கிருஷ்ணா மறைவு..தெலுங்கு திரையுலகின் 20 ஆம் நூற்றாண்டின் கடைசி ஆளுமை
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா மாரடைப்பால் மரணம் அடைந்தார். 20 ஆம் நூற்றாண்டில் தெலுங்கு சினிமாவின் 4 முக்கிய ஆளுமைகளில் ஒருவர் கிருஷ்ணா.
Filmibeat Tamil
தெலுங்கு பட உலகின் பழம்பெரும் நடிகர் வரிசையின் கடைசி நடிகர் கிருஷணா மறைவுக்கு தெலுங்கு ரசிகர்கள் தாண்டி கோலிவுட், பாலிவுட் ரசிகர்களும் அஞ்சலி செலுத்துகின்றனர்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு. இவர் நடிகர் கிருஷ்ணாவின் மகன். தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக உள்ளார். இன்றைய இளம் தலைமுறையினருக்கு மகேஷ் பாபுவை நன்றாக தெரியும். அவரது தந்தையாக கிருஷ்ணாவை தெரியும்.
ஆனால் கிருஷ்ணா தெலுங்கு திரையுலகை ஆட்டிப்படைத்த 4 முக்கிய நடிகர்களில் ஒருவராக ஒரு காலத்தில் இருந்த மிகப்பெரிய நடிகர் ஆவார். 20 ஆம் நூற்றாண்டில் தெலுங்கு திரையுலகை கோலோச்சிய 4 தூண்களில் ஒருவர் கிருஷ்ணா
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி, ஜெய்ஷங்கர் உள்ளிட்ட யாரும் தற்போது உயிருடன் இல்லை. 50-கள் 60-கள், 70 களில் ஆதிக்கம் செலுத்திய தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகர்கள் சகாபதம் முடிந்துவிட்டது.
தெலுங்கில் மூத்த நடிகர்களாக எம்ஜிஆர் சிவாஜி காலக்கட்டத்தில் நடிக்க வந்து தமிழிலும் ஆதிக்கம் செலுத்திய என்டிஆர், நாகேஸ்வரராவ், சோபன் பாபு, கிருஷ்ணா உள்ளிட்டோர் இருந்தனர்.
என்.டி.ராமாராவ் எம்ஜிஆர் போல் ஆந்திராவில் தெலுகு தேசம் கட்சியைத்தொடங்கி ஆட்சியையே பிடித்தார். தெலுங்கு மக்களின் கடவுளாக பார்க்க்ப்பட்ட ராமாராவின் குடும்பத்தார் பாலகிருஷ்ணா, ஜூனியர் என்.டிஆர் உள்ளிட்டோர் திரையுலகில் உள்ளனர்.
அதே போல் நாகேஸ்வரராவ் வேலைக்காரி, தேவதாஸ் உள்ளிட்ட பழைய படங்களில் நடித்து தமிழக மக்கள் மனதிலும் பதிந்தவர். இவரது மகன் நாகார்ஜுனா, அவரது இரண்டு மகன்களும் முன்னணி நடிகர்களாக உள்ளனர். நாகேஸ்வரராவ் 90-வது வயதில் புற்றுநோய் காரணமாக காலமானார்.
அடுத்த வரிசையில் சோபன்பாபு இவர் தெலுங்கு படங்களின் பிரபல நடிகர். சோபன்பாபு 1959 ஆம் ஆண்டு நடிக்க வந்தவர் 60 கள் 70 களில் முன்னணி நட்சத்திரம். 80 களில் முன்னணியில் இருந்தவர் 90 களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். 2008 ஆம் ஆண்டில் மரணம் அடைந்தார்.
இவரைப்போலவே கிருஷ்ணம் ராஜுவும் 60 களின் ஆரம்பத்தில் நாயகனாக வந்து பின்னர் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். இவர் பிரபல அரசியல்வாதியாக பல முறை எம்.பி., மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்தவர். நடிகர் பிரபாஸின் உறவினர்.
இந்த வரிசையின் கடைசி ஆளுமையாக, சாட்சியாக இருந்தவர் கிருஷ்ணா. இவர் 60 களின் மத்தியில் அறிமுகமாகி 70, 80, 90, 2000 ஆண்டுகள் வரை முன்னணி நடிகராக இருந்தார். பாலிவுட்டிலும் கால் பதித்தார். படங்களை இயக்கினார்.
தெலுங்கு திரையுலகின் ட்ரெண்ட் செட்டர் என்று கிருஷ்ணாவை சொல்வார்கள். சினிமாஸ்கோப், ஈஸ்ட்மென் கலர் படம், 70 எம்.எம் படம், டிடிஎஸ் படம், கௌபாய் படங்கள், ஜேம்ஸ்பாண்ட் வகை படங்களில் நடித்தவர் என தெலுங்கு படங்களில் ட்ரெண்ட் செட்டர் கிருஷ்ணா தான்.
தெலுங்கு திரையுலகில் என்டிஆர், நாகேஸ்வரராவ், சோபன்பாபு, கிருஷ்ணம்ராஜு வரிசையில் இருந்த கிருஷ்ணா பழமைமையையும் புதுமையையும் இணைத்தவர். ஆளுமைகளின் வரிசையில் கடைசி அடையாளமாக இருந்த கிருஷ்ணாவின் மறைவு மூலம் மூத்த ஆளுமைகளின் காலம் முடிவுக்கு வருகிறது.
குறுகிய காலத்தில் 3 இழப்புகளை மகேஷ்பாபு சந்தித்துள்ளார். ஒரே ஆண்டில் மகன், மனைவியை பறிகொடுத்த கிருஷ்ணா உடைந்துபோனார். மகன் மகேஷ்பாபுவுக்கு துணையாக இருக்கவேண்டியவர் அவரும் மாரடைப்பால் காலமானது மகேஷ்பாபுவுக்கு மிகப்பெரிய இழப்பு.