ரஜினியை பலமுறை திட்டிய பாரதிராஜா.. உடனே அவரது ரியாக்ஷன் என்ன தெரியுமா?.. இவ்வளவு ஜென்டில்மேனா?
சென்னை: ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளங்களி ஒருவர். அவருக்கு இந்த நாடு மட்டுமின்றி ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். 75 வயதானாலும் இன்னமும் அவர் சுறுசுறுப்பாக நடித்துக்கொண்டிருப்பதை பார்க்கும் ரசிகர்கள் மிகப்பெரிய ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறார். ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரைத்துறையினருமே அந்த ஆச்சரியத்தில்தான் இருக்கிறார்கள். அவர் இப்போது கூலி படத்தில் நடித்து முடித்துவிட்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2வில் நடித்துவருகிறார். இந்த இரண்டு படங்கள் மீதும் அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் வைத்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் என்ற பெயரை சொன்னாலே போதும் அனைவரும் ஈர்க்கப்படுவார்கள். இவர் பெயருக்குள்ளே காந்தம் உண்டு உண்மைதானடா என்று வைரமுத்து பாட்ஷா படத்தில் எழுதியது அப்படியே ரஜினிக்கு பொருந்தும். பல கஷ்டங்களை, விமர்சனங்களை, கிண்டல்களை, அலட்சியப்படுத்துதலை சந்தித்தவர் அவர். அந்த நிலைமையில் அவர் இருக்கும்போதெல்லாம் எப்படியாவது இதே திரைத்துறையில் மிகப்பெரிய நடிகராக வந்துவிட வேண்டுமென்பதுதான் அவருக்கு ஒரே எண்ணமாக இருந்தது. அதற்காக அவர் கடுமையாக உழைத்தார். முதலில் வில்லன் கதாபாத்திரம் பிறகு குணசித்திர வேடம் பிறகு கமலுடன் இணைந்து நடிப்பது என இருந்த அவர்; கமலின் அட்வைஸை கேட்டு தனியாக நடிக்க ஆரம்பித்தார்.
செம கெத்து காண்பித்த ரஜினி: கமலை விட்டு அவர் தனியாக நடிக்க ஆரம்பித்த புதிதில் ரஜினிக்கு எதிராக விமர்சன அம்புகள் ஏவப்பட்டன. முக்கியமாக அவரது தமிழ் உச்சரிப்பு, நிறம், கண்கள் என எதையும் விட்டுவைக்கவில்லை. ஆனால் தன்னைப் பற்றி மைனஸாக கூறப்பட்ட விஷயங்களையே தன்னுடைய ப்ளஸ்ஸாக மாற்றினார் அவர். கமல் ஹாசன் போல் பரிசோதனை முயற்சிகள் எதுவும் செய்யாமல்; கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்தார் அவர். கமர்ஷியல் படங்கள் என்றாலும் சுலபமில்லை.அதில் தன்னால் முடிந்த அளவு வேரியேஷன்களை காண்பித்தார். இடையிடையே முள்ளும் மலரும், ஜானி, ஆறிலிருந்து அறுபதுவரை என தனது நட்ப்புக்கும் தீனி போட்டுக்கொண்டார் அவர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: அவர் மிகச்சிறந்த நடிகராக இருந்தாலும் தனது முழு கவனத்தையும் கமர்ஷியல் படங்களிலேயே செலுத்த ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த பல படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. ஒருகட்டத்தில் கமல் ஹாசனைவிடவும் ரஜினியின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தது என்பதுதான் உண்மை. தமிழ்நாடு முழுவதும் ரஜினி ரஜினி என்று பெயர் ஒலிக்க ஆரம்பித்தது. மேலும் அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் கலைப்புலி தாணு கொடுக்க; அதனை ரசிகர்கள் முழு மனதோடு ஏற்றுக்கொண்டார்கள். இன்றுவரை அந்த சூப்பர் ஸ்டார் நாற்காலி ரஜினி வசம்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பலர் முயன்றும் அதனை அவரிடமிருந்து பறிக்க முடியவில்லை.

