Vikram - முதியவர் சொன்ன ஒரு வார்த்தை.. தியேட்டரில் தேம்பி தேம்பி அழுத விக்ரம்.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: Vikram (விக்ரம்) காசி பட ரிலீஸின்போது முதியவர் சொன்ன வார்த்தையை கேட்டு விக்ரம் தேம்பி தேம்பி அழுத சம்பவம் தெரியவந்திருக்கிறது.
தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் விக்ரம். ரொம்பவே கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்திருக்கும் அவரை பெரும்பாலானோருக்கு பிடிக்கும். ஏனெனில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்துக்கு முழுதாக தன்னை ஒப்படைத்துக்கொள்பவர் அவர். எனவே அவரை யாருக்குமே வெறுக்க மனது வரவில்லை.

தங்கலான்: இப்படி பலரை சம்பாத்தித்திருக்கும் விக்ரமுக்கு கடந்த சில வருடங்களாக ஹிட் படமே இல்லை. பொன்னியின் செல்வனின் இரண்டு பாகங்களும் ஹிட் என கூறப்பட்டாலும் அது ஒரு மல்டி ஸ்டாரர் படம் என்பதால் அந்த வெற்றியின் பங்கு முழுக்க முழுக்க விக்ரமுக்கு மட்டுமே போய் சேராது. அதன் காரணமாக சோலோ ஹிட் கொடுக்க காத்திருக்கிறார்.
தங்கலான் ஹிட்தான்: அதற்காக இயக்குநர் பா.இரஞ்சித்துடன் கைகோர்த்திருக்கிறார் அவர். தங்கலான் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இறுதிக்கட்ட பணிகள் ஆரம்பித்திருக்கின்றன. கோலார் தங்க வயலில் தமிழர்கள் பட்ட இன்னல்களை பற்றி படம் பேசுகிறது. இதன் மேக்கிங் வீடியோவை பார்த்தபோது கண்டிப்பாக விக்ரமுக்கு இந்தப் படம் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்து மெகா ஹிட்டாகும் என்று ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர். அதை நிரூபிக்கும் வகையில்தான் படத்தின் டீசரும் இருந்தது. படமானது அடுத்த வருடம் ஜனவரி மாதம் ரிலீஸாகிறது.
வருத்திக்கொள்ளும் நடிகர்: விக்ரமை பொறுத்தவரை ஒரு கதாபாத்திரத்திற்காக தன்னுடைய உடலை ரொம்பவே வருத்திக்கொள்பவர். அப்படி அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அந்தப் படங்களில் ஒன்றுதான் காசி. மலையாளத்தில் கலாபவன் மணி நடித்த வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும் என்ற படத்தின் ரீமேக்தான் காசி. அதில் விக்ரம் பார்வை திறன் அற்றவராக நடித்திருந்தார்.
பல மாதங்கள்: அந்தப் படத்தில் நடித்த பிறகு தன்னுடைய பார்வையை இயல்பு நிலைக்கு கொண்டு வர பல மாதங்கள் சிகிச்சை எடுத்தாராம் விக்ரம். இந்த சூழலில் காசி படம் பார்த்துவிட்டு முதியவர் சொன்ன ஒருவார்த்தையால் விக்ரம் ரொம்பவே அழுதுவிட்டாராம். அதாவது, விக்ரமுக்கு எப்போதும் ஒரு செண்ட்டிமெண்ட் இருக்கிறதாம். அவரது திரை வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திய சேது திரைப்படம் வெளியாகி முதல் இரண்டு நாட்கள் சரியாக போகவில்லை.
சேது ரிலீஸானபோது ஒருமுறை தியேட்டர் விசிட்டுக்காக இருசக்கர வாகனத்தில் சென்றபோது தி.நகர் கிருஷ்ணவேணி திரையரங்கத்தில் ஹவுஸ் ஃபுல் என்ற போர்டு தொங்கியதாம். அதை பார்த்து எமோஷனல் ஆன அவர் அப்போதிருந்து தன்னுடைய எந்தப் படம் ரிலீஸானாலும் கிருஷ்ணவேணி திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்ப்பாராம்.
அப்படி காசி படத்தை பார்த்துக்கொண்டிருந்தபோது அருகில் இருந்த முதியவர் ஒருவர் விக்ரமிடம், தம்பி இந்தப் படத்தில் நடித்திருப்பவருக்கு கண் பார்வை இல்லையென்றாலும் எவ்வளவு நன்றாக நடித்திருக்கிறார் பாருங்கள் தம்பி என்றாராம். இதனை கேட்ட விக்ரம், காசிக்காக பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் மறந்து உடனே தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாராம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











