Kalaignar Karunanidhi - கருணாநிதியால் தொலைந்துபோன எம்ஜிஆர் வாட்ச்.. எம்ஜிஆர் என்ன சொன்னார் தெரியுமா?
சென்னை: Kalaignar Karunanidhi Memorial Day (கலைஞர் கருணாநிதி நினைவு தினம்) தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று.
தமிழ் சமூகத்தில் கலைஞர் கருணாநிதி தனது திட்டங்களால் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தினாரோ அதே அளவு தாக்கத்தை தமிழ் சினிமாவிலும் செலுத்தியார். அவரது வசனங்கள் சமூக நீதியையும், சமத்துவத்தையும் பேசியவை. அந்த வசனங்கள்தான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பலரையும் தட்டி எழுப்பியது. குறிப்பாக பராசக்தி படத்தில் காமெடியையும், சமூக அக்கறையையும் கலந்துகட்டி கொடுத்திருப்பார்.

காங்கிரஸின் தீர்மானம்: அதன் காரணமாகவே தமிழ் சினிமாவை பராசக்திக்கு முன் பராசக்திக்கு பின் என்று பிரிக்கலாம் என பலர் கூறுவார்கள். அந்த வசனம் எப்படி அதிர்வை ஏற்படுத்தியது என்றால் அந்தப் படம் வெளியானபோது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு சென்றது. எனில் அந்த அதிர்வையும், அந்த வசனங்கள் ஏற்படுத்திய பதற்றத்தையும் எளிதாக புரிந்துகொள்ளலாம்.
சிவாஜி, எம்ஜிஆர்: கலைஞரின் வசனத்தை பேசி சிவாஜி எப்படி அடையாளப்பட்டாரோ அதேபோல்தான் எம்ஜிஆரும். அவரது வசனத்தில் நடித்துவிட்டால் போதும் என்று நினைத்த ஹீரோக்கள் பலர். குறிப்பாக வசனகர்த்தா என்ற திரையில் பெயர் வரும்போது முதன்முறையாக கருணாநிதிக்கு மட்டும்தான் ரசிகர்கள் மத்தியில் கைத்தட்டல் எழுந்தது. சிவாஜியேக்கூட ஒரு மேடையில் என்னுடைய இரண்டு வயதை தருகிறேன் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என கூறியதன் மூலம் கலைஞரையும், கலைஞரின் தமிழையும் அவர் எவ்வளவு மதித்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம்.
எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி: தற்போது தமிழ்நாட்டில் இரண்டு பெரிய கட்சிகளாக இருப்பவை திமுகவும், அதிமுகவும். இப்போது இரண்டு கட்சிகளும் இரு துருவங்களாக இருந்தாலும் திமுகவின் தலைவராக இருந்த கருணாநிதியும், அதிமுகவை நிறுவிய எம்ஜிஆரும் நெருங்கிய நண்பர்கள். சொல்லப்போனால் ஒரு தாய் வயிற்று பிள்ளை போல் பழகியவர்கள். இரண்டு பேரும் பிரிந்துவிட்டாலும்கூட ஒருவருக்கொருவர் அளவுகடந்த மரியாதையையும், பாசத்தையும் வைத்திருந்தனர். இந்தச் சூழலில் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டான நினைவு நாளையொட்டி கலைஞர், எம்ஜிஆருக்குமிடையேயான ஒரு ஃப்ளாஷ்பேக்கை பார்க்கலாம்.
கல்லக்குடி போராட்டம்: கலைஞர் கருணாநிதி எத்தனையோ போராட்டங்களை வீரியமாக செய்திருக்கிறார். அதற்காக அவர் சிறைக்கும் சென்றிருக்கிறார். அப்படி அவர் நடத்திய போராட்டங்களில் மிகப்பெரிய கவனம் ஈர்த்த போராட்டம் கல்லக்குடி போராட்டம். டால்மியாபுரம் என்பதை கல்லக்குடி என்று மாற்ற வேண்டும் என சொல்லி திமுக சார்பாக போராட்டம் நடத்தப்பட்டபோது எதை பற்றியும் யோசிக்காமல் தண்டவாளத்தில் தலை வைத்தார் கலைஞர். ரயில் அருகில் வந்தாலும் துணிச்சலோடு தலையை எடுக்காமல் படுத்திருந்தார். பிறகு கைது செய்யப்பட்டார்.

ரிலீஸ்: அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவரை ஆறு மாதங்கள் சிறையில் வைத்திருந்தனர். ரிலீஸாகி எக்மோருக்கு வரும்போது அவர் வந்த ரயிலை கருணாநிதி ரயில் வருகிறது அறிவிப்பு செய்தார்கள். கருணாநிதியை வரவேற்க பல நூறு பேர் காத்திருந்திருக்கிறார்கள். அதனால் அந்தக் கூட்டத்தில் எப்படி வெளியே செல்வது என கருணாநிதி திணறியிருக்கிறார். அப்போது அங்கே வந்த எம்ஜிஆர் எதைப்பற்றியும் யோசிக்காமல் கருணாநிதியை தூக்கி தன்னுடைய தோளில் ஏற்றி கொண்டு போயிருக்கிறார்.
அப்போது எம்ஜிஆர் அணிந்திருந்த விலையுயர்ந்த வாட்ச்சை ஒருவர் திருடிவிட்டார். வெளியே வந்து காரில் ஏறிய பிறகு எம்ஜிஆரின் கையை கவனித்த கலைஞர் என்னய்யா உன் விலையுயர்ந்த வாட்ச்ச காணும் என சொல்ல; எம்ஜிஆரோ அது போனா போயிட்டு போகுது அதைவிட விலையுயர்ந்த மனிதன்யா நீ என புகழ்ந்திருக்கிறது. அந்த விலையுயர்ந்த கலைஞரை அவரது நினைவு தினத்தில் நினைவுகூர்கிறது தமிழ் ஃபில்மிபீட்..


Click it and Unblock the Notifications











