Vijayakanth - விஜய்க்கு விஜயகாந்த் செய்த உதவியும், அட்வைஸும்.. எவ்ளோ நல்ல மனுஷனா இருந்துருக்காரு
சென்னை: Vijayakanth Birthday (விஜயகாந்த் பிறந்தநாள்) கேப்டன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த்துக்கு இன்று 71ஆவது பிறந்தநாள்
ரஜினிகாந்த், கமல் ஹாசன் கொடி கோலிவுட்டில் பலமாக வீசிக்கொண்டிருந்தபோது உள்ளே வந்தவர் விஜயகாந்த். எல்லோருக்கும் போல் எடுத்ததும் விஜயகாந்த்துக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட விஜயகாந்த் இனிக்கும் இளமை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார்.

ஹீரோவாக எண்ட்ரி: வில்லனாக அறிமுகமானாலும் தான் ஹீரோவாக நடிக்க வேண்டுமென்பதில் தீவிர முனைப்போடு இருந்தார். தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முயன்று கொண்டிருந்தவருக்கு ஒரு சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் அவர் ஹீரோவாக நடித்த படம் எதுவும் ஹிட்டாகவில்லை. இப்படிப்பட்ட சூழலில் தூரத்து இடி முழக்கம் படத்தில் ஹீரோவாக நடிக்க அந்தப் படம் மெகா ஹிட்டடித்தது.
டாப் ஹீரோ விஜயகாந்த்: தூரத்து இடி முழக்கம் கொடுத்த வெற்றியை தக்கவைத்துக்கொண்ட விஜயகாந்த் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார். ரஜினி, கமலுக்கு இணையாக வளர்ந்தார். அவருக்கென்று இளைஞர்கள் ரசிகர்களாக மாறினர். முக்கியமாக கிராமங்களில் விஜயகாந்த்தை தூக்கி வைத்து கொண்டாடினர். மேலும் பல இயக்குநர்களுக்கு முதல் படத்தை இயக்குவதற்கு வாய்ப்பும் வழங்கினார்.
உதவி என்றால் விஜயகாந்த்: விஜயகாந்த் சினிமாவில் வளர்ந்த பிறகு நாம் வளர்ந்துவிட்டோம் அதோடு போதும் என நினைக்கவில்லை. மாறாக தான் பட்ட கஷ்டத்தை வேறு யாரும் படக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அவரைப்போலவே அவருடைய நண்பர் இப்ராஹிம் ராவுத்தரும் இருந்தார். இருவரும் இணைந்துதான் சென்னைக்கு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சங்க தலைவர் டூ எதிர்க்கட்சி தலைவர் : நடிகராக மட்டுமின்றி நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றிருந்தார். அந்த சமயத்தில் தென்னிந்திய நடிகர்கள் சங்கம் வாங்கிய கடனை அடைத்து வருவாயையும் அதிகரித்தார். தொடர்ந்து படங்களில் நடித்துவந்த விஜயகாந்த் அரசியலிலும் எண்ட்ரி ஆனார். அதில் உள்ள சிறப்பு என்னவென்றால் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பேரும் அரசியல் களத்தில் படு ஆக்டிவ்வாக இருந்தபோதே விஜயகாந்த் உள்ளே நுழைந்தார். இப்போது அவரது கட்சி அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் விஜயகாந்த்.
விஜய்க்கு செய்த உதவி: இன்று விஜயகாந்த் தனது 71ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் அவர் விஜய்க்கு செய்த உதவியையும், அட்வைஸையும் பார்க்கலாம். அதாவது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் விஜயகாந்த்தும் 17 படங்களில் பணியாற்றியிருக்கின்றனர். அவற்றில் அத்தனையுமே ஹிட்தான். எனவே எஸ்.ஏ.சி மீது ரொம்பவே மரியாதையாக இருப்பார் விஜயகாந்த்.
நாளைய தீர்ப்பு தோல்வி: விஜய்யை வைத்து எஸ்.ஏ.சி எடுத்த நாளைய தீர்ப்பு படம் படுதோல்வியை சந்திக்க அடுத்ததாக என்ன செய்யலாம் என்று யோசித்து விஜயகாந்த்தோடு நடிக்க வைத்தால் என்ன என்று யோசனை எழுந்திருக்கிறது. இதை விஜயகாந்த்திடம் சொல்ல எஸ்.ஏ.சி ஃபோன் அடித்து வீட்டுக்கு வரேன் விஜி என சொல்லியிருக்கிறார். ஆனால் விஜயகாந்த்தோ உடனடியாக எஸ்.ஏ.சி வீட்டுக்கு வந்திருக்கிறார்.
வந்ததும் விஷயத்தை எஸ்.ஏ.சி சொல்ல கண்டிப்பாக நடிக்கிறேன். எனக்கு சம்பளம் எதுவும் வேண்டாம். தம்பி முதல நடிகனாகட்டும் என கூறியிருக்கிறார். செந்தூரப்பாண்டி படத்துக்காக மொத்தம் 20 நாட்கள் கால்ஷீட் கேட்டாராம் சந்திரசேகர். ஆனால் விஜயகாந்த்தால் 17 நாட்கள்தான் நடிக்க முடிந்ததாம். இருந்தாலும் அந்த 17 நாட்களும் முழு அர்ப்பணிப்புடன் நடித்தாராம்.
அதுமட்டுமின்றி ஒரு ஆக்ஷன் காட்சியில் விஜய்யை கொஞ்சம் ரிஸ்க் எடுப்பது போல் தோன்றியவுடன் நேரடியாக விஜய்யிடம் சென்ற விஜயகாந்த் ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்குற. இப்போதான் வளர்ந்து வர. ரிஸ்க் எடு வேணாம்னு சொல்லல அதை கவனமா செய் என்று சொன்னாராம்.
விஜய்க்கு மட்டுமின்றி சூர்யா உள்ளிட்டோருடனும் நடித்து அவர்களின் வளர்ச்சிக்கு விஜயகாந்த் பெரிதும் பங்காற்றியிருக்கிறார். நடிகர்கள் மட்டுமின்றி பலருக்கும் தன்னுடைய உதவி கரங்களை அவர் நீட்டியிருக்கிறார். அந்த கரங்கள் உடைய விஜயகாந்த்துக்கு தமிழ் ஃபில்மிபீட் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்..


Click it and Unblock the Notifications











