விஷால் இப்படித்தான் வருவார்.. பார்த்தவுடனே கணித்த விஜயகாந்த் .. என்ன ஆச்சு தெரியுமா?
சென்னை: விஷாலின் நடிப்பில் கடைசியாக ரத்னம் திரைப்படம் வெளியானது. அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றது. அதேசமயம் அந்தப் படத்துக்கு முன்னதாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. சூழல் இப்படி இருக்க சுமார் 12 வருடங்களுக்கு முன்பு விஷால் நடித்த மதகஜராஜா திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. அந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது விஷாலை பார்த்த அனைவருமே ஷாக் ஆனார்கள்.
சினிமா குடும்பத்தின் பின்னணியிலிருந்து வந்த விஷால் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்தார். அதற்கு பிறகு அவர் செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அந்தப் படம் சூப்பர் ஹிட்டடித்தது. செல்லமே படத்துக்கு பிறகு அவர் நடித்த தாமிரபரணி, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. இதனால் விஷால் குறிப்பிடத்தக்க ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்துகொண்டிருந்தார். ஆனால் இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை அவருக்கு சறுக்கல் ஏற்பட்டது.

இருந்தாலும் முன்னணி ஹீரோதான்: அவருக்கு சறுக்கல் ஏற்பட்டாலும் விஷாலுக்கான பட வாய்ப்புகள் எதுவும் குறையவில்லை. படம் ஹிட்டோ, ஃப்ளாப்போ தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்தார். மேலும் இயக்குநர் பாலா இயக்கத்தில் நடித்த அவன் இவன் திரைப்படம் விஷாலுக்கு சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றுக்கொடுத்தது. முக்கியமாக சூர்யாவுக்கு முன்பு நவரசங்களை அவர் வெளிப்படுத்திய நடிப்பு பார்த்தவர்களை கண் கலங்கவைத்தது. மேலும் கண்களையும் வித்தியாசமாக அந்தப் படத்தில் வைத்து கவனம் ஈர்த்தார்.
மார்க் ஆண்டனி: அவன் இவன் படத்துக்கு பிறகு சொல்லிக்கொள்ளும்படியான படம் என்றால் அது துப்பறிவாளன். மிஷ்கின் இயக்கிய அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஆனால் அந்தப் படத்துக்கு பிறகு அக்கூட்டணிக்குள் விரிசல் வந்தது. தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்த மார்க் ஆண்டனி படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி விஷாலுக்கு கம்பேக் கொடுத்தது. தொடர்ந்து அவர் நடித்த ரத்னம் திரைப்படம் ஓரளவு விமர்சனத்தையே பெற்றது. இதற்கிடையே சுந்தர்.சி இயக்கத்தில் மதகஜராஜா படத்தில் நடித்தார்.
MGR ரிலீஸ்: 12 வருடங்களுக்கு முன்பு அவர் நடித்த மதகஜராஜா திரைப்படம் வெளியாகாமல் இருந்தது. படத்தில் அவருடன் வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம், மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் கண்டிப்பாக ரிலீஸாகாது என்றே பலரும் நினைத்திருந்த சூழலில் இந்த வருட பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இதனையொட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. அப்போது வந்த விஷாலை பார்த்த அனைவரும் ஷாக்காகினர். ஆளே அடையாளம் தெரியாமல் வந்த விஷால் கைகள் நடுங்கியபடி பேசினார். அதற்கு காரணம் விஷாலுக்கு காய்ச்சல் என்று கூறப்படுகிறது.
ஆக்ஷன் ஹீரோ: விஷாலை பொறுத்தவரை அவரது வாட்டசாட்டமான உடல் அவருக்கு பெரும் பலம். அப்படிப்பட்ட விஷாலை நேற்று அந்த மாதிரி பார்த்ததும் பலரும் அதிர்ச்சியானார்கள். இந்நிலையில் விஷால் குறித்து விஜயகாந்த் கூறியது தெரியவந்திருக்கிறது.அதாவது விஷால் ஆக்ஷன் ஹீரோவாக மின்னிக்கொண்டிருந்த சமயத்தில் விஷால் பற்றி தனக்கு நெருக்கமானவர்களிடம், 'இந்த பையன் கண்டிப்பாக மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வருவான். அதற்கான அத்தனை அம்சங்களும் இருக்கிறது' என்று கூறினாராம். இதனை பிரபல பத்திரிகையாளர் அந்தணன் ஒரு வீடியோவில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











