கலைஞருக்கு சிலை.. என்ன விஜய் சார் அதெல்லாம் நியாபகம் இருக்கா?.. பழசை தோண்டி அடிக்கிறாங்களே
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கும் விஜய் நேற்று தஞ்சைக்கு சென்று தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது பேசிய அவர் வழக்கம்போல் திமுக அரசையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் விளாசி தள்ளினார். அவர் பேச பேச அங்கே இருந்த தொண்டர்கள் உற்சாகத்தில் மிதந்தார்கள். சங்கீதா விவகாரம் பற்றியெல்லாம் அவர் கண்டுகொள்ளவே இல்லை. அதேசமயம் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி குறித்து பேசியிருந்தார்.
சினிமாவை விட்டு அரசியலுக்கு வந்திருக்கும் விஜய்; இன்னும் ஒரு மாதத்தில் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்குகிறார். அதனால் அரசியல் களத்தில் பம்பரமாக சுழன்றுவருகிறார். இப்படிப்பட்ட நிலைமையில் அவரிடமிருந்து தனக்கு விவாகரத்து வேண்டுமென்று அவரது மனைவி சங்கீதா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த விஷயம் விஜய்க்கு பின்விளைவுகளை அரசியலில் ஏற்படுத்துமா என்பது குறித்து பலரும் விவாதித்துவருகிறார்கள். ஆனால் விஜய்யோ அமைதியையே இப்போதுவரை பதிலாக கொடுத்திருக்கிறார்.

தஞ்சையில் தவிர்த்த விஜய்: நேற்று நடந்த தஞ்சாவூர் கூட்டத்தில்கூட சங்கீதா குறித்து பேசுவதை தவிர்த்துவிட்டார். மேலும் உற்சாகம் குறையாமல் வேலூர் கூட்டத்தில் இருந்தது மாதிரியே இதிலும் இருந்ததால்; விவாகரத்து விவகாரம் இம்மியளவுகூட விஜய்யின் சமநிலையை குலைக்கவில்லை; தைரியமாக இருக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது; இனிமேல் தங்களுக்கு கவலையே இல்லை என்று தவெகவினர் மகிழ்ச்சியோடு சோஷியல் மீடியாவில் பேச தொடங்கியிருக்கிறார்கள்.
கலைஞர் பற்றி பேசிய விஜய்: நேற்று வழக்கம்போல் திமுகவையும், மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் பேசுகையில், 'திமுக ஆட்சியில் தமிழ்நாடு திவாலாக போகிறது. ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி என சின்ன பசங்களே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். கரூரில் தொடங்கி ஜனநாயகன் படம் வரை என் மீது பழி போட்டார்கள். ஜனநாயகன் பட ரிலீஸ் பிரச்னையில் மு.க.ஸ்டாலின் பூசி மெழுகி, பட்டும் படாமல் ஆதரவாக பேசினார். அவருக்கு என்னுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்னொரு முறை ஆட்சியா?: திமுக அடுத்த முறையும் ஆட்சிக்கு வரலாம் என நினைக்கிறார்கள். அப்படி நடந்ததாக வரலாறே இல்லை. ஸ்டாலின் சாரின் அப்பாவாலேயே முடியவில்லை; இவரால் முடியுமா?.. உங்கள் தந்தைக்கு சிலை வைக்க முடிவு செய்தபோது சுப்ரீம் கோர்ட் என்ன சொன்னது தெரியுமா?.. மக்கள் பணத்தில் ஏன் சிலை வைக்கிறீர்கள் என கேட்டார்க்ள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? ஊரான் வீட்டு நெய்யை எடுத்து உங்கள் வீட்டுக்கு ஸ்வீட் செய்யாதீர்கள் என்பதுதான். அந்த சிலை அவசியமா?' என கேள்வி எழுப்பியிருந்தார்.
தோண்டிய நெட்டிசன்கள்: அவரது பேச்சுக்கு திமுகவினர் கடும் பதிலடி கொடுக்கிறார்கள். ஏற்கனவே 1967ஆம் ஆண்டு ஆட்சிக்கு பிறகு 71ல் திமுக தொடர்ச்சியாக ஆட்சியை பிடித்தது. அந்த வரலாறே விஜய்க்கு தெரியவில்லை என உடன்பிறப்புகள் ஆதாரத்தோடு பேசுகிறார்கள். அதேபோல் கலைஞர் கருணாநிதி உயிருடன் இருந்தபோது நடந்த பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில் விஜய் பேசியதையும் எடுத்து சுத்தலில் விட்டிருக்கிறார்கள். அதில் அவர், 'கலைஞர் நகர் என்று பெயர் வைப்பதாக சொன்னார்கள். அதுமட்டும் போதாது. அந்த இடத்தில் கலைஞருக்கு சிலை வைக்க வேண்டும். அவருடைய நூறாவது வயதில் இதேபோன்ற ஒரு விழா எடுத்து அவருடன் சேர்ந்து நானும் அதை ரசிக்க வேண்டும்' என்றிருந்தார்.


Click it and Unblock the Notifications















