதுரையிலிருந்து வடிவேலு நடிக்க வந்ததை கவுண்டமணி வன்மையாக கண்டித்திருக்கிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் கைத்தட்டு வாங்கிய வடிவேலு
வடிவேலு முதல்முதலில் அறிமுகமான படம் என் ராசாவின் மனசிலே. அந்தப் படத்தை தயாரித்து, இயக்கியது தற்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கிவரும் நடிகர் ராஜ்கிரண். மிகவும் கஷ்டப்பட்டுத்தான் அந்தப் படத்தை எடுத்தாராம். அந்த சமயத்தில் காமெடி ட்ராக்கை எடுத்து முடித்துவிடலாம் என முடிவெடுத்த அவர், கவுண்டமணியிடமும், செந்திலிடமும் தேதிகள் வாங்கி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார். இவர்கள் இருவரும் ஒரு மரத்தடியில் மேக்கப் போட்டுக்கொண்டிருக்க; மற்றொரு பக்கம் வடிவேலு ஒரு சீனில் நடித்துக்கொண்டிருந்தாராம். அந்த சீனை அவர் நடித்து முடித்ததும் அங்கிருந்தவர்கள் கைத்தட்டினார்களாம்.

வடிவேலு நெஞ்சில் ஏறி மிதித்த கவுண்டமணி
இதனைக் கேட்ட கவுண்டமணி கூட்டத்தை ஒதுக்கி பார்த்துவிட்டு செந்திலிடம், 'ஏன் செந்திலு நம்ம இல்லாம வேற காமெடி ஆக்டர் வந்துருக்காங்களா' என கேட்டிருக்கிறார். அப்போது அங்கிருந்த சிஸர் மனோகர், 'வடிவேலுனு இந்த பையன் பேரு. சொந்த ஊரு மதுரை. நம்ம பையதான். அடுத்த சீன் உங்களோடுதான் நடிக்கப்போறார். நீங்க அவர அடிக்கிற மாதிரி சீன்' என்று கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு கோபப்பட்ட கவுண்டமணி, 'அவனவன் நடிக்கிறதுக்காக தேனாம்பேட்டைல சாப்பிட வழி இல்லாம சுத்திட்டு இருக்கான்.
உங்க டைரக்டரு மதுரைலேர்ந்து கூப்ட்டு வந்து நடிக்க வைப்பாரா? கூப்டு அவர' என சொல்லியிருக்கிறார். விஷயம் கேள்விப்பட்டு வந்த ராஜ்கிரண் கவுண்டமணியிடம், 'அடுத்த சீன் நீங்க இவன ஏறி மிதிக்கிற மாதிரிதான் இருக்கு. அந்த சீன் முடிஞ்சதும் திருப்பி இவனை மதுரைக்கே அனுப்பிடுறேன்' என கூற; அடுத்த சீன் முடிஞ்சதும் மதுரைக்கு அனுப்பிடணும் என கவுண்டமணி உறுதி வாங்கியிருக்கிறார்.
தொடர்ந்து கவுண்டமணி வடிவேலுவை மிதிக்கும் சீன் ஷூட் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது வடிவேலுவின் நெஞ்சில் கவுண்டமணி உண்மையிலேயே ஏறி மிதித்துவிட்டாராம். அந்த சீனுக்கான ஷூட்டிங் முடிந்ததும் சிஸர் மனோகரிடம் வந்த வடிவேலு, 'அண்ணே அவரு உண்மைலே மிதிக்கிறாரு அண்ணே' என சொல்லியிருக்கிறார். அதற்கு மனோகர், 'அவர்ட்ட அடி வாங்குனா நீ பெரிய ஆளா வருவ' என கூறினாராம். இந்தத் தகவலை சிஸர் மனோகர் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











