Tap to Read ➤

அமிதாப்பின் JHUND Review: Amithab's Jhund film review...OTT release

சேரிப்பகுதி குழந்தைகளின் உரிமை, மறுக்கப்படுவதை அழகாக வெளிப்படுத்தியுள்ள படம், அமிதாப் நடித்த ’ஜுன்ட்’
Filmibeat Tamil
உச்ச நட்சத்திரங்கள் வன்முறை, வழக்கமான மசாலா பாணியில் நடிக்க இந்தியாவின் உச்ச நட்சத்திரமாக இருந்த அமிதாப் வயதுக்கேற்ற பாத்திரங்களில் நடித்துக் கலக்குகிறார்.
ஃபுட்பால் கோச்சாக ஜுன்ட் படத்தில் அமிதாப் வாழ்ந்துள்ளார். பான் இந்தியா பற்றி கோலிவுட், டோலிவுட், சான்டில்வுட் சிந்திக்கும் நேரத்தில் சேரிப்பகுதி சிறுவர்கள் உரிமைப்பற்றி சிந்தித்து எடுக்கப்பட்ட படம் ஜுன்ட்.
சேரிப்பகுதி சிறுவர்களின் வாழ்க்கையை மாற்றி கால்பந்து விளையாட்டு மூலம் அவர்களை உலகறிய செய்த விஜய் பர்சே என்கிற ஃபுட்பால் கோச் ஒருவரின் நிஜ வாழ்க்கையை கொண்டு அமைக்கப்பட்ட பயோபிக் படம் தான் 'ஜுன்ட்' (JHUND) .
சேரியில் வசிக்கும் சிறுவர்களை தயார் செய்து உலக அளவில் வீடற்றோர் புட்பால் (Homeless Soccer) போட்டிக்கு அழைத்துச் சென்று சென்றவர்தான் விஜய் பர்சே அவருடைய போராட்ட வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மிக சிறப்பான படங்களில் ஒன்று எனலாம்.
படத்தின் கதை இதுதான், கல்லூரி ஒன்றில் ஃபுட்பால் கோச்சாக இருக்கும் விஜய் கல்லூரியை ஒட்டி அமைந்துள்ள சேரிப் பகுதியில் இளைஞர்கள், சிறுவர்கள் சிலர் திருடுவது, போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதை பார்த்து திருத்த நினைக்கிறார்.
அவர்களுக்கு ஃபுட்பால் ஒன்றை கொடுத்து அரை மணி நேரம் விளையாடினால் 500 ரூபாய் தருவதாக கூறுகிறார். பணத்துக்காக விளையாட தயாராகும் அந்த இளைஞர்கள் ஓரிரு வாரங்களில் புட்பால் விளையாட்டில் ஆர்வமாகி விடுகின்றனர்.
பின்னர் அவர்களை டீம் பிரித்து எப்படி ஆட வேண்டும் என்று அவர் சொல்லித் தருகிறார். இந்த இடைப்பட்ட காலத்தில் நடக்கும் மாற்றங்களை சுவாரஸ்யமாக காட்சி அமைத்து உள்ளார் இயக்குனர்.
அமிதாப் கல்லூரி முதல்வரிடம் சேரிப்பகுதி டீமுக்கும், கல்லூரி டீமுக்கும் கால்பந்து போட்டி நடக்கிறது மெக்சிகோ இளைஞர்கள் போன்று கழுத்தில் பட்டை செயின், கூலிங்கிளாஸ், ஜாக்கெட், ஜீன் உடை அணிந்து ஸ்டைலாக வருகின்றனர் சேரிப்பகுதி இளைஞர்கள்.
முதலில் ஃபுட்பால் பற்றிய தீவிரம் இல்லாமல் 5 கோல்கள் வாங்கிய நிலையில், ஆஃப் டைமில் அமிதாப் கோபமாக பேச அதை உணர்ந்து தாங்கள் விளையாடும் பாணியில் ஆடி வெல்கின்றனர்.
