விவேக் உயிரிழப்புக்கு என்ன காரணம்?.. மனம் திறந்து பேசிய மனைவி
சென்னை: சின்ன கலைவாணர் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் விவேக். தனது காமெடியில் வெறும் நகைச்சுவை மட்டுமில்லாமல் பகுத்தறிவு சிந்தனைகளும் இருக்கும். இதன் காரணமாகவே அவருக்கென்று பெரும் கூட்டம் ரசிகர் பட்டாளமாக இருந்தது. சூழல் இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு விவேக் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி போட்டதுதான் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவரது மனைவி கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
கே.பாலசந்தர் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் விவேக். அவரது படங்களில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது திறமையை நிரூபித்துக்கொண்டே இருந்தார். இதன் காரணமாக அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. எந்த ஈகோவும் பார்க்காமல் தன்னுடன் வளர்ந்துவந்த வடிவேலுவுடன் இணைந்தே பல படங்களில் நடித்திருக்கிறார் அவர். முக்கியமாக தனது காமெடியில் பகுத்தறிவு சிந்தனையையும், முற்போக்கு சிந்தனையையும் அதிகம் இருக்கும்படி பார்த்துக்கொண்டவர்.

உயிரிழப்பு: சூழல் இப்படி இருக்க அவர் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதாவது கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்தபோது தடுப்பூசியை போட்டுக்கொண்டார் அவர். அந்த ஊசியை போட்ட மறுநாளே அவர் உயிரிழந்தார். இதன் காரணமாக விவேக்கின் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசிதான் காரணம் என்று பலரும் பேசினார்கள். அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் விவேக்கின் மனைவி கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
மனைவியின் பேட்டி: தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "கொரோனா சமயத்தில் மக்கள் குழப்பமான மனநிலையில் இருந்தார்கள். புதிது புதிதாக தடுப்பூசி வருகிறதே அதை போடலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தார்கள். விவேக்குக்கும் அந்தக் குழப்பம் இருக்கத்தான் செய்தது. அவரும் நிறைய பேரிடம் தடுப்பூசி போடலாமா வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை செய்தார். அந்த சமயத்தில் அவர் வெளியூருக்கு ஷூட்டிங் செல்லக்கூடிய நிலைமை இருந்தது.
தோல்வியில் முடிந்தது: எனவே விமானத்தில் செல்ல வேண்டுமென்றால் தடுப்பூசி போட வேண்டும் என்கிற விதி இருந்தது. எனவே தடுப்பூசி போட இரண்டு முறை சென்றும் அந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அதற்கு பிறகு மூன்றாவது முறையாகத்தான் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அப்போது ஊடகத்தினரை அழைத்து அவர்கள் முன்னர்தான் போட்டுக்கொண்டார். தான் போட்டுக்கொண்டால் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள் என்பதால்தான் அவர் அப்படி செய்தார்.
உயிரிழந்தார்: ஆனால் அடுத்த நாள் அவர் உயிரிழந்துவிட்டார். அவர் இறந்ததற்கான காரணம் என்னவென்று எனக்கு இப்போதுவரை தெரியவில்லை. அவர் தனது உடலை அப்படி பார்த்துக்கொள்வார். அவர் போல் யாராலும் பார்த்துக்கொள்ள முடியாது. லாக் டவுன் அமலில் இருந்தபோதுகூட அவர் எங்கள் வீட்டை சுற்றி இருக்கும் நகரில் வாக்கிங் செல்ல தவறியதில்லை. வீட்டு மாடியிலேயே உடற்பயிற்சி கூடம் இருக்கிறது. அதிலும் அவர் தவறாமல் உடற்பயிற்சியை செய்வார்.
சொல்ல முடியாது: அவர் தவறாமல் யோகாவும் செய்வார். இப்படி உடலை பார்த்துக்கொண்டவர் எப்படி ஒரு இறப்பை இப்படி சந்திக்க முடியும் என்கிற குழப்பம் எங்களுக்கு வந்தது. அவர் இறந்ததை அடுத்து பலர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள பயந்தார்கள். ஆனால் காலம் செல்ல செல்ல எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். அவர்கள் எல்லோருமே இறக்கவில்லையே. எனவே விவேக் இறப்புக்கு தடுப்பூசிதான் காரணம் என்று சொல்ல முடியாது" என்றார்.


Click it and Unblock the Notifications











