Throwback: நான் இருமியதும் ரஜினி என்ன பண்ணார் தெரியுமா?.. சூப்பர் ஸ்டார் குறித்து சிலாகித்த ராஜேஷ்!
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் இன்று உயிரிழந்தது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜெயிலர் 2 படத்தில் பிசியாக நடித்து வரும் ரஜினிகாந்த் தனது நண்பர் ராஜேஷ் உயிரிழந்த செய்தியை அறிந்து அதிர்ச்சியடைந்து உடனடியாக எக்ஸ் தள பக்கத்தில் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார், விஜய் மற்றும் விஜய் சேதுபதி என பல பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்த நடிகர் ராஜேஷின் மறைவு ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பாக்கியராஜ் உடன் அவர் இணைந்து நடித்த அந்த 7 நாட்கள் படத்தின் காட்சிகளை எல்லாம் பலரும் பகிர்ந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ரஜினிகாந்த் உடன் ஒரு மணி நேரம், 3 மணி நேரம் என்றெல்லாம் பேசியிருக்கிறேன், அவருடைய உயர்ந்த குணம் எப்படி இருக்கும் தெரியுமா? என நடிகர் ராஜேஷ் பேட்டி ஒன்றில் பேசியதை ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் உடன் ராஜேஷ்: கமல்ஹாசன் நடித்த அவள் ஒரு தொடர்கதை படத்தில் சிறு வேடத்தில் நடித்துத்தான் சினிமாவிலேயே அறிமுகமானார் ராஜேஷ். சத்யா, மகாநதி மற்றும் விருமாண்டி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். 1982ம் ஆண்டு வெளியான தனிக்காட்டு ராஜா படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்திருந்தார் ராஜேஷ். அதன் பின்னர், தாய் வீடு படத்தில் நடித்தார். கமல்ஹாசன் உடன் நடித்தது போல ரஜினிகாந்த் உடன் பல படங்களில் ராஜேஷ் தொடர்ந்து நடிக்காத நிலையிலும் ரஜினியுடன் நல்ல நட்பை பாராட்டி வந்தார்.
ரஜினிகாந்தின் நல்ல உள்ளம்: நடிகராக இருந்த ராஜேஷ் ரியல் எஸ்டேட் பிசினஸிலும் ஜாம்பவானாக திகழ்ந்தார். கே கே நகரில் சினிமா ஷூட்டிங்கிற்காக வீடு கட்டி முதன்முதலில் விட்டவரும் ராஜேஷ் தான். எம்ஜிஆர் தான் அந்த இல்லத்தை திறந்து வைத்தார். பல்வேறு நடிகர்கள் குறித்து பல நல்ல விஷயங்களையும் கருத்துக்களையும் யூடியூப் பேட்டிகளில் பேசி வந்த ராஜேஷ், ரஜினிகாந்தின் நல்ல உள்ளம் குறித்தும் பேசிய வீடியோ ஒன்று தற்போது ராஜேஷுக்கு சூப்பர் ஸ்டார் இரங்கல் தெரிவித்த நிலையில், தீயாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
வச்சக் கண்ணு வாங்காம பார்ப்பார்: ரஜினி சாரிடம் இருக்கும் ஒரு நல்ல குணமே அவருடன் யாராவது பேசினால் ஒரு விரலை நெற்றியில் அழுத்தி வைத்துக் கொண்டு அந்த நபர் பேசுவதை வச்சக் கண்ணு வாங்காம உன்னிப்பாக பார்ப்பார். நான் ஒரு முறை அவருடன் ஒரு மணி நேரம் பேசியிருக்கிறேன், ஒரு முறை 3 மணி நேரம் பேசியிருக்கிறேன். அப்படியே பார்ப்பார். அந்தளவுக்கு மற்றவர்கள் என்ன பேசுறாங்க என்பதற்கு மதிப்புக் கொடுத்தும் கேட்கும் நல்ல மனிதர் என்றார்.
இருமின உடனே: எப்போதும் எனக்கு பேசும் போது இருமல் வராது. அன்று கொஞ்சம் உடல்நலக்குறைவு பேசிக் கொண்டிருந்த போது திடீரென இருமிவிட்டேன். இருமிய உடனே சட்டென எழுந்து நின்று என் அருகில் தான் தண்ணீர் இருந்தது. அது கூட எனக்குத் தெரியவில்லை. அதை எடுத்து உடனடியாக கொடுத்தார். ஆசுவாசப்படுத்தினார். என் திருமண நாள் அன்று சந்திக்க முடியுமா என்றேன், வாங்க பார்க்கலாம் என்றார். மனைவியுடன் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பாபா முத்திரை போட்ட ஒரு பவுன் டாலரை பரிசாக வழங்கினார். வீட்டில் இருந்து கிளம்பும் போது மாடிப்படி இறங்கி வாசல் வரை வந்து வழியனுப்பினார். பொதுவாக பிரபலங்கள் கிளம்பும் போது வணக்கம் சொல்லிவிட்டு அவங்க வேலையை பார்க்க ஆரம்பித்துவிடுவாங்க, ஆனால், ரஜினிகாந்த் அப்படி இல்லை என்றார். இப்படியெல்லாம் அடுத்தவர்களின் நல்ல பண்புகளை பற்றி பேசிய பண்பான மனிதர் மறைந்து விட்டார். ரஜினிகாந்த் தனது நண்பர் மறைவை அறிந்து வேதனையில் வாடி வருகிறார்.


Click it and Unblock the Notifications











