விவேக் செய்த புண்ணியம்.. ஷங்கர் சொன்னது இதைத்தான்.. எமோஷனலாக பேசிய மனைவி
சென்னை: கோலிவுட்டின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர்களில் ஒருவரான விவேக் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு உச்சக்கட்ட சோகத்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்தது. அவர் உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசிதான் காரணம் என்று மன்சூர் அலிகான் உள்ளிட்ட சிலர் கூறினார்கள். ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்தச் சூழலில் விவேக்கின் மனைவி கொடுத்த பேட்டி ஒன்று ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விவேக் என்றால் அறியாதவர் யாரும் இல்லை. தமிழ் சினிமாவில் காமெடி, குணசித்திர கதாபாத்திரம், ஹீரோ என பல விஷயங்களை செய்தவர். அதேபோல் மரக்கன்றுகளையும் அவர் தான் வாழும்வரை நட்டுக்கொண்டே இருந்தார். நடிப்பது மட்டுமின்றி இதுமாதிரியான பொது விஷயங்களிலும் அவர் ஈடுபட்டது பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் சில வருடங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அவர் கடைசியாக இந்தியன் 2 படத்தில் கமிட்டான போதுதான் உயிரிழந்தார்.

மனைவி பேட்டி: இந்நிலையில் விவேக்கின் மனைவி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “விவேக் நடித்த லெஜெண்ட், இந்தியன் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களையும் இப்போதுவரை நான் பார்க்கவில்லை. உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் அந்தப் படங்களை பார்ப்பதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது அதில் நடந்த விஷயங்கள் எனக்கு நன்றாகவே தெரியும். கொரோனாவால் ஷூட்டிங் தடைபட்டது.
கிரேன் விபத்து: மேலும் கிரேன் அறுந்து விழுந்து துணை இயக்குநர்கள் உயிரிழந்தார்கள். அதனால் மீண்டும் படப்படிப்பு நிறுத்தப்பட்டது. அதேபோல் விவேக்கும் அந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போதுதான் இறந்துவிட்டார். தொடர்ந்து இப்படி நடந்துகொண்டே இருந்ததன் காரணமாக இயக்குநர் ஷங்கர் அந்த சமயத்தில் ரொம்பவே இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார். அதேபோல் விவேக் உயிரிழந்தது அவருக்கு மிகப்பெரிய பேரிடியாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் சொன்ன வார்த்தை: விவேக் இறப்பின்போது வீட்டுக்கு வந்த ஷங்கர், எங்களிடம் தைரியமாக இருங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றார். அதற்கு பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஷங்கர், 'விவேக் செய்த புண்ணியம் அவரது குடும்பத்தை காப்பாற்றும்’ என்றார். அவர் சொன்னது உண்மைதான். விவேக் செய்த புண்ணியம்தான் எங்களை இன்றுவரை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. எல்லா படங்களையும் பார்த்தே ஆக வேண்டும் என்று நான் ஆர்வப்படுவதில்லை.
முழு வாழ்க்கையும் பிஸி: முன்பெல்லாம் ஒரு படத்தில் நடித்தால் அந்தப் படத்தின் சிறப்பு காட்சியை படத்தில் நடித்தவர்களின் குடும்பத்தினர் வந்து பார்ப்பதற்கு ஏற்பாடு செய்வார்கள். இப்போதெல்லாம் அப்படி இல்லை. எனவே படம் பார்ப்பதற்காக தனியாக நேரம் ஒதுக்கி தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும். ஆனால் இப்போது நான் பயங்கர பிஸியாக இருக்கிறேன். அப்பப்போ சில சீன்களை பார்ப்பதோடு சரி. நான் இந்தியன் 2வை பார்க்கவில்லை என்றாலும் எனது பிள்ளைகள் அதனை ஓடிடியில் பார்த்தார்கள்” என்றார்.


Click it and Unblock the Notifications