வெற்றி அவர்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை தருகிறது. அமிதாப்பை நம்ப ஆரம்பிக்கின்றனர். கல்லூரியிலும் தங்கள் பார்வையை மாற்றிக்கொள்கின்றனர்.
சேரிப்பகுதி குழுவில் தலைவனாக நடித்திருக்கும் அங்குஷ் கேதாம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கும் கல்லூரியில் படிக்கும் பணக்கார பெண்ணுக்கும் ஏற்படும் காதலை அழகாக காட்டியிருக்கிறார் இயக்குநர், கேமராமேன்.
இந்த முயற்சியில் வெற்றி பெற்ற அமிதாப் ஏன் இதை விரிவுபடுத்த கூடாது என்று கல்லூரி முதல்வரிடம் பர்மிஷன் வாங்கி நாடு முழுவதும் உள்ள சேரிப் பகுதியில் உள்ள இளைஞர்களை திரட்டி நட்பு ரீதியான கால்பந்து போட்டி ஒன்றை நடத்துகிறார்.
இதற்கிடையே மோதல் ஒன்றில் ஈடுபட்ட கதாநாயகன் டான் அங்குஷ் போலீஸ் வழக்கில் சிக்குகிறார். அவரை மீட்டு ஒழுங்காக இருக்கும் படி கூறுகிறார் அமிதாப்.
அமிதாப்பின் செயலைப் பார்த்து வெளிநாட்டில் படிக்கும் அவரது மகன் அமிதப்புக்கு உதவ மும்பை திரும்புகிறார். அமிதாப் உலக அளவில் வீடற்றோர் கால்பந்து போட்டியில் சேரிப்பகுதி, கிராமப்பகுதி இளைஞர்களை தேர்வு பெற வைக்கும் அமிதாப்பின் முயற்சிக்கு உதவுகிறார்.
உலக அளவிலான வீடற்றோர் ஃபுட் பால் போட்டிக்காக வீரர்களை தேர்வு செய்து அழைத்துப்போகிறார் அமிதாப். ஒவ்வொரு ஊரிலும் உள்ள சிறப்பான வீரர்களை தேர்வு செய்கிறார் அதில் அவருக்கு ஏற்படும் கஷ்டம் வீரர்கள் எவ்வாறு தயாராகி செல்கிறார்கள் போட்டிக்கு சென்றார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தில் சேரிப்பகுதி சிறுவர்களாக நடித்துள்ள ஒவ்வொருவரும் அற்புதமாக இயல்பாக நடித்துள்ளனர். கால்பந்து போட்டியில் ஜெயித்த பின்பு தங்களுடைய வாழ்க்கை நிலை பற்றி ஒவ்வொருவரும் சொல்வதாக அமைந்துள்ள காட்சியில் இயக்குநரின் உழைப்பு தெரிகிறது.
அமிதாப்பச்சன் நீதிமன்றத்தில் வைக்கும் வாதம் மிக அற்புதமாக இருக்கும். வறுமை காரணமாக விளிம்பு நிலையில் வாழும் சேரிப்பகுதி குழந்தைகளை நாம் பார்க்கும் பார்வையும், அவர்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதையும் பேசியிருப்பார்.
இளம் வயதில் குற்றம் புரிபவர்கள் வாழ்க்கை பின்னர் குற்றமே வாழ்க்கையாக மாறிவிடும் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார். வாய்ப்பு கொடுத்தால் யார் வேண்டுமானாலும் சாதிப்பார்கள் என்பதுதான் இந்த படத்தின் மையக்கரு.
ஒவ்வொரு கேரக்டரும் தனித்தனியாக நமக்கு சலிப்பில்லாமல் காட்டுவதற்கு இயக்குநருக்கு பாராட்டு தெரிவிக்கவேண்டும்.நாம் இன்றும் தென்னிந்திய நடிகர்கள், உச்ச நடிகர்கள், மூத்த நடிகர்கள் பலரும் நடிக்க தயங்குகிற விஷயத்தை மிக எளிதாக அமிதாப் கையாண்டு வருவது பாராட்டத்தக்கது.