அஜித்துக்கும் வடிவேலுவுக்கும் இப்படி ஒரு பிரச்னையா?.. ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த களேபரம்..
சென்னை: வைகைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் வடிவேலு. ராஜ்கிரணால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினார். சில பிரச்னைகளால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து மாமன்னன், சந்திரமுகி 2 படங்களில் நடித்த அவர்; இப்போது மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் வடிவேலு. ராஜ்கிரணால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் கவுண்டமணி, செந்தில் உச்சத்தில் இருந்தபோது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். அந்தக் காலகட்டத்தில் விவேக்கும் வளர்ந்துவந்தார். எனவே வடிவேலு வளர்வதற்கு கடுமையான போட்டி சூழலே இருந்தது. ஆனால் எதற்கும் அஞ்சவில்லை வடிவேலு. தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்டு உழைத்துக்கொண்டே இருந்தார் அவர்.

ஆரோக்கியமான வளர்ச்சி: குறிப்பாக, தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக்கொண்டு மக்களை சிரிக்க வைத்தார் வடிவேலு. அதேபோல் எந்த ஈகோவும் இல்லாமல் விவேக்குடனும் சேர்ந்து நடித்தார். இதனால் அவரது வளர்ச்சி ஆரோக்கியமாகவே இருந்தது. ஒருகட்டத்தில் வயது மூப்பு காரணமாகவும்; காலம் மாறியதன் காரணமாகவும் கவுண்டமணியும் செந்திலும் சினிமாவிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க ஆரம்பித்தனர்.
வைகை புயல்: அந்த வெற்றிடத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார் வடிவேலு. தனக்கென தனி டீமை செய்து காமெடி செய்து ரகளைகட்டி அடித்தார். இதனால் அவரது வளர்ச்சி 2000களின் தொடக்கத்தில் புயல் வேகத்தில் இருந்தது. அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலைதான் அப்போது இருந்தது. பல படங்களில் நடித்தாலும் ஒவ்வொரு காமெடி காட்சியையும் வித்தியாசமான முறையிலும் புதிய பாணியிலும் நடித்து அப்ளாஸை அள்ளினார் வைகை புயல் வடிவேலு. சூழல் இப்படி இருக்க அவருக்கு ஏற்பட்ட சில நெருக்கடிகளாலும், பஞ்சாயத்துக்களாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கினார்.
இரண்டாவது இன்னிங்ஸ்: ஒருவழியாக பஞ்சாயத்துக்கள் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 என வரிசையாக நடித்த அவர்; இப்போது மாரீசன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக சுந்தர்.சி இயக்கத்தில் கேங்கர்ஸ் சிங்காரம் என்ற படத்தில் நடித்துவருகிறார். இதற்கிடையே அஜித்தும் வடிவேலுவும் கடந்த பல வருடங்களாகவே இணைந்து நடிக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்பது குறித்து இப்போது தெரியவந்திருக்கிறது.
என்ன நடந்தது?: அதாவது அஜித் பொதுவாக ஒரு படத்தில் நடிக்கும்போது தன்னுடன் நடிப்பவர்களிடம் சென்று கை கொடுத்து Iam அஜித்குமார் என்று அறிமுகப்படுத்திக்கொள்வாராம். அதுமட்டுமின்றி தன்னை பெயர் சொல்லி அழைக்கும்படி கேட்டுக்கொள்வாராம். அப்படித்தான் ராஜா படத்தில் நடித்தபோது வடிவேலுவிடம் சொன்னாராம். வடிவேலு முதலில் அஜித்தை சார் என்று அழைக்க ஆரம்பித்தாராம். ஒருகட்டத்தில் வாங்க போங்க என்று அழைத்துவிட்டு ஒரேயடியாக வாடா போடா என்று ஷூட்டிங் ஸ்பாட்டில் அழைக்க ஆரம்பித்துவிட்டாராம்.
இதனால் டென்ஷனான அஜித்குமார் அப்போதிருந்து வடிவேலுவுடன் இனி நடிக்காமல் இருப்பதே சிறந்தது என்று முடிவெடுத்து அப்படியே இருக்கிறாராம். மேலும் ராஜா படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த அந்த களேபரத்தால் படத்தை முடிப்பதற்குள் இயக்குநர் எழிலுக்கு போதும் போதும் என்றாகிவிட்டதாம். இதனை பத்திரிகையாளர் வி.கே.சுந்தர் ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.


Click it and Unblock the Notifications











