தனுஷ் எதையும் செய்யுறது இல்லை.. எல்லாம் அவரை தேடி வருது.. ஓபனாக சொல்லிவிட்ட தந்தை
சென்னை: தனுஷ் நடிப்பில் அடுத்ததாக குபேரா, இட்லி கடை ஆகிய இரண்டு படங்கள் வரவிருக்கின்றன. அதேபோல் அவர் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் இந்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது. இவை தவிர்த்து அவர் கைவசம் ஏராளமான படங்கள் இருக்கின்றன. முக்கியமாக ஹாலிவுட் படம் ஒன்றிலும் நடிக்கவிருக்கிறார் அவர். இந்தச் சூழலில் அவர் குறித்து அவரது தந்தை கஸ்தூரி ராஜா பேசியிருக்கும் விஷயம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
தனுஷ் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றிருப்பவர். இதுவரை எந்த பட்டத்தையும் அவர் தனது பெயருக்கு முன் போட்டுக்கொண்டது இல்லை என்றாலும் நல்ல நடிகர் என்ற டேக் அவர் பெயரோடு இருக்கிறது. நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது, படங்களை தயாரிப்பது என ஃபுல் ஃபார்மில் இருக்கிறார் அவர். அவரது நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அவரது 50ஆவது படமான அதனை அவரே இயக்கவும் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

படம் தோல்வி: மிகப்பெரிய எதிர்பார்ப்பை அந்தப் படத்தின் மீது அவரும், அவரது ரசிகர்களும் வைத்திருந்தார்கள். குறிப்பாக பவர் பாண்டி படத்தை இயக்கி கவனம் ஈர்த்தது போல் அந்தப் படத்தின் மூலமும் கவனம் ஈர்ப்பார் என்று நம்பிக்கையோடு இருந்தார்கள். ஆனால் வடசென்னை, வானத்தை போல போன்ற படங்களின் கலவைதான் ராயன் என்று பெயர் எடுத்தது. தோல்வியடைந்தது மட்டுமின்றி கடுமையான ட்ரோலையும் அந்தப் படம் சந்தித்து வசூல் ரீதியாகவும் நஷ்டத்தை சந்தித்தது என்பது நினைவுகூரத்தக்கது.
அடுத்த படம்: ராயன் படம் தோல்வியடைந்தாலும் அடுத்ததாக வரிசையாக தனுஷுக்கு படங்கள் வருகின்றன. சேகர் கம்முல்லா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; தற்போது இட்லி கடை படத்தை இயக்கி, நடித்துவருகிறார். மேலும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம், ஹிந்தியில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு படம், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் என படு பிஸியான லைன் அப்பை வைத்திருக்கிறார் தனுஷ். அதுமட்டுமின்றி அவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் இந்த மாதம் ரிலீஸாகிறது.
கஸ்தூரி ராஜா பேட்டி: இந்நிலையில் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், "தனுஷ் எப்போதுமே ஒரு கடவுளின் குழந்தைதான். எனது மனைவி ஊரான சங்கராபுரத்திலிருந்து என்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்தேன். நான் சினிமாவுக்காக கஷ்டப்படவே இல்லை. கடவுள்தான் என்னை கொண்டு போய் விசு சாரிடம் நிறுத்தினார். அதன் காரணமாக கஷ்டத்தை எதுவும் நான் அனுபவிக்கவில்லை. நான் இயக்குநரானதற்கு பிறகும்கூட ஒரு 50 வயது மனிதர் வாய்ப்பு கேட்டார்.
தனுஷ் பற்றி: இப்போதும் அந்த மனிதர் வாய்ப்புதான் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால் என்னை கடவுள் அந்த மாதிரி விடவில்லை. அதேபோல்தான் தனுஷும். தனுஷாக எதையும் தேர்ந்தெடுப்பது இல்லை. எல்லாம் அவரை தேடி தானாகவே வருகிறது. ஹிந்தி பட வாய்ப்பு, ஹாலிவுட் பட வாய்ப்பும் அப்படித்தான் வந்தது. நான் இதை மமதையில் சொல்லவில்லை. தனுஷ் எப்போதும் ஒரு கடவுளின் குழந்தைதான். ஆனால் அவரிடம் கேட்டால் அப்பா, அம்மா கொடுத்த ஆசீர்வாதம் என்று சொல்வார். உண்மையில் நேரம் தவறாமையும் கடின உழைப்பும்தான் தனுஷின் வெற்றிக்கு காரணம்" என்றார்.


Click it and Unblock the Notifications











