மனோஜ் பிறந்த நேரம்..பாரதிராஜாவுக்கு வந்த முதல் பட வாய்ப்பு..மகன்தான் அதிர்ஷ்டம்..நெகிழ்ந்த இயக்குநர்
சென்னை: கோலிவுட் வரலாற்றில் தவிர்க்கவே முடியாத இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. அவர் இயக்கிய ஒவ்வொரு படமும் இன்றுவரை க்ளாசிக்காக கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. பலர் சினிமாவுக்கு வருவதற்கு ரோல் மாடலாக இருந்தவர் பாரதிராஜா. அவர் தனது மகன் மனோஜையும் ஹீரோவாக தாஜ் மஹால் படத்தில் அறிமுகப்படுத்தினார். சூழல் இப்படி இருக்க மாரடைப்பு காரணமாக தனது 48ஆவது வயதில் நேற்று உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலரையும் உச்சக்கட்ட சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
16 வயதினிலே படத்தில் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா செட்டுக்குள் இருந்த தமிழ் சினிமாவை அவுட் டோருக்கு அழைத்து சென்ற பெருமைக்கு சொந்தக்காரர். அவர் படம் இயக்க வந்த பிறகுதான் கிராமங்களிலிருந்து பலர் சென்னைக்கு திரைப்பட கனவோடு தைரியமாக படையெடுக்க ஆரம்பித்தனர். அதேபோல் அவரிடம் உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜ், மணிவண்ணன், மனோபாலா உள்ளிட்டோர் இந்திய அளவில் பிரபலமான இயக்குநர்களாகவும், நடிகர்களாகவும் திகழ்ந்தவர்கள்.
பாரதிராஜா போட்ட விதை இதுதான்: சினிமா என்றால் செட்தான் என இருந்த விதியை உடைத்து கிராமத்தின் வரப்புகளுக்கு கூட்டி சென்றவர். பாரதிராஜாவின் கண்கள் ஷாட் சப்பாணியை ஹீரோவாக்கிய பிறகுதான் கிராமங்களின் கண் சினிமா மீது நிலைக்குத்தி நின்றது. அவரது ஒவ்வொரு படமும் மேல்தட்டு மனிதர்களின் கண்களிலிருந்து மறைந்துபோன கிராமத்து மனிதர்களையும், அவர்களின் குணாதிசயங்களையும் காட்சிப்படுத்தின. சினிமா மட்டுமின்றி சீரியல் இயக்கியும் தனது தனித்துவமான முத்திரையை பதித்தார்.
பாரதிராஜாவின் மகன் மனோஜ்: பாரதிராஜா 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர். அவரது ஒவ்வொரு படமும் இன்றுவரை கல்ட் க்ளாசிக்காக திகழ்பவை. அவர் கடைசியாக 2020ஆம் ஆண்டு ஓம் (மீண்டும் ஒரு மரியாதை) என்ற படத்தை இயக்கினார். அதன் பிறகு படங்கள் எதுவும் இயக்காமல் நடிகராக பல படங்களில் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளிவருகிறார். இதற்கிடையே அவர் தனது மகன் மனோஜை தாஜ் மஹால் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

மனோஜ் உயிரிழப்பு: தாஜ் மஹால் தொடங்கி ஏராளமான படங்களில் நடித்த மனோஜுக்கு சினிமாவில் பெரிய பிரேக் எதுவும் கிடைக்கவில்லை. அஹ்டனைத் தொடர்ந்து மார்கழி திங்கள் என்கிற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படமும் சரியாக போகவில்லை. இப்படிப்பட்ட சூழலில் சில நாட்களுக்கு முன்பு அவருக்கு இதய அறுவை சிகிச்சை முடிந்ததை அடுத்து தனது வீட்டில் ஓய்வெடுத்தார். நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
பணம் இல்லாமல் தவித்த பாரதிராஜா: இந்நிலையில் மனோஜ் பிறந்தபோது பாரதிராஜாவின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் குறித்து பார்க்கலாம். அதாவது மனோஜ் 1976ஆம் ஆண்டு பிறந்தார். அப்போது பாரதிராஜா இயக்குநராக எல்லாம் அறிமுகமாகவில்லை. அந்த சமயத்தில் அவரது தம்பி ஜெயராஜ் நல்ல வேலைக்கு சென்றுவிட்டார். பாரதியோ இயக்குநராகும் வாய்ப்பை தேடிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில்தான் மனோஜ் பாரதிராஜாவின் சொந்த ஊரில் பிறந்தாராம்.
வளையல் அடகு: அந்த செய்தி பாரதிராஜாவுக்கு தெரியவந்ததாம். அப்படிப்பட்ட நேரத்தில்தான் 16 வயதினிலே படத்தை தயாரித்த ராஜ்கண்ணன் பாரதிராஜாவை சந்திக்க வந்து; நான் பணம் ரெடி செய்துவிட்டேன். படத்தை ஆரம்பிக்கலாம் என்று சொல்ல; தனக்கு மகன் பிறந்த விஷயத்தை பாரதிராஜா சொல்ல அங்கிருந்தவர்கள் சந்தோஷமடைந்தார்கள். பிறகு மகனை பார்க்க ஊருக்கு செல்லலாம் என்று நினைத்தால் செல்வதற்கு பணமில்லை. எங்கெங்கோ அலைந்தும் பணம் கிடைக்காத சூழலில்; பாரதிராஜாவின் நண்பர் ஆறுமுகம் என்பவர் தனது மனைவியின் வளையலை அடகு வைத்து பணம் கொடுத்தாராம். அந்தப் பணத்தில்தான் பாரதிராஜா மனோஜை பார்க்க சென்றாராம். அதுமட்டுமின்றி மனோஜ் பிறந்த நேரத்தில்தான் தனது முதல் பட வாய்ப்பு கிடைத்ததால் மகன்தான் தனது அதிர்ஷ்டம் என்று நினைப்பாராம் பாரதி. அப்படிப்பட்ட மகனைத்தான் இப்போது இழந்து நிற்கிறார் அவர்.


Click it and Unblock the Notifications











