Sibiraj: 22 வருட சினிமா வாழ்க்கை.. விரல் விட்டு எண்ணும் வெற்றிகள்.. சத்யராஜ் மகனுக்கு என்ன பிரச்னை?
சென்னை: பாலிவுட் சினிமா உலகத்திற்கும் தமிழ் சினிமா உலகத்திற்கும் ஒரு ஆரோக்கியமான வித்தியாசம் உள்ளது என்றால் அது, இங்கு நெபுடிசம் வொர்க் அவுட் ஆவதில்லை என்பதுதான். அதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். இன்னாரது மகன், இன்னாரின் மகள் என்ற காரணத்திற்காகவே தமிழ் சினிமா ரசிகர்கள் அவர்களுக்கு வெற்றிகளை வாரிக் கொடுத்தது கிடையாது. படம் தரமாக இருந்தால் புதுமுக நடிகர், அறிமுக இயக்குநர் என யாராக இருந்தாலும். அவர்களுக்கு ரசிகர்கள் வெற்றியை அள்ளி கையில் கொடுத்துவிடுவார்கள். அப்படி வெற்றிக்காக, பல முயற்சிகளை செய்த நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் எனப்படும் சிபி சத்யராஜ் சினிமா வாழ்க்கை குறித்து, எக்ஸ் தளத்தில், 'Sekar 𝕏' எனும் பெயரில் இருக்கும் ரசிகர், மிகச் சிறப்பாக குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவில், "சிபி முதலில் நடிக்க இருந்த படம் 2003 ஆண்டு வெளியான மலையாள படமான நந்தனம் படத்தின் தமிழாக்கத்தில். மலையாள படத்தை இயக்கிய அதே இயக்குநர் ரெஞ்சித் தான் தமிழிலும் இயக்க இருந்தார். ஆனால் ஏனோ அந்த படம் அப்படியே நின்று போனது. அதே படம் 2011 ஆண்டு தனுஷ் நடிப்பில் "சீடன்" என்னும் பெயரில் வெளியானது. முதல் படமே பாதியில் நின்று போனாலும் மனம் தளராமல் சிபி நடித்த முதல் படம் ஸ்டூடண்ட் நம்பர் 1 (2003) . செல்வா இயக்கிய இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் தோல்வி. குறிப்பாக இந்த ஸ்டூடன்ட் நம்பர் 1 படம் 2001 ஆண்டு ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் எஸ்.எஸ்.ராஜ மௌலி இயக்கிய தெலுங்கு படமான ஸ்டூடண்ட் நம்பர் 1 படத்தின் ரீமேக் தான்.

தந்தை மகன் கூட்டணி: முதல் படமே தோல்வி அடைந்ததால் தனது மகனை ஜெயிக்க வைக்க தந்தையான சத்யராஜ் தொடர்ந்து 4 படங்கள் தனது மகனுடன் இணைந்து நடித்தார். அந்த 4 படங்கள் "ஜோர் (2004)", "மண்ணின் மைந்தன் (2005)", "வெற்றிவேல் சக்திவேல் (2005)" மற்றும் "கோவை ப்ரதர்ஸ் (2006)". என்ன தான் இந்த படங்கள் இப்போது தொலைக்காட்சிகளில் வரவேற்பை பெற்றாலும் படம் வெளியான நேரத்தில் பாக்ஸ் ஆபிஸ் தோல்வி அடைந்தது. 2004-06 ஆண்டு காலகட்டத்தில் தனது அப்பாவுடன் இணைந்து நடிக்க இருந்த "பெருமாள் சாமி" "பட்டாசு" மற்றும் "மாமு" போன்ற படங்கள் அறிவிப்பு வந்த வேகத்திலேயே முடங்க தனது அப்பாவே தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து தயாரித்த படம் "லீ". 2007 ஆண்டு வெளியான இந்த படமும் தோல்வி அடைந்தது.
வில்லன் அவதாரம்: தொடர்ந்து அனைத்து படங்களும் தோல்வி அடைய மூன்று ஆண்டுகள் எந்தப் படமும் நடிக்காமல் இருந்த சிபி 2010 ஆண்டு இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் "நாணயம்" எனும் படத்தில் தனது தந்தை போல வில்லன் அவதாரம் எடுத்தார். படத்தில் அவரது நடிப்புக்கு அங்கீகாரம் கிடைத்தாலும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. மிகவும் எதிர்பார்த்த "நாணயம்" படமும் தோல்வி அடைய 4 ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகி நடிப்பு பயிற்சிக்காக அமெரிக்கா சென்றார் சிபி.

முதல் வெற்றி: 2014 ஆண்டு தனது முந்தைய பட இயக்குநரான சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் நடித்த படம் "நாய்கள் ஜாக்கிரதை". சத்யராஜ் தயாரித்த இந்த படம் சிபி-க்கு முதல் வெற்றியைப் பெற்று தந்தது. இந்த படத்துக்கு முன் கிட்டத்தட்ட 200 கதைகள் கேட்டு இந்த படம் நடிக்க ஒப்புக் கொண்டு முதல் வெற்றி ருசித்தார். முதல் வெற்றியை தொடர்ந்து 2016 ஆண்டு ராம் பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் வில்லனாக நடித்த படம் "போக்கிரி ராஜா". அதுவும் ஒரு தோல்வி.. அதை தொடர்ந்து அதே ஆண்டு தனது அப்பாவுடன் இணைந்து நடித்த படம் "ஜாக்சன் துரை". இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி படமாக அமைந்தது. ஆனால் அடுத்த படமான "கட்டப்பாவை காணோம்" மீண்டும் தோல்வி. அதை தொடர்ந்து மீண்டும் சத்யராஜ் தயாரிப்பில் பிரதீப் இயக்கத்தில் நடித்த படம் "சத்யா". த்ரில்லர் படமாக வெளியான இந்த நல்ல ஒரு வெற்றியை கொடுத்தது.

சிபி சத்யராஜின் தந்தையும் தமிழ் சினிமாவில் நக்கல் மன்னன் என அழைக்கப்படும் சத்யராஜ், மிக அற்புதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவை ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 171வது படமான கூலி படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. சத்யராஜ்க்கு இருக்கும் திரை அனுபவம் அவரை சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்ய வைக்கிறது. ஆனால் சிபிராஜ் விஷயத்தில் எங்கோ, ஒரு இடத்தில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுக் கொண்டே வருகிறது. இதனாலே சிபிராஜால் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டாராக மாற முடியாமல் போய்விட்டது.
வெளிநாட்டிற்குச் சென்று, நடிப்பு கற்றுக் கொண்டு வந்த பின்னர் சிபிராஜ் தேர்வு செய்யும் கதாபாத்திரங்கள், கதைகள் கவனம் பெற்று வருகிறது. ஆனால் அவை மொத்த சினிமாவின் கவனத்தையும் ஈர்க்கும் அளவிற்கு இல்லை என்பது நிதர்சணம். வரும் காலங்களில் சிபிராஜ் மிகவும் சிறப்பான கதைகளை தேர்வு செய்து, ரசிகர்களுக்கு ஃபீல் குட் ஃபீலிங்கை கொடுக்க கூடிய படங்களைக் கொடுக்க வேண்டும் என திரைத்துறையில் இருப்பவர்க்ளே பேசிக் கொள்கிறார்கள். கடைசியாக வெளியான 10 ஹவர்ஸ் படமே திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால், மிகப்பெரிய படமாக மாறியிருக்கும்.


Click it and Unblock the Notifications











