விஜய்க்கு பலம் தந்த வேலாயுதம்.. எல்லா 'ஜில