Not Interested.. ஈழ தமிழர் படுகொலை விஷயத்தில் விஜய்யின் அலட்சியம்.. எஸ்.ஏ.சியும் அப்படி.. இப்படி நடந்திருக்கே
சென்னை: நடிகரும், தவெக தலைவருமான விஜய் தமிழ்நாடு முதலமைச்சராக மாறுவதற்கு அத்தனை முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார். ஆனால் இன்னமும் அவருக்கு தேவையான எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஆட்சியமைக்க முடியாமல் திணறுகிறார். முக்கியமகா விசிக, கம்யூனிஸ்ட்டுகளின் ஆதரவை எதிர்நோக்கியிருக்கிறார். அவர்களோ தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதில் தயக்கம் காட்டிவருகிறார்கள். இதனால் தமிழ்நாடு அரசியல் களம் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்புடன் செல்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களை வென்று பெரிய கட்சியாக மாறியிருக்கிறது. திமுக இரண்டாவது இடத்திலும், அதிமுக மூன்றாவது இடத்திலும் நிலைத்தன. 108 தொகுதிகளை வென்றாலும் பெரும்பான்மைக்கு தேவையான 118 இல்லை என்பதால் மற்ற கட்சிகளின் ஆதரவை கேட்டது தவெக. முதல் ஆளாக சென்று ஐந்து எம்.எல்.ஏக்கள் ஆதரவை கொடுத்து அக்கட்சியின் பலத்தை 113ஆக உயர்த்தியாது காங்கிரஸ். இருந்தாலும் இன்னும் ஐந்து எம்.எல்.ஏக்களின் ஆதரவு வேண்டும்.

என்ன நடக்கிறது?: அந்த ஐந்து பேரின ஆதரவு விசிக மற்றும் கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து எதிர்பார்க்கிறார் விஜய். அவர்களோ கூட்டணி தர்மம், தொலைநோக்கு பார்வை, விஜய்யின் அரசியல் உள்ளிட்ட பல விஷயங்களை கருத்தில்கொண்டு ஆதரவு தர தயங்கிவருகிறார்கள். அதுமட்டுமின்றி ஆதரவு கேட்டு வாட்ஸ் அப்பில் கடிதம் அனுப்பினார்கள் என்றும் திருமாவளவன் கூறியிருப்பது கவனத்தில் கொள்ள வேண்டியது. மேலும் தவெகவுக்கு விசிக, கம்யூனிஸ்ட்டுகளிடமிருந்து ஆதரவு கிடைக்காததற்கு வேறு சில காரணங்களையும் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
என்ன காரணங்கள்?: அதாவது எதிர்காலத்தில் என்டிஏ கூட்டணி கட்சிகளுடன் பயணிக்கக்கூடாது என்ற கண்டிஷனுக்கு விஜய் ஒத்துக்கொண்டதாகவும்; புதிய கல்வி கொள்கையை ஒத்துக்கொள்ளக்கூடாது, பிஎம் ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர கையெழுத்திடக்கூடாது, லாட்டரி, சூதாட்டம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது, நான் முதல்வன், தமிழ் புதல்வன், தமிழ் புதல்வி திட்டங்களை நீக்கக்கூடாது என்ற மற்ற கண்டிஷன்களுக்கு விஜய் ஒத்துக்கொள்ள தயங்குவதாகவும்; அதனால்தான் இவர்களும் இழுத்தடிக்கிறார்கள் என்றும் பேச்சுக்கள் ஓடுகின்றன.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் விஜய் தொடர்பாக விசிகவின் எம்.எல்.ஏ வன்னி அரசு; ஈழ தமிழர் படுகொலை நடந்தபோது பேசிய வீடியோ திடீரென ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் பேசிய அவர், "ஈழ தமிழர் படுகொலையில் ராஜபக்ஷேவை தண்டிப்பதற்காக இந்த கையெழுத்தை வாங்குகிறோம் என சொன்னோம். அதற்கு விஜய்யோ, எனக்கு இதில் ஆர்வம் இல்லை என்று சொல்லிவிட்டார். அதற்கு பிறகு அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடமும் சொன்னோம். அவரும் இல்லை இதில் எல்லாம் எங்களால் கையெழுத்து போட முடியாது என சொல்லிவிட்டார்" என குறிப்பிட்டிருக்கிறார்.
கொள்கையே கிடையாதா?: இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களோ விஜய்க்கு அப்போதிருந்தே கொள்கையும், உணர்வும் இல்லை போல. ஈழ தமிழர் படுகொலையை உலகமே கண்டித்தபோது விஜய்யோ இதில் எனக்கு ஆர்வம் இல்லை என்று சொல்லியிருக்கிறாரே; இவரால் எப்படி தமிழர்களுக்கு பாதுகாப்பாக இருக்க முடியுமா? என்று சகட்டுமேனிக்கு கேள்விகள் எழுப்பிவருகிறார்கள். மேலும், இன்னும் போகப்போக விஜய்யின் பழைய விஷயங்கள் பலமாக தோண்டப்படும் போல என்றும் கிண்டல் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
