Vijay And Ajith - அஜித்தை இயக்கும் வாய்ப்பு.. தயக்கத்தோடு சொன்ன இயக்குநர்.. விஜய் கொடுத்த செம பதில்
சென்னை: Vijay And Ajith (விஜய் மற்றும் அஜித்) அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பை பெற்ற பேரரசு விஜய்யிடம் அதனை சொல்ல அதற்கு விஜய் அளித்த ரியாக்ஷன் பற்றி தெரியவந்திருக்கிறது.
இந்திய சினிமாவில் அஜித்தும், விஜய்யும் டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கின்றனர். இருவரும் ஒரேகாலகட்டத்தில் நடிக்க வந்தவர்கள். அதேபோல் தங்களது ஆரம்பகாலத்தில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக போராடியவர்கள். இரண்டு பேரும் இப்போது இருக்கும் இடம் சாதாரணமாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. அயராது உழைத்து, தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டனர். அதன் பிரதிபலனாக இருவருமே இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றனர்

நேருக்கு நேரில் மிஸ் ஆன அஜித்: ராஜாவின் பார்வையிலே படத்துக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடித்திருக்க வேண்டிய படம் நேருக்கு நேர். வசந்த் இயக்கிய அந்தப் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் கமிட்டானது அஜித்தான். சில நாட்கள் ஷூட்டிங்கும் சென்ற அஜித் ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார். ஆனால் சம்பள விவகாரத்தில் அவருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் முட்டிக்கொண்டதாகவும் அதனால்தான் அஜித் நேருக்கு நேர் படத்திலிருந்து விலகிவிட்டார் எனவும் கூறப்படுகிறது.
அஜித், விஜய் போட்டி: அதற்கு பிறகு இருவரையும் சேர்த்து படம் எடுக்க யாருமே முயற்சிக்க கூட இல்லை. அதேசமயம் இருவரும் தங்களது பாதையில் சிறப்பாக செல்ல இருவருமே உயர்ந்த இடத்துக்கு சென்றனர். இதனால் ரஜினி - கமல் என்பது போல் அஜித் - விஜய் என உருவானது. இருவருக்குமே ரசிகர்கள் பெருக இரண்டு பேரின் படமும் ஒரே நாளில் ரிலீஸானால் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரசிகர்களுக்குள்ளும் மோதல் ஆரம்பித்தது.
சிறந்த நண்பர்கள்: இரண்டு பேரும் திரையில் எதிர் எதிர் துருவங்களாக கட்டமைக்கப்பட்டாலும் நிஜத்தில் சிறந்த நண்பர்களாகவே இருக்கின்றனர் என திரையுலகைச் சேர்ந்த பலர் கூறுவதுண்டு. ஆனால் இரண்டு பேரின் ரசிகர்களும் அதை புரிந்துகொள்ளாமல் மோதிக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு நேரில் மோதிக்கொண்டவர்கள் இப்போது சமூக வலைதளங்களில் மோதிக்கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் அஜித்தின் தந்தை மறைவுக்கு விஜய் நேரில் சென்று தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார். எனவே இனியாவது இரண்டு பேரின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்ளமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் இப்போது லியோ படத்தில் நடித்துவருகிறார். அஜித் விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார்.
பேரரசு: இந்நிலையில் விஜய்யை வைத்து சிவகாசி, திருப்பாச்சி என இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் பேரரசு. அந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டானதால் விஜய்யின் ஆஸ்தான இயக்குநர் என்ற முத்திரையும் அவர் மீது குத்தப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் அஜித்தை வைத்து படம் இயக்குவதற்கான வாய்ப்பு வந்தபோது விஜய்யிடம் அதை பேரரசு சொல்லியிருக்கிறார். அதற்கு விஜய் அளித்த பதில் பற்றி தெரியவந்திருக்கிறது.

நல்ல வாய்ப்பு: அதாவது இயக்குநர் பேரரசுவை அழைத்த ஏவிஎம் நிறுவனம், 'நாங்கள் அஜித்தை வைத்து ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறோம். அதை நீங்கள் இயக்குகிறீர்களா?' என கேட்டிருக்கிறது. கொஞ்சம் யோசித்த பேரரசுவின் கைகளில் ஒரு குறிப்பிட்ட தொகையை திணித்து நீங்கள்தான் படத்தை இயக்க வேண்டும் என ஏவிஎம் தரப்பிலிருந்து சொல்லப்பட்டதாம்.
விஜய்யிடம் சென்ற பேரரசு: இதனையடுத்து நேராக விஜய்யிடம் சென்ற பேரரசு, அஜித்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனால் என்ன சொல்வதென்று தெரியவில்லை என சொல்லியிருக்கிறார். அதற்கு விஜய்யோ, இதில் யோசிக்க என்ன இருக்கிறது. இது நல்ல வாய்ப்பு. ஏவிஎம் மிகப்பெரிய நிறுவனம், உடனடியாக கிளம்புங்கள். அந்தப் படத்தை இயக்கும் வேலையை தொடங்குங்கள்" என்றாராம். திருப்பதி படத்தின் பூஜை போடப்பட்டபோது விஜய்யும் அதில் கலந்துகொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











