பவர் கட் பற்றி திமிர் பேச்சு.. அவர்கள் தற்குறிகளாம்.. மாஸ்டர் மகேந்திரன் ஓவர் டாக்
சென்னை: நடிகர் மாஸ்டர் மகேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்; தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு பற்றி பேசியிருந்தார்.அது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி அவருக்கு கண்டனங்களையும் வலுக்க செய்தது. அதனையடுத்து அவர் தனது கருத்தை பின்வாங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்திருக்கின்றன. இந்நிலையில் மாஸ்டர் மகேந்திரனின் விளக்கமும் பலரிடம் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஃபேமஸ் ஆனவர் மாஸ்டர் மகேந்திரன். ஏகப்பட்ட படங்களில் நடித்த அவர்; சிறு வயதிலேயே மற்ற மொழி படங்களிலும் நடித்தார். சூழல் இப்படி இருக்க அவர் வளர்ந்த பிறகு பெரிய அளவில் அவருக்கு வாய்ப்புகள் வருவதில்லை. அவ்வபோது சில படங்களில் மட்டுமே நடித்தார்.கடைசியாககூட 29 திரைப்படத்தில் ஒரு வில்லன் ரோலை ஏற்றிருந்தார். ஆனால் அதில் பெரிய தாக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மாஸ்டர் மகேந்திரன் பேச்சு: சூழல் இப்படி இருக்க மாஸ்டர் மகேந்திரன் சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "இவ்வளவு நாள் மின்சார தடை இல்லையா? ஜாலியாக இருந்தீர்களா?.. சரி ஆறு மாதங்கள் மின்வெட்டுடன் இருக்க முடியாதா?.. சோலார் சிஸ்டம் என்ற ஒன்றை கண்டுபிடித்தது இவர்களுக்கு தெரியுமா? தெரியாதா? என்று எனக்கு தெரியவில்லை. மின்வெட்டு இருந்தால் என்ன? ஆறு மாதங்கள் கேள்வி கேட்காதீர்கள் என சொல்கிறேன்.
நிறுத்துங்கள்: என் வீட்டிலிருந்து கூட மின்சாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சோலாரிலிருந்து எப்படி லைட்டை எரிய வைக்க வேண்டும்; ஃபேனை ஓட வைக்க வேண்டும் என எனக்கு தெரியும். விஜய்யிடம் கேள்வி கேட்டால் உடனே மின்சாரம் வந்துவிடுமா?.. எத்தனை காலம்தான் கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பீர்கள். கேள்வி மட்டும் கேட்டால் பதில் கிடைத்துவிடுமா?.. கேள்வி கேட்பதை நிறுத்தினால்தான் பதில் கிடைக்கும்" என்றிருந்தார்.
விளக்கமளித்த மாஸ்டர்: அவரது இந்தப் பேச்சு அனைவரிடமும் கொதிப்பை ஏற்படுத்தி அவருக்கு கண்டனங்களை பெற்று கொடுத்தது. சூழல் இப்படி இருக்க இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் ரீல்ஸ்களால் நான் கூறிய கருத்துக்கள் முழுமையாக இருக்காது. அதுதான் இங்கே பிரச்னையாக மாறியிருக்கிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை என்பதையும் இங்கே சொல்லிக்கொள்கிறேன்.
கொச்சி விமான நிலையம்: மின்சார தேவையை சமாளிக்க சோலார் மின்சாரமே சிறந்த வழி என்றும், கொச்சி விமான நிலையம் போன்று நம் மாநிலத்திலும் சோலார் முறையை ஏன் செயல்படுத்தக்கூடாது என்றுதான் கேட்டேன். என்னை திட்டி தீர்ப்பவர்கள் உண்மையை அறியாமல் செயல்படுகிறார்கள். தவறாக புரிந்துகொண்டவர்கள்தான் தற்குறி. நான் தற்குறியா?.. எனது கருத்தில் நான் உருதியாக இருக்கிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
