டாப் ஸ்டார் பிரசாந்த்தின் பிறந்தநாள்.. தந்தை கொடுத்த காஸ்ட்லி கிஃப்ட் எப்போ தெரியுமா?
சென்னை: கோலிவுட்டின் டாப் ஸ்டார் என்று அழைக்கப்படும் பிரசாந்த் நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்த அந்தகன் படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது விஜய்யுடன் சேர்ந்து நடித்த GOAT படத்திலும் பிரசாந்த்தின் நடிப்புக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர். இதன் காரணமாக அவரும் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார். அடுத்ததாக அவர் ஹரி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். மீண்டும் அவர் ஃபுல் ஃபார்முக்கு வந்திருப்பது அவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வந்தவர். தியாகராஜனின் மகனான இவர் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டானது. அழகும், திறமையும் ஒருசேர இருந்ததாலும்; முதல் படமே மெகா ஹிட்டானதாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவருக்கு தொட்டதெல்லாம் ஹிட் படங்களாக அமைந்தன. இதனால் பல ஊர்களில் பிரசாந்த்துக்கென்று ரசிகர் மன்றங்கள் முளைக்கத் தொடங்கின.
திருடா திருடா: அதனையடுத்து பாலுமகேந்திராவின் இயக்கத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த பிரசாந்த் மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா படத்தில் நடித்தார். பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். குறிப்பாக இப்போது டாப் ஸ்டார்களாக இருக்கும் விஜய், அஜித் ஆகியோரைவிடவும் உயர்ந்த நிலையில் 90களில் இருந்தவர் பிரசாந்த். சொல்லப்போனால் அவருக்கு நேரமும், சூழ்நிலையும் ஒழுங்காக இருந்திருந்தால் இன்று விஜய்யோ, அஜித்தோ இருவரின் ஒரு இடத்தை அவர்தான் அலங்கரித்திருப்பார்.
சறுக்கல்: இப்படி உச்சத்தில் சென்றுகொண்டிருந்த பிரசாந்த்துக்கு சில சறுக்கல்கள் ஏற்பட்டன. அதற்கு முக்கிய காரணம் அவரது மனைவிக்கும் அவருக்கும் நடந்த பிரச்னைதான் என கூறப்படுகிறது. மேலும் அந்த பிரச்னையில் கவனம் செலுத்தியதால் சினிமாவில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை எனவே வாய்ப்புகள் குறைந்துபோயின என்ற கூற்றும் உண்டு. மனைவி பிரச்னை மட்டுமின்றி பிரசாந்த்தின் வாழ்க்கையில் தந்தையின் தலையீடு அதிகம் இருந்ததாலும் பிரசாந்த் பாதியிலேயே காணாமல் போய்விட்டார் என்றும் திரைத்துறையில் பேச்சு உண்டு.

ரீ என்ட்ரி: பல வருடங்கள் ஒதுங்கியிருந்த பிரசாந்த் அந்தகன் ஹீரோவாக ரீ என்ட்ரி கொடுத்தார். அவரது தந்தை தியாகராஜன் இயக்கியிருந்த அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே GOAT படத்தில் நடிப்பதற்கும் கமிட்டானார். ஒருபக்கம் வெங்கட் பிரபு - விஜய் முதன்முறையாக கூட்டணி அமைத்தது எதிர்பார்ப்பை எகிற வைக்க; மறுபக்கம் விஜய்யுடன் பிரசாந்த் நடிப்பதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. கோட் படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் பிரசாந்த்தின் நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸே இருந்தது.
இன்று பிறந்தநாள்: சூழல் இப்படி இருக்க பிரசாந்த் இன்று தனது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி பலரும் அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தார்கள். மேலும் பத்திரிகையாளர்கள் மற்றும் தனது ரசிகர்களையும் சந்தித்தார். மேலும் பிறந்தநாள் அன்று சர்ப்ரைஸாக ஒரு அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. அதன்படி பிரசாந்த்தின் 55ஆவது படத்தை இயக்குநர் ஹரி இயக்கவிருக்கிறார். ஏற்கனவே பிரசாந்த்தை ஹீரோவாக வைத்து தமிழ் படத்தை இயக்கிதான் ஹரி இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை தந்த கிஃப்ட்: இந்நிலையில் பிரசாந்த்தின் பழைய வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது கடந்த பிறந்தநாளின்போது தன்னுடைய மகனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிஎம்டபிள்யூ கார் ஒன்றை தியாகராஜன் சர்ப்ரைஸாக கிஃப்ட் செய்தார். பிரசாந்த்தின் ஜோய் ஆலுக்காஸ் கட்டடத்தில் வைத்து அந்தப் பரிசை கொடுத்தார் அவர். இதனை சற்றும் எதிர்பார்க்காத பிரசாந்த்தோ இது தனக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸாக அமைந்திருக்கிறது என்று சொல்லி தந்தையிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு அந்த காரில் ஜாலி ரெய்டும் சென்றார். அதுதொடர்பான வீடியோதான் இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பரவிவருகிறது.


Click it and Unblock the Notifications