சறுக்கிய ரஜினிகாந்த்: தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்த அவருக்கு பாபா பலத்த அடியை கொடுத்தது. அந்தப் படத்தின் படுதோல்வியை கண்டு சினிமாவில் இருக்கும் சில ஹீரோக்கள் பார்ட்டி வைத்து கொண்டாடியதாகவும் அந்த சமயத்தில் ஒரு தகவல் ஓடியது. ஆனால் ரஜினி எதற்கும் கவலைப்படவில்லை. கிட்டத்தட்ட 2 வருடங்கள் பிரேக் எடுத்து சந்திரமுகியில் நடித்தார். படம் 800 நாட்களுக்கும் மேல் ஓடியது. அதேபோல் சில வருடங்களுக்கு முன்பு தர்பார், அண்ணாத்த தோல்வியடைந்தது. அதனையடுத்து அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 700 கோடி ரூபாய்வரை உலகம் முழுவதும் வசூல் செய்தது. இப்படி எப்போதெல்லாம் விழுகிறாரோ உடனே எழுந்துவிடும் வல்லமை படைத்தவர் அவர்.
ரஜினியின் கேரக்டர்: ரஜினியை பொறுத்தவரை தனது மனதில் என்ன நினைக்கிறாரோ அதனை பட்டென்று யாருக்கும் அஞ்சாமல் பேசிவிடுவார். அதன் காரணமாக அவர் ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்திருக்கிறார். முக்கியமாக ஜெயலலிதாவுடன்கூடவே அவருக்கு பிரச்னை வெடித்ததெல்லாம் தனி கதை. அதேசமயம் எவ்வளவுக்கு எவ்வளவு கோபப்படுவாரோ அதே அளவுக்கு பலரிடமும் நட்பாக பழகக்கூடியவரும் அவர்தான். அந்தவகையில் அவர் தமிழ் சினிமாவில் ஈகோ பார்க்காமல் எத்தனையோ பேருடன் பேசியிருக்கிறார். அதுமட்டுமின்றி தன்னை தாக்கி பேசியவர்களைகூட அவர் பெரிதாக மீண்டும் தாக்கி பேசியதில்லை. பாரதிராஜாவை பொறுத்தவரை ரஜினியை பல முறை தாக்கி பேசியிருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் அதற்கு எந்த ரியாக்ட்டும் செய்ததில்லை.

ட்ரெண்டாகும் பாரதிராஜாவின் பேச்சு: இந்நிலையில் ரஜினிகாந்த் பற்றி பாரதிராஜா பேசியிருக்கும் வீடியோ ஒன்று திடீரென ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது ரஜினிகாந்த்தின் 70ஆவது பிறந்தநாள் விழாவில் பேசிய அவர், "நான் இங்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்காக வரவில்லை. ஒரு சூப்பர் மனிதர் ரஜினிக்காக வந்திருக்கிறேன். சூப்பர் மனிதரை காண்பதுதான் இப்போது அரிதாகிவிட்டது. ரஜினிகாந்த் ஒரு சிறுவனைக்கூட தரக்குறைவாக பேசியதே இல்லை. கோபத்தில்கூட அடுத்தவரை காயப்படுத்தமாட்டார். திட்டினால்கூட கௌரவமாகத்தான் அடுத்தவரை திட்டுவார். அவரும் நானும் பல வருடங்களாக நண்பர்கள்.
முதல் சந்திப்பு: நான் ரஜினிகாந்த்தை 16 வயதினிலே பட சமயத்தில்தான் முதன்முறையாக சந்தித்தேன். ஒரு பட பூஜைக்கு ரஜினிகாந்த் ஒரு மோட்டார் பைக்கில் பின்னால் அமர்ந்துவந்தார். நான் அப்போதுதான் பரட்டை என்கிற கேரக்டருக்கு ஆள் தேடிக்கொண்டிருந்தேன். ரஜினியை பார்த்ததுமே அந்த கேரக்டருக்கு நான் அவரை ஃபிக்ஸ் செய்துவிட்டேன். பிறகு அவரை சந்தித்து படம் பற்ற் பேசினேன். அவர் தனது சம்பளமாக முதலில் 5000 ரூபாய் சொன்னார். நான் ஒத்துக்கொள்ளவில்லை. பிறகு படிப்படியாக குறைத்து 3000 ரூபாய்க்கு ஓகே சொன்னேன். அதிலும் 2500 ரூபாய்தான் அவருக்கு கொடுத்தேன். இன்னும் 500 ரூபாய் பாக்கி இருக்கிறது.

பல முறை தாக்கி பேசியிருக்கிறேன்: ரஜினிக்கும் எனக்கும் ஏகப்பட்ட முரண்பாடுகள் வந்திருகின்றன. பலமுறை அவரை நான் தாக்கி பேசியிருக்கிறேன். அவர் உடனே என்ன தலைவரே என்று கேட்பார். நான் அதற்கு அது வேற இது வேற ரஜினி என்று சொல்வேன். நெய்வேலி விவகாரத்தில் நான் வேறு யாரையாவது ரஜினியை பேசிய அளவு பேசியிருந்தேன் என்றால் வாழ்நாள் முழுவதும் என்னுடன் சண்டையில் இருந்திருப்பார். ஆனால் ரஜினிகாந்த் அப்படி இல்லை. அவரை நாம் கீறியிருந்தால்கூட அதை உடனடியாக மறந்துவிடுவார்.
ரஜினியை பொறுத்தவரை எந்த நிகழ்ச்சியிலும் 15 நிமிடங்களுக்கு மேல் இருக்கமாட்டார். ஆனால் ஃபிலிம் இன்ஸ்ட்டியூட்டை அவர் திறந்துவைத்தபோது என்னுடன் ஒன்றரை மணி நேரம் இருந்தார். அவரிடம் ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது. அதனால்தான் எல்லோரையும் அவர் ஈர்க்கிறார்" என்றார். முன்னதாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் அண்மையில் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ரஜினிகாந்த் நேரிலும் வரவில்லை சமூக வலைதளங்கள் மூலமும் இரங்கல் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











