Vijayakanth: RK செல்வமணியை விரட்டியடித்த விஜயகாந்த்... தவறை உணர்ந்து கேப்டன் எடுத்த அதிரடி முடிவு!
சென்னை: பருத்திவீரன் பட விவகாரத்தில் அமீர் - ஞானவேல் ராஜா இடையேயான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து இயக்குநர் கரு பழனியப்பன் கொடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
அதில், விஜயகாந்த் - ஆர்கே செல்வமணி இடையேயான மோதல் பற்றியும் அவர் பேசியுள்ளார்.
புலன் விசாரணை படப்பிடிப்பில் நடந்த அந்த சம்பவம் குறித்து தற்போது தான் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புலன் விசாரணை படப்பிடிப்பில் நடந்த பயங்கரம்: பருத்திவீரன் பட விவகாரம் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திரை பிரபலங்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் கரு பழனியப்பன் அமீருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டதோடு, தற்போது பேட்டியும் கொடுத்துள்ளார். அதில் கேப்டன் விஜயகாந்த் - ஆர் கே செல்வமணி இடையே நடந்த மோதல் குறித்தும் பேசியுள்ளார்.
அதாவது, அமீர் - ஞானவேல்ராஜா இடையே உள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வர வேண்டும். விஜயகாந்தும் ஆர்கே செல்வமணியும் போடாத சண்டையா, அவர்களே இப்போதும் நல்ல நண்பர்களாக இருக்கின்றனர் எனக் கூறியுள்ளார். ஆர்கே செல்வமணியின் முதல் படம் புலன் விசாரணை. ஃபிலிம்ஸ் இன்ஸ்டியூட் மாணவர் என்பதால் விஜயகாந்தும் ராவுத்தரும் செல்வமணிக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளனர்.
அப்படி ஆரம்பிக்கப்பட்ட புலன் விசாரணை திரைப்படத்தின் ஷூட்டிங் நீண்ட நாட்களாக நடந்துள்ளது. விஜயகாந்துக்கு இந்தப் படம் பெஸ்ட்டாக இருக்க வேண்டும் என ஆர்கே செல்வமணி பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார். ஆனால், பொறுமையிழந்த விஜயகாந்த், முதல் படத்திலேயே இப்படி செய்தால் எப்படி என ஆர்கே செல்வமணி மீது கோபமாகியுள்ளார். ஒருகட்டத்தில் விஜயகாந்தும் ராவுத்தரும் ஆர்கே செல்வமணிக்கு கண்டிஷன் போட்டு படத்தை சீக்கிரம் முடித்துவிட்டனர்.

அதன் பிறகு இனி ஆர்கே செல்வமணிக்கு சான்ஸ் கொடுக்க வேண்டாம், அவரை இந்தப் பக்கமே வரவிடக் கூடாது என ராவுத்தரிடம் விஜயகாந்த் கூறியுள்ளார். ஆனால், புலன் விசாரணை ரிலீஸானதும் அந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துள்ளனர். விஜயகாந்த் கேரியரில் தரமான சூப்பர் ஹிட் படமாக புலன் விசாரணை அமைந்தது. இதனால் உற்சாகமான விஜயகாந்த், ஆளுயர மாலை வாங்கிக் கொண்டு ஆர்கே செல்வமணியை நேரில் சென்று பாராட்டியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் தனது 100வது படத்தை இயக்கும் வாய்ப்பை ஆர்கே செல்வமணிக்கே கொடுத்துள்ளார் விஜயகாந்த். அப்படி உருவானது தான் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி, கமல் போன்ற டாப் ஹீரோக்களுக்கே 100வது படம் ஓடாத நிலையில், விஜயகாந்துக்கு கேப்டன் பிரபாகரன் செம்ம கெத்து காட்டியது. அப்போதிலிருந்து தான் விஜயகாந்தை கேப்டன் என ரசிகர்கள் அழைக்கத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











