நாம் மீண்டும் இணைவோமா?.. வெவ்வேறு திசையில் இருக்கிறோமே.. இளையராஜா பற்றி வைரமுத்து ஓபன் டாக்

சென்னை: இளையராஜாவும், வைரமுத்துவும் தமிழ் சினிமா பாடல்களில் இணைந்து செய்த மேஜிக்குகள் ஏராளம். பல பாடல்கள் இணைந்து பணியாற்றிய அவர்கள்; சில காரணங்களால் பிரிந்துவிட்டார்கள். அவர்களது பிரிவுக்கு முடிவுகட்டி எப்படியாவது சேர்த்து வைத்துவிட் வேண்டும் என பலரும் முயற்சி செய்தார்கள். ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் இளையராஜாவை பிரிந்த பிறகு வைரமுத்து எழுதியதாக ஒரு பதிவு சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

நிழல்கள் படத்தில் பாடல் எழுத வந்த வைரமுத்து முதல் பாடலிலேயே இளையராஜாவை கவர்ந்துவிட்டார். இதன் காரணமாக தொடர்ந்து அவர்கள் இரண்டு பேரும் பணியாற்றினார்கள். ஏராளமான பாடல்களில் இரண்டு பேரும் போட்டிப்போட்டு வேலை செய்து அந்தப் பாடல்களை அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தி சென்றார்கள். இதன் காரணமாக அந்தக் கூட்டணி கல்ட் க்ளாசிக் கூட்டணியாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது.

பிரிந்த ராஜா, முத்து: தொடர்ந்து பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் சில காரணங்களால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள். அதற்கு பிறகு இத்தனை வருடங்கள் ஆனாலும் சேரவில்லை. சூழல் இப்படி இருக்க ராஜாவை பிரிந்த சமயத்தில் வைரமுத்து எழுதியதாக ஒரு பதிவு ட்ரெண்டாகியிருக்கிறது. அந்தப் பதிவில், " இசை ஞானியே! என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை. உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

இரண்டாம் பாகம்: என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே! உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன. கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான நினைவுகளுக்கு மட்டுமே இடம் தந்திருக்கிறேன்.மனைவியின் பிரிவுக்குப் பிறகு அவள் புடவையைத் தலைக்கு வைத்துப் படுத்திருக்கும் காதலுள்ள கணவனைப் போல அவ்வப்போது உன் நினைவுகளோடு நான் நித்திரை கொள்கிறேன். திரை உலகில் நான் அதிக நேரம் செலவிட்டது உன்னிடம்தான்.

Vairamuthu Post about Ilayaraaja Here are Full Details
Photo Credit:

ஹார்மோனியமாக நேசிக்கிறேன்: மனசில் மிச்சமில்லாமல் பேசிச் சிரித்தது உன்னோடுதான். பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீதான். நமக்குள் விளைந்த பேதம் ஏதோ நகம் கிழித்த கோடுதான். ஆனால் நான் கண்ணினும் மெல்லியவன்; நகத்தின் கிழிப்பை என் விழிப்பை தாங்காது. பரணில் கிடக்கும் ஆர்மோனியம் எடுத்து, தூசு தட்டி, வாசிப்பது போல் உன் தூசுகளைத் துடைத்துவிட்டு உன்னை நான் ஹார்மோனியமாகவே நேசிக்கிறேன்.

நீளமான வருடங்களின் நீண்ட இடைவெளியைப் பிறகு ராஜாஜி ஹாலில் எம்.ஜி.ஆர். இரங்கல் கூட்டத்தில் இருவரும் சந்தித்துக் கொள்கிறோம். என்னை நீ குறுகுறுவென்று பார்க்கிறாய். உன்னை நானும் பார்க்கிறேன். தூண்டிலில் சிக்கிய மீனாய்த் தொண்டையில் ஏதோ தவிக்கிறது. வார்த்தை துடிக்கிறது; வைராக்கியம் தடுக்கிறது; வந்துவிட்டேன். அன்று... இரவெல்லாம் உன் ஞாபகக்கொசுக்கள் என்னைத் தூங்கவிடவில்லை.

உன்னோடு சேர்ந்த பின்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள் என்னில். ஒரே வருஷத்தில் சூரியனை என் பக்கம் திருப்பிச் சுள்ளென்று அடிக்க வைத்தாய். இந்த விதைக்குள் இருந்த விருட்சத்தை வெளியே கொண்டு வந்தாய். என் பெயரைக் காற்றுக்குச் சொல்லிக் கொடுத்தாய். நீதான்... அந்த நீதான் ஒரு நாள் எனக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினாய். ஒரு கணம் திகைத்தேன். வெள்ளைத் தாமரையாய் இருந்த மனசு கார்பன் தாளாய்க் கறுத்தது.

