அபிநயா, ஒரு இந்திய நடிகை. இவரால் சரியாக பேச வராதிருந்த போதும், காது கேட்கும் திறன் குறைபாடு இருந்தபோதிலும், தன்னுடைய திறமையான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். இவர் தன்னுடைய திரைவாழ்க்கையை நாடோடிகள் திரைப்படத்தில் தொடங்கினார். அதன்பிறகு, அத்திரைப்படத்தின் மொழிமாற்றங்களிலும் நடித்து, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் அறிமுகமானார்.
அபிநயாவின் தந்தை இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் ஸ்டாலின் தெலுங்கு திரைப்படத்தில் பாதுகாப்பு காவலாளியாக நடித்துள்ளார். அப்படப்பிடிப்பின் போது அபிநயாவை கவனித்த முருகதாஸ், இயக்குநர் சசிக்குமாரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார். சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிக்குமார் தயாரிப்பில் வெளியான நாடோடிகள் திரைப்படத்தில் வாய்ப்புகிட்டியது. அத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதனுடைய மொழிமாற்றமான சம்போ சிவ சம்போ திரைப்படத்திலும் நடித்தார், பிறகு கன்னடத்தில் உருவான மொழிமாற்றமான ஹுத்துகாரு திரைப்படத்திலும் நடித்தார். இவருக்கு இரண்டு பிலிம்பேர் விருதுகள் நாடோடிகள் மற்றும் சம்போ சிவ சம்போ திரைப்படங்களுக்காக வழங்கப்பட்டது.
இவர் 2010-ம் ஆண்டு சசிக்குமார் இயக்கத்தில் வெளியான ஈசன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். 2011-ம் ஆண்டு, ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். இவர் தற்போது, த ரிப்போர்ட்டர் என்ற மலையாளத் திரைப்படத்திலும், ஜுனியர் என். டி. ஆருடன், தெலுங்கு திரைப்படமான தம்மு-வில் நடித்து வருகிறார். இவர் ப்ரேம் சாய் இய்க்கத்தில் கவுதம் மேனனின் தயாரிக்கும் திரைப்படத்திலும், நடிக்க உள்ளார்.