அஜித்தின் தீனா ஹவுஸ்ஃபுல்.. விஜய் செய்த தில்லாலங்கடி வேலை இதுவா?.. இப்படியெல்லாமா செஞ்சிருக்காங்க
சென்னை: அஜித்தும், விஜய்யும் தமிழ் சினிமாவின் பெரிய ஹீரோக்கள். இரண்டு பேருமே கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில்தான் நடிப்பதற்கு சினிமாவுக்குள் வந்தார்கள். இருவரும் வெற்றிகள் மற்றும் தோல்விகளை சரி சமமாக பார்த்திருக்கிறார்கள். இப்போதைக்கு விஜய் அரசியல் பாதையிலும், அஜித் கார் ரேஸிலும் கவனத்தை செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இரண்டு பேரும் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் எதிரெதிர் துருவங்களாக இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு பிறகு தமிழ் சினிமா சந்தித்த மிகப்பெரிய போட்டி என்றால் அது அஜித் - விஜய்தான். யார் படம் ஹிட்டாகிறது என்பதில் தொடங்கி; எழுதும்போது யாருடைய பெயர் முதலில் போடப்படுகிறது என்பதுவரை அத்தனையையும் அவர்களது ரசிகர்கள் உற்று கவனிப்பார்கள். இரண்டு பேரின் படங்களும் ஒரே நாளில் ரிலீஸானால் போதும்; அன்றைய தினம் போர்க்களம் போன்று தியேட்டர்கள் காட்சியளிக்கும் கட் அவுட்டுகளில் தொடங்கி, வண்டி பார்க்கிங் வரை அன்றைய தினம் சண்டை ஏற்படும்.

சரி சமமான பலம்: இரண்டு பேருமே ரசிகர்களில் சமமான பலத்தையே பெற்றிருக்கிறார். அதேபோல் வெற்றிகள் மற்றும் தோல்விகளின் அளவுகளிலும் ஒன்றாகவே இருக்கிறார்கள். இருவரும் ஒரே காலகட்டத்தில்தான் நடிக்க வந்தார்கள். ஏற்கனவே ராஜாவின் பார்வையிலே படத்தில் சேர்ந்து நடித்தார்கள். அதற்கு பிறகு நேருக்கு நேர் படத்தில் சில நாட்கள் நடித்தார்கள். சில காரணங்களால் அஜித் விலகிவிட; சூர்யா உள்ளே வந்தார். அந்தப் படத்துக்கு பிறகு அஜித்தும், விஜய்யும் சேர்ந்தே நடிக்கவில்லை. யாரும் அப்படி ஒரு முயற்சியையும் எடுக்கவில்லை.
இரண்டு பேரின் பயணம்: இரண்டு பேரும் இப்போது வெவ்வேறு பாதைகளில் தங்களது பயணத்தை தொடங்கியிருக்கிறார்கள். அரசியல் களத்தில் விஜய் சுற்றி சுழன்றுவருகிறார். ஏகப்பட்ட பிரச்னைகளை அவர் சந்திக்கவும் செய்திருக்கிறார். அத்தனையையும் கடந்து தமிழ்நாடு அரசியல் தளத்தில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற கேள்வி இருக்கிறது. அஜித்தோ முழுக்க முழுக்க கார் ரேஸில் கவனத்தை செலுத்திவருகிறார். உலகத்தின் பல நாடுகளுக்கு சென்று பந்தயங்களில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றுவருவது குறிப்பிடத்தக்கது.
பி.டி.செல்வக்குமார் பேட்டி: இந்நிலையில் அஜித்தின் தீனா படமும், விஜய்யின் ஃப்ரெண்ட்ஸ் படமும் ஒரே காலத்தில்தான் ரிலீஸாகின. அப்போது நடந்த சில சம்பவங்கள் பற்றி விஜய்யின் முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வக்குமார் பேசியிருக்கும் விஷயங்கள் அதிர்ச்சியை கிளப்பியிருக்கின்றன. அவர் கொடுத்த பேட்டியில், "தீனா முழுக்க முழுக்க ஆக்ஷன் படம். ஃப்ரெண்ட்ஸோ ஜனரஞ்சகமான படம். அப்போதைக்கு விஜய் படம் என்றால் தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் போர்டு வைக்க வேண்டும் என வெறிப்பிடித்து இருந்தோம். அப்போது இரண்டு பேரின் படங்களும் மோதுகின்றன.
கை காசை போட்டு டிக்கெட்: இரண்டு படங்களுமே நன்றாகத்தான் போயின. ஆனாலும் ரேஸில் தீனா கொஞ்சம் முன்னாடி இருந்தது. ரோகிணி, உதயம் தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பேன். அப்போது 50 டிக்கெட்டுகள் விற்காமல் இருந்தால்; அந்த டிக்கெட்டுகளை என் கை காசை போட்டு வாங்கிவிடுவேன். உடனே தியேட்டர்காரர்களிடம், ஹவுஸ் ஃபுல் போர்டு வையுங்கள் என்று சொல்வேன். ஏனென்றால் முதலில் நம் ஹவுஸ்ஃபுல் போர்டு வைத்தால்தான் நாம் ரேஸில் முந்துகிறோம் என அர்த்தம். அப்படி ஒரு தாக்கம் எனக்குள் இருந்தது. அவருக்காக எனது மனமெல்லாம் படபடவென்று அடிக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications















