Ilayaraaja - விழாவுக்கு வர முடியாது.. இசையமைக்கவும் முடியாது.. பாலசந்தர் - இளையராஜா மோதலுக்கு இதுவா காரணம்?
சென்னை: இசைஞானி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் இளையராஜா. பல வருடங்கள் தொடர்ந்து இசையமைத்துவரும் அவர் இதுவரை 1000 படங்களுக்கும் மேலாக பணியாற்றியிருக்கிறார். கடைசியாக அவரது இசையில் மாடர்ன் லவ் சென்னை என்ற ஆந்தாலாஜி படமும், வட்டார வழக்கு என்ற திரைப்படமும் வெளியானது. அடுத்து விடுதலை 2 வெளியாகவிருக்கிறது.
அன்னக்கிளி படத்தின் மூலம் 1975ஆம் ஆண்டு இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. முதல் படத்திலேயே அனைத்து பாடல்களையும் ஹிட்டாக்கினார். முக்கியமாக அவர் இசையமைக்க வந்த பிறகுதான் வரப்பில் இருந்தவரும் இசைக்காக வாயை திறந்தார். அந்த அளவுக்கு இளையராஜாவின் பாடல்கள் முதல் படத்திலேயே சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலும் கிராமத்து வாசனை அடிக்கக்கூடிய இசையை எந்த சமரசமுமின்றி மக்களுக்கு கொடுத்தார் இளையராஜா.

இசைஞானி: அன்னக்கிளி படத்தில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை அடுத்து தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. சூழல் இப்படி இருக்க பாரதிராஜாவும் சினிமாவுக்குள் வந்து அவர் புதிய பாய்ச்சலை செலுத்த எவர்க்ரீன் கூட்டணியான பாரதிராஜா - இளையராஜா கூட்டணி உருவானது. அவர்கள் இருவரும் சேர்ந்து தமிழ் சினிமாவையும், இசையையும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி சென்றனர். பாரதிராஜா மட்டுமின்றி மகேந்திரன், பாலுமகேந்திரா, எஸ்.பி.முத்துராமன், ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன் என அப்போதைய பீக் இயக்குநர்களுடன் தொடர்ந்து பணியாற்றினார். அவருக்கு கலைஞர் கருணாநிதி இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தார்.
பாலசந்தருடன் கூட்டணி: தமிழ் சினிமாவில் இயக்குநர் சிகரம் என்று போற்றப்படும் பாலசந்தருடனும் இணைந்து பல வெற்றி பாடல்களை கொடுத்தார் இளையராஜா. அவர்கள் இருவரது கூட்டணியில் வெளியான சிந்து பைரவி, புன்னகை மன்னன், உன்னால் முடியும் தம்பி போன்ற படங்களின் பாடல்கள் இன்றுவரை எவர்க்ரீனாக ஒலித்துக்கொண்ட்ருக்கின்றன.
மோதல்: இளையராஜா எவ்வளவுக்கு எவ்வளவு இயக்குநர்களுடன் நெருக்கமாக இருந்தாரோ அதே அளவு மோதலையும் சந்தித்தவர். பாரதிராஜா, பாலசந்தர் ஆகியோருடனும் ஒருகட்டத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்துவிட்டார். பிறகு பாரதிராஜாவுடன் அவருக்கு இருந்த கருத்து வேறுபாடு தீர்ந்தாலும் பாலசந்தருடன் கடைசிவரை கருத்து வேறுபாடு தீரவே இல்லை என்று கூறப்படுகிறது.
என்ன மோதல்: இதற்கிடையே பாலசந்தர் இயக்கம் மட்டுமின்றி அவரது தயாரிப்பில் வெளியான படங்களுக்கும் இசையமைக்க மறுத்துவிட்டார் இளையராஜா. இந்த சூழலில் இளையராஜாவுக்கும் - கவிதாலயா நிறுவனத்துக்குமான மோதல் குறித்து காரணம் தெரியவந்திருக்கிறது. அதாவது, கவிதாலயா நிறுவனத்தின் பேனரில் தயாராகும் மூன்று படங்களுக்கு இளையராஜா இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இப்போது முடியாது: அதனையடுத்து அந்த மூன்று படங்களின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டார்களாம். பிறகு இளையராஜாவிடம் சென்றபோது அவரோ, பல படங்கள் இருக்கின்றன அதனால் இப்போது இசையமைக்க முடியாது என்று சொல்லிவிட்டு வேண்டுமென்றால் ட்ராக் எடுத்து போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினாராம்.
படம் ரிலீஸ்: ஏற்கனவே இளையராஜாவின் ட்ராக் கவிதாலயா நிறுவனத்திடம் இருந்ததால் அதை படத்தில் சேர்த்து ரிலீஸும் செய்துவிட்டார்களாம். அதேபோல் இன்னொரு படத்தையும் ரிலீஸ் செய்தார்களாம். அந்த இரண்டு படங்களில் ஒரு படம் மெகா ஹிட்டாகிவிட்டதாம். எனவே அந்தப் படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சிக்காக இளையராஜாவுக்கு கவிதாலயா நிறுவனம் சார்பாக அழைப்பு சென்றிருக்கிறது.
வரமுடியாது: ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு தன்னால் வர முடியாது; நீங்கள்தான் ட்ராக் போட்டுக்குட்டிங்களே என்று சொல்லியிருக்கிறார் இளையராஜா. அதுமட்டுமின்றி தனக்கும் அந்தப் படத்துக்கும் சம்பந்தம் இல்லாதது போல் பேசினாராம். உடனே கவிதாலயா தரப்பிலிருந்து சென்றிருந்த பிரமிட் நடராஜான், நீங்கள் சொன்னதால்தானே அப்படி செய்தோம் என்று கேட்க; அதற்கு இளையராஜாவோ நான் சொன்னால் நீங்கள் அப்படி போட்டுவிடுவீர்களா என்று கேட்க; கவிதாலயா தரப்பு ஒன்றும் சொல்லாமல் வந்துவிட்டதாம்.
நிலைமை இப்படி இருக்க இயக்குநர் வசந்த் கவிதாலயா நிறுவனத்துக்கு ஒரு படம் பண்ணுவதாக சந்தர்ப்பம் அமைந்திருக்கிறது. வழக்கம்போல் இளையராஜாவை இசையமைக்க வைக்கலாம் என்று எண்ணி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது இனி நான் கவிதாலயா நிறுவனத்துக்கு இசையமைக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டாராம். இதனை தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். இளையராஜா மறுத்த பிறகுதான் ஏ.ஆர்.ரஹ்மானை திரையுலகுக்கு கொண்டுவந்தது கவிதாலயா நிறுவனம்.


Click it and Unblock the Notifications











