Vijayakanth - செத்தாக்கூட அறுத்துடுவாங்க.. என்னய்யா காசு.. எமோஷனல் ஆன விஜயகாந்த்..ட்ரெண்டாகும் வீடியோ
சென்னை: ரசிகர்களால் கேப்டன், புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு நாளை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் சில வருடங்களுக்கு முன்பு தனது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் படுவேகமாக ட்ரெண்டாகியுள்ளது.
விஜயகாந்த் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கறுத்த உருவம் இவர் எல்லாம் ஹீரோவாக நிலைப்பது கடினம் என்று பலரும் பேசினார்கள். ஆனால் அதையெல்லாம் தவிடு பொடியாக்கி ஹீரோவாக ஜொலித்தவர். முக்கியமாக ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்றோருக்கு 100ஆவது படம் அட்டர் ஃப்ளாப் ஆனது. ஆனால் விஜயகாந்த்தின் 100ஆவது படமான கேப்டன் பிரபாகரனோ மாபெரும் ஹிட்டடித்தது. அதனாலேயே விஜயகாந்த் மேற்கொண்டு கவனிக்கப்பட்டார்.

கிங் ஆஃப் வில்லேஜ்: ரஜினி, கமல் படங்கள் நகரத்து பக்கமும், கிராமத்து பக்கமும் நன்றாக ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் விஜயகாந்த் நடிக்க வந்த பிறகு அவரது படங்கள் கிராமத்து பக்கம் ரஜினி, கமல் படங்களை தூக்கி சாப்பிட்டன. எந்த கறுத்த உருவம் கிண்டலுக்கு உள்ளாக்கப்பட்டதோ அதே கறுத்த உருவம்தான் அவரை மக்களிடம் பலமாக கொண்டு போய் சேர்த்தது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
சாமானியன் விஜயகாந்த்: அவரை பொறுத்தவரை தான் கஷ்டப்பட்டது மாதிரி வேறு யாரும் சினிமாவில் கஷ்டப்படக்கூடாது என்று இருந்தவர். அதனாலேயே தன்னுடைய சம்பாத்தியத்தில் பல வருடங்களாக மூன்று வேளையும் உணவுகள் வழங்கினார். அவரது அலுவலகத்துக்கு சென்றால் போதும் பசி ஆறிவிடும் என்ற நிலைமைதான் 80கள், 90களில் இருந்தது. அதனாலேயே அவரை கறுப்பு எம்ஜிஆர் என்றும் அழைப்பார்கள்.
எளிமை: எப்படி உதவி செய்வதில் உச்சம் தொட்டாரோ அதேபோல் எளிமையிலும் உச்சம் தொட்டவர் விஜயகாந்த். பொதுவாக நடிகர்கள் பொதுவெளிக்கு வரும்போது கலர் கலராக ட்ரெஸ் அணிவதை விரும்புவார்கள். ஆனால் விஜயகாந்த்தோ ஒரு வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியோடு வலம் வருவார். அதை பார்த்த ரசிகர்கள் விஜயகாந்த்தை மேலும் தங்களுக்கு நெருக்கமாக்கிக்கொண்டார்கள். முக்கியமாக யார் வேண்டுமானாலும் அவரை எப்போது வேண்டுமானாலும் அணுகும் இடத்தில்தான் இருந்தார்.
ட்ரெண்டாகும் வீடியோ: நடிப்பிலிருந்து அரசியல் வந்து எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்து பிறகு சறுக்கினார் அவர். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்த விஜயகாந்த் இன்று காலை உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துவருகிறார். நாளை அவரது இறுதிச்சடங்கு நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் தனது தொண்டர்கள் மத்தியில் விஜயகாந்த் சில வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில், "எனக்கு, எனது மனைவி, எனது பிள்ளைக்குனு ஒரு இடம் இருக்கும்ல. அது போதும் எனக்கு. நாங்க நாலு பேரு உங்க வீட்டுக்கு வந்தா ஒருவேளை சோறு போடமாட்டீங்களா. அது போதும் எனக்கு. என்னய்யா பெரிய காசு. போங்கயா நீங்களும் உங்க காசும்.
கோடி கோடியா சேர்த்து வெச்சு போகும்போது என்னைத்தை கொண்டு போகப்போறீங்க.செத்தாக்கூட அரைஞான் கொடியை அறுத்துட்டுத்தான் கொண்டு போய் பொதைக்கிறான்.காசும் இல்ல ஒன்னும் இல்ல" என பேசியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு உண்மையாக பேசியிருக்கிறார் கேப்டன் என சோகத்தோடு குறிப்பிட்டு அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











