என்னது விஜய் காத்திருக்கிறாரா உடனே கிளம்புங்க.. பதறிப்போன அஜித்
சென்னை: விஜய் காத்திருக்கக்கூடாது என அஜித் செய்த செயல் இருவரும் எவ்வளவு சிறந்த நண்பர்கள் என்பதை உணர்த்தியிருக்கிறது.
இந்திய சினிமாவில் அஜித்தும், விஜய்யும் டாப் ஹீரோக்களில் இருக்கின்றனர். இருவரும் ஒரேகாலகட்டத்தில் நடிக்க வந்தவர்கள். அதேபோல் தங்களது ஆரம்பகாலத்தில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு கடுமையாக போராடியவர்கள்.

டாப் ஹீரோக்கள் அஜித், விஜய்
இரண்டு பேரும் இப்போது இருக்கும் இடம் சாதாரணமாக அவர்களுக்கு கிடைக்கவில்லை. அயராது உழைத்து, தங்களது திறமைகளை வளர்த்துக்கொண்டனர். அதன் பிரதிபலனாக இருவருமே இப்போது சூப்பர் ஸ்டார்களாக இருக்கின்றனர். 90களில் நடிக்க வந்த அஜித்தும், விஜய்யும் ஆரம்பத்தில் ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு பிறகு அவர்கள் இணைந்து நடிக்கவே இல்லை.

நேருக்கு நேரில் மிஸ் ஆன அஜித்
ராஜாவின் பார்வையிலே படத்துக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடித்திருக்க வேண்டிய படம் நேருக்கு நேர். வசந்த் இயக்கிய அந்தப் படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் கமிட்டானது அஜித்தான். சில நாள்கள் ஷூட்டிங்கும் சென்ற ஏதோ ஒரு காரணத்தால் அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டார். ஆனால் சம்பள விவகாரத்தில் அவருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் முட்டிக்கொண்டதாகவும் அதனால்தான் அஜித் நேருக்கு நேர் படத்திலிருந்து விலகிவிட்டார் என கூறப்படுகிறது.

அஜித்துக்கும், விஜய்க்கும் உருவான போட்டி
அதற்கு பிறகு இருவரையும் சேர்த்து படம் எடுக்க யாருமே முயற்சிக்கக்கூடவில்லை. அதேசமயம் இருவரும் தங்களது பாதையில் சிறப்பாக செல்ல் இருவருமே உயர்ந்த இடத்துக்கு சென்றனர். இதனால் ரஜினி - கமல் என்பது போல் அஜித் - விஜய் என உருவானது. இருவருக்குமே ரசிகர்கள் பெருக இரண்டு பேரின் படமும் ஒரே நாளில் ரிலீஸானால் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது. அதுமட்டுமின்றி ரசிக்ர்களுக்குள்ளும் மோதல் ஆரம்பித்தது.

சிறந்த நண்பர்கள் அஜித் - விஜய்
இரண்டு பேரும் திரையில் எதிர் எதிர் துருவங்களாக கட்டமைக்கப்பட்டாலும் நிஜத்தில் சிறந்த நண்பர்களாகவே இருக்கின்றனர் என திரையுலகைச் சேர்ந்த பலர் கூறுவதுண்டு. ஆனால் இரண்டு பேரின் ரசிகர்களும் அதை புரிந்துகொள்ளாமல் மோதிக்கொள்வது தொடர்கதையாகிவருகிறது. சில வருடங்களுக்கு முன்பு நேரில் மோதிக்கொண்டவர்கள் இப்போது சமூக வலைதளங்களில் மோதிக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் அஜித்தின் தந்தை மறைவுக்கு விஜய் நேரில் சென்று தனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தார். எனவே இனியாவது இரண்டு பேரின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொள்ளமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தை பேட்டி எடுத்த பத்திரிகையாளர்
இப்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் - விஜய் அவர்கள் வளர ஆரம்பித்தவுடனேயே தங்களுக்குள் நட்பையும், ஒருவருக்கொருவர் மரியாதையையும் வளர்த்திருக்கிறார்கள் என்பதற்கு உதாரணமாக சம்பவம் ஒன்று அரங்கேறியிருக்கிறது. அதாவது ஒரு படத்தின் ஷூட்டிங்கின்போது பத்திரிகையாளர் செய்யாறு பாலு அஜித்திடமும், விஜய்யிடமும் பேட்டி எடுப்பதற்கு டைம் வாங்கியிருக்கிறார். முதலில் அஜித்திடம் பேட்டி எடுத்திருக்கிறார். ஆனால் அந்தப் பேட்டி முடிவதற்கு நேரமாகிவிட்டது.

விஜய்க்காக பதறிப்போன அஜித்
பேட்டி முடிந்து கிளம்பும்போது அவரிடம் அஜித்குமார், "எங்கேயாவது ட்ராப் பண்ணனுமா தயாரிப்பு நிறுவனத்திடம் சொல்லி கார் அனுப்புகிறேன்" என கூறியிருக்கிறார். அதற்கு செய்யாறு பாலு, தயங்கியபடியே, "ஆமா சார் பேட்டிக்காக விஜய் சார் அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்திருக்கிறார்" என சொல்ல; உடனே பதறிப்போன அஜித்குமார், இதை நீங்க முன்னாடியே சொல்றது இல்லையா அவர் அங்க காத்துக்கொண்டிருப்பார் என கூறி; தயாரிப்பு நிறுவனத்திடம் காரை எடுத்து வர சொல்லியிருக்கிறார்.
அதனையடுத்து அந்த கார் டிரைவரிடம், எவ்வளவு வேகமாக போக முடியுமோ அவ்வளவு வேகமாக காரை ஓட்டிக்கொண்டு செல்லுங்கள். அங்கு ஒரு பெரிய ஸ்டார் காத்துக்கொண்டிருக்கிறார்" என கூறியிருக்கிறார். இதனை பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறினார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அஜித்தும், விஜய்யும் ஆரம்பத்திலிருந்தே எவ்வளவு நட்புடன் இருந்திருக்கிறார்கள் என சிலாகித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











