அஜித்தின் சம்பள பிரச்னை தீரணுமா?.. இதை செய்தால் போதும்.. ஐடியா சொல்லும் திருப்பூர் சுப்ரமணியம்
சென்னை: அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஆனால் அதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை. ஏகேவுக்கு நிலவும் சம்பள பிரச்னைதான் இந்த தாமதத்துக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஐடியா ஒன்றை கொடுத்திருக்கிறார். அது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
அஜித் நடிப்பில் கடந்த வருடத்தில் இரண்டு படங்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து ரேஸில் மட்டும்தான் கவனத்தை செலுத்திவருகிறார். இப்போதுகூட அவர் வெளிநாட்டில் கார் பந்தயத்தில்தான் இருக்கிறார். இதற்கிடையே அடுத்ததாகவும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதில் ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிப்பார் என்றும்; ஜிவி பிரகாஷ் இசையமைக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் தொடர்ந்து தகவல்கள் மட்டும் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

என்ன காரணம்?: அஜித்தின் சம்பள பிரச்னைதான் இதற்கு காரணம் என்றும்; யாரும் இதுவரை தயாரிக்க முன்வரவில்லை என்றும் கூறப்பட்டது. அதாவது அவர், 185 கோடி ரூபாய் சம்பளத்தை முதலில் கேட்டதாகவும்; அதற்கு எங்கிருந்தும் ஓகே வராததால் 150 கோடியாக குறைத்து பிறகு 130 கோடி ரூபாய்க்கு வந்ததாகவும்; மொத்தம் 90 கோடியிலிருந்து 110 கோடி ரூபாய்வரை தரவே சம்மதம் என சில நிறுவனங்கள் சொல்லிவிட்டதாகவும் அரசல் புரசலாக குரல்கள் கேட்கின்றன.
என்ன முடிவு?: ஏகேவின் மார்க்கெட் இவ்வளவு டல்லடித்துவிட்டதா என அவரது ரசிகர்கள் உள்ளபடியே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். 110 கோடி ரூபாய் வரைக்கும்தான் சம்பளம் தருவோம் என தயாரிப்பு நிறுவனங்கள் திட்டவட்டமாக அறிவித்துவிட்டதால்; ஏகே அடுத்ததாக என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் பேட்டியளித்தார்.
திருப்பூர் சுப்ரமணியம் பேட்டி: அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "அஜித் கேட்கும் சம்பளத்தை கொடுக்கும் தயாரிப்பாளர்கள் கோலிவுட்டில் இப்போது குறைவுதான். உண்மையில் ஆவ்ருக்கு அந்த அளவில் சம்பளம் கொடுக்க யாரும் இல்லை என்றுகூட சொல்லலாம். பெரிய முதலீடுகளுடன் செயல்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் தங்களது முதலீட்டினை இங்கே குறைத்துவிட்டன என்பதுதான் உண்மை.
இவர்கள்தான் இருக்கிறார்கள்: இப்போது ரெட் ஜெயன்ட் மூவிஸ், ஏஜிஎஸ், சன் பிக்சஸ், வேல்ஸ் ஆகிய நிறுவனங்கள்தான் இப்போது சினிமா மீது ஆர்வத்தோடு இருக்கின்றன. ஆனால் அந்த நிறுவனங்களும் பெரிய ரிஸ்க் எடுக்க விரும்பாமல் லாப பகிர்வு (Profit Sharing) முறையில்தான் படத்தை தயாரிக்க விருப்பப்படுகின்றன. அஜித்தோ நிர்ணயிக்கப்பட்ட சம்பளத்தைத்தான் எதிர்பார்கிறார். அவர் ஏற்கனவே பொருளாதார நிலைமையில் நன்றாகத்தான் இருக்கிறார். கார் ரேஸில் அதிக ஆர்வம் இருக்கிறது. விளம்பரங்கள் மூலமும் வருமானத்தை ஈட்டுகிறார்.
அஜித் இதை செய்ய வேண்டும்: எனவே சினிமாவுக்காகவும், ரசிகர்களுக்காகவும் அஜித் ஒரு சேவையா நினைத்து; தனக்கு பிடித்த தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து லாப பகிர்வு முறையில் படங்களை செய்ய வேண்டும். அப்படியானால் ரசிகர்களுக்கு அவரிடமிருந்து குறைந்தபட்சம் இரண்டு அல்லது மூன்று பெரிய படங்களாவது தொடர்ந்து கிடைக்கும்" என்றார்.


Click it and Unblock the Notifications