பிறகு நிதானமாய் சிந்தித்தேன். நீ எனக்குச் செய்த நன்மைகள் மட்டுமே என் நினைவுக்கு வந்தன. சினிமாக் கம்பெனிகளின் முகவரிகளே தெரியாத அந்த வெள்ளை நாட்களில் என்னை வீட்டுக்கு வந்து அழைத்துப் போவாயே! அதை நினைத்தேன். நான் கார் வாங்குகிற காலம் வரை உன் காரில் என்னை என் வீட்டில் இறக்கி விட்டுப் போவாயே! அதை நினைத்தேன். உன் வீட்டிலிருந்து உனக்காகக் காய்ச்சி அனுப்பப்படும் ஒரு கோப்பைப் பாலில் எனக்குப் பாதி கொடுக்காமல் எப்போதும் நீ அருந்தியதில்லையே! அதை
நினைத்தேன்.

பரவசத்தோடூ: 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே' பாடல் பதிவாகி முடிந்ததும் என்னைப் பரவசத்தோடு தழுவிக்கொண்டு என் கன்னங்களை வருடிக்கொண்டு, அப்படியே புகைப்படக்காரரைப் படமெடுக்கச் சொன்னாயே! அதை நினைத்தேன். அந்த நினைவுகளின் இதமான உஷ்ணத்தில் உன் வக்கீல் நோட்டீஸ் எரிந்து போனது. எனக்கு எதிராக உன் பெயரில் ஓர் அறிக்கை வருகிறது. இருக்காதே என்று நினைக்கிறேன்.

நகலை கைப்பற்றினேன்: பிறகு நண்பர்களுக்குச் சொல்லி நகலைக் கைப்பற்றுகிறேன். உன் அறிக்கைதான். ஒரு பெண் வெட்கப்படுவது மாதிரி இருக்கும் உனது கையெழுத்தேதான். படித்தேன். சிரித்தேன். கிழித்தேன். வேறோரு கோணத்தில் நினைத்தேன். உன் எழுத்தில் இந்த உஷ்ணம் இருந்தால் உன் இருதய அடுப்பில் எத்தனை விறகு எரிந்திருக்கும்! உன் உள்ள உலை எத்தனை முறை கொதித்திருக்கும்! காரணமே இல்லையே. இது இருதயத்திற்கு ஆகாதே.

நண்பர் கமல்ஹாசன் என்னை அழைத்து அவரது புதிய சரித்திரப் படத்துக்கு வசனம் எழுதச் சொல்கிறார். சந்தோஷத்தோடு 'சரி' என்கிறேன். ஆனால் லோக்சபையின் தீர்மானத்தை ராஜ்யசபா அடித்துவிடுவது மாதிரி நீ தடுத்து விடுகிறாய். இப்படியெல்லாம் அடிக்கடி நான் சிரித்துக்கொள்ள சந்தர்ப்பம் தருகிறாய். நான் எப்போதும் நேசிக்கும் இனியவனே! இப்போது சொல்கிறேன். உனது பட்டறையில் எனக்கெதிராய் அம்புகள் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. ஆனால் எனது யுத்தத் தொழிற்சாலையில் கவசங்கள் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறேன்.

நான் அப்படி நினைக்கவில்லை: ஏனென்றால், என்னை எதிரியாக நீ நினைக்கிறாயே தவிர உன்னை எதிரியாக நான் நினைக்கவில்லை. உன்னை நான் பிரிந்தோ என்னை நீ பிரிந்தோ அல்லது பிரிக்கப்பட்டோ நாம் தனித்து நின்ற சமயம் உனக்கு வேண்டாதவர்கள் சிலர் என் வீட்டுக்கு வந்தார்கள். உனக்கெதிரான அவர்களின் கூட்டணிக்கு என்னைத் தலைமையேற்க சொன்னார்கள். நான் கொதித்தேன். "அவன் சிங்கம். நானும் சிங்கம். சிங்கத்துக்கும் சிங்கத்திற்குமே யுத்தம். நரிகளின் கூட்டணியோடு சிங்கங்கள் போர்க்களம் புகுவதில்லை" என்று சீறிச் சினந்து "போய் வாருங்கள்" என்றேன். மறுகணம் யோசித்து, வார்த்தைகளில் பாதியை வாபஸ் வாங்கிக்கொண்டு, "போங்கள்" என்றேன்.

அதில் சம்மதமில்லை: நீ வீழ்ந்தாலும் - வீழ்த்தப்பட்டாலும் எனக்கு சம்மதமில்லை. இவ்வளவு உயரத்தில் ஏறியிருக்கும் ஒரு தமிழன் உருண்டு விடக்கூடாது. நீயும் நானும் சேர வேண்டுமாம். சில தூய இதயங்கள் சொல்லுகின்றன. உனக்கு ஞாபகமிருக்கிறதா? 'ஈரமான ரோஜாவே' எழுதி முடித்துவிட்டு ஆழியாறு அணையின் மீது நடந்து கொண்டிருந்தோம். திடீரென்று என்னை நீ துரத்தினாய்; நான் ஓடினேன். நீ துரத்திக்கொண்டேயிருந்தாய்; நான் ஓடிக்கொண்டேயிருந்தேன். மழை வந்தது. நின்று விட்டேன். என்னை நீ பிடித்து விட்டாய். அப்போது சேர்ந்து விட்டோம். ஏனென்றால் இருவரும் ஒரே திசையில் ஓடிக் கொண்டிருந்தோம். இப்போது முடியுமா? இருவரும் வேறு வேறு திசையில் அல்லவா ஓடிக்கொண்டிருக்கிறோம்" என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X