வடிவேலுவுக்காக நடிகரின் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட விஜயகாந்த்.. யப்பா வேற லெவல்
சென்னை: விஜயகாந்த் என்றாலே அனைவரது மனதிலும் அவரது உதவி செய்யும் குணமும், மனிதமும், திறமையும் வந்து செல்லும். அந்த அளவுக்கு அவர் பிறருக்கு உதவி செய்வதை ஒரு வேலையாகவே செய்துவந்தவர். அவரால் வளர்ந்தவர்கள் திரைத்துறையில் இன்று டாப் இடங்களில் இருக்கிறார்கள். எந்த அளவுக்கு இரக்க குணம் விஜயகாந்த்திடம் இருக்குமோ அதே அளவுக்கு தைரியமும் அவரிடம் இருக்கும். இந்தச் சூழலில் வடிவேலுவுக்காக நடிகரின் மனைவியிடம் அவர் மன்னிப்பு கேட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.
புரட்சி கலைஞர், கேப்டன் என தமிழ்நாட்டு மக்களால் அழைக்கப்படுபவர் விஜயகாந்த். மதுரையிலிருந்து சினிமா ஆசையோடு திறமையின் துணையோடும், நம்பிக்கையோடும் சென்னைக்கு வந்த அவர் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்தார். முட்டி மோதி பட வாய்ப்புகளை பெற்றார். முதலில் வில்லனாக அறிமுகமான அவர் அதனையடுத்து ஹீரோவாக மாறினார். ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்டோர் பீக்கில் இருந்தபோது தனக்கென தனி முத்திரையை கோலிவுட்டில் பதித்தார் விஜயகாந்த்.

திறமைகளுக்கு அங்கீகாரம்: நடிகர்களை பொறுத்தவரை அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்தாலும் அதற்கு முன்னதாக சின்ன தயக்கம் ஒன்று இருக்கும். ஆனால் விஜயகாந்த்துக்கோ திறமைகளை அறிமுகப்படுத்துவதில் அலாதி ப்ரியம். அந்தவகையில் தமிழ் சினிமா நடிகர்களில் அதிகளவு புது இயக்குநர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது விஜயகாந்த் மட்டும்தான். ஆர்.கே.செல்வமணி, ஆபாவாணன் என அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
உதவும் குணம்: அதேபோல் விஜயகாந்த் போல் யாராலும் உதவி செய்ய முடியாது. பீக்கில் இருந்தபோது விஜய், சூர்யா உள்ளிட்டோரின் படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்து அவர்கள் மீது வெளிச்சம் பாய்வதற்கு உறுதுணையாக இருந்தார். அதேபோல் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது ஏகப்பட்ட நடிகர்களின் பிரச்னைகளை தீர்த்து வைத்திருக்கிறார் அவர். நடிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் ஏராளமான உதவிகளை தொடர்ந்து செய்துகொண்டே வந்தவர் அவர்.
அரசியலில்: சினிமாவில் எப்படி தனக்கென அடையாளத்தை பெற்றாரோ அதேபோல்தான் அரசியலிலும். கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் அரசியலில் படு ஆக்டிவ்வாக இருந்தபோதே தேமுதிக கட்சியை தொடங்கி அவர்களுக்கு டஃப் கொடுத்தார். 2011ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார். ஆனால் அதற்கு பிறகு அவர் எடுத்த சில தவறான முடிவுகள் அரசியல் சதுரங்கத்தில் அவரை வீழ்த்தியது. இதனால் நொடிந்துபோன அவர் உடல்நலம் சரியில்லாமல் ஆனார். கடந்த வருடம் உயிரிழந்தார்.
வடிவேலுவுக்கு உதவி: இதற்கிடையே வடிவேலுவுக்கும் விஜயகாந்த் பல உதவிகளை செய்திருக்கிறார். முக்கியமாக சின்னக்கவுண்டர் படத்தில் வடிவேலுவை நடிக்க வைக்கக்கூடாது என கவுண்டமணி கண்டிஷன் போட இவர்தான் கவுண்டமணியிடம் சென்று பேசி சமாதானப்படுத்தினார். சூழல் இப்படி இருக்க விஜயகாந்த்தையே எதிர்த்தார் வடிவேலு. ஆனால் விஜயகாந்த்தோ அதுகுறித்து எந்தவிதமான ரியாக்ட்டும் செய்துகொள்ளவில்லை. இந்நிலையில் வடிவேலுவுக்காக நடிகரின் மனைவியிடம் விஜயகாந்த் மன்னிப்பு கேட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது வடிவேலு உள்ளிட்டோருடன் காமெடி காட்சிகளில் நடித்தவர் ஜெயமணி. ஒருமுறை அவரை ஏதோ ஒரு விஷயத்துக்காக வடிவேலு ஃபோன் செய்து மிரட்டினாராம். உடனடியாக ஜெயமணி விஜயகாந்த்திடம் சென்று முறையிட்டிருக்கிறார். கொதிப்படைந்த விஜயகாந்த் வடிவேலுவுக்கு ஃபோன் செய்து என்ன ஓவரா மிரட்டுறியாமே ஒழுங்கா இருந்துக்க என்று கூறினாராம். அத்தோடு மட்டும் நிற்காமல் ஜெயமணியின் மனைவிக்கு ஃபோன் செய்து, நீங்கள் அரசாங்க பணியில் இருப்பதாக சொன்னார்கள். வடிவேலு அப்படி பேசியிருக்கக்கூடாது. அவருக்காக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினாராம். இதனை ஜெயமணி ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











