தம்பி கொஞ்சம் மரியாதை கொடுங்க.. சிவகார்த்திகேயனிடம் ஓபனாக சொன்ன சூரி.. அப்படி என்ன ஆச்சு?
சென்னை: திரைத்துறையில் சிவகார்த்திகேயனும், சூரியும் நெருக்கமான பழக்கத்தில் இருக்கிறார்கள். எஸ்கேவை சூரி அன்புடன் தம்பி என்றுதான் அழைப்பார். உடன் பிறவா சகோதரர்கள் போன்றுதான் அவர்கள் பழகிவருகிறார்கள். இரண்டு பேரும் இணைந்து ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்கள். சூரி ஹீரோவாக நடித்த கொட்டுக்காளி படத்தை எஸ்கேதான் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூரி சினிமாவில் இப்போது இருக்கும் நிலைமை அவருக்கு அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. திரைத்துறையில் கிடைத்த வேலைகள் எல்லாம் செய்துகொண்டிருந்த அவருக்கு; வெண்ணிலா கபடி குழு திரைப்படம் பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதனையடுத்து காமெடி ஆக்டர் வரிசையில் முன்னணிக்கு வந்த அவர்; இப்போது ஹீரோவாக கலக்கிக்கொண்டிருக்கிறார். இதுவரை அவர் ஹீரோவாக நடித்த படங்களில் மாமன் மட்டும்தான் சுமார் ஹிட். மற்றவை எல்லாம் சூப்பர் ஹிட்.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சி: அதேபோல் சிவகார்த்திகேயனும் சின்னத்திரையில் தோன்றி பிறகுதான் சினிமாவுக்கு வந்தார். அவர் உள்ளே வந்தபோது அவரை கடுமையாக பலரும் கிண்டல் செய்தார்கள். இருப்பினும் தனக்கென இருக்கும் திறமை வளர்த்துக்கொண்டு அதை சரியாக வெளிப்படுத்தியதால் இப்போது டாப் 5 கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவராக விளங்கிவருகிறார். இப்போது அவர் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். மதராஸி படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

எஸ்கேவுடனான உறவு: இப்படி இரண்டு பேருமே கஷ்டத்தையும் கிண்டலையும் சந்தித்து பெரிய ஸ்டார்களாக உருவாகியிருக்கிறார்கள். மேலும் எஸ்கே வளர்ந்துவந்த சமயத்தில் அவரது படங்களில் சூரிதான் காமெடி ஆக்டர். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என இரண்டு பேரும் இணைந்து சூப்பர் ஹிட் படங்களில் கலக்கியிருக்கிறார்கள். இவர்களது காம்போ ரசிகர்களாக கொண்டாடப்பட்டது. எனவே அவர்களுக்கிடையேயான உறவு இயல்பிலேயே வலுவாக தொடங்கிவிட்டது.
உடன்பிறவா சகோதரர்கள்: சொல்லப்போனால் இரண்டு பேரும் உடன் பிறவா சகோதரர்கள் போல்தான் பழகுவார்கள். மதுரையில் சூரி ஆரம்பித்த அம்மன் ஹோட்டலை எஸ்கேதான் திறந்துவைத்தார். மதுரைக்கு செல்லும்போதெல்லாம் தவறாமல் அம்மன் ஹோட்டலுக்கு சிவகார்த்திகேயன் விசிட் அடித்துவிடுவார். தொழில்ரீதியாக பொறுத்தவை சூரியை வைத்து கொட்டுக்காளி படத்தையும் எஸ்கே தயாரித்திருக்கிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயனும், சூரியும் பேசும் வீடியோ ஒன்று அதிகம் ஷேர் ஆகிவருகிறது.
என்ன வீடியோ?: அதாவது சில வருடங்களுக்கு முன்பு தனியார் சேனலில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் சிவகார்த்திகேயன். அப்போது சூரி அந்த நிகழ்ச்சிக்கு ஃபோனில் தொடர்புகொண்டு குரலை கொஞ்சம் மாற்றி நான் ஒரு டான்ஸ் மாஸ்டர் பேசுகிறேன் என சொல்ல; சிவாவோ அது சூரிதான் என அசால்ட்டாக கண்டுபிடித்துவிடுகிறார். இதனை எதிர்பார்க்காத சூரியோ, 'என்ன ப்பா இவ்வளவு கஷ்டப்பட்டு மிமிக்ரி செய்கிறேன். உடனே கண்டுபிடிச்சிட்டியே' என சொல்கிறார்.
மரியாதை கொடுங்க தம்பி: அதற்கு எஸ்கேவோ, 'நீங்க ஹலோனு சொல்லும்போதே கண்டுபிடிச்சிட்டேன் அண்ணா. உடனே சொல்லிட்டா நீங்கள் கஷ்டப்படுவீங்கனு 30 செகண்ட் கழிச்சு சொல்றேன்' என கூறினார். மேலும், 'இதுதான் மிமிக்ரி என்று இப்போதான் கண்டுபிடித்தேன்' என சொல்ல; அதற்கு சூரியோ, 'தம்பி கஷ்டப்பட்டு மிமிக்ரி செய்றேன். கொஞ்சம் மரியாதை கொடுங்க ப்பா' என ஜாலியாக கூறுகிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் 2 பேரும் எவ்வளவு ஜாலியாக பேசிக்கொள்கிறார்கள் என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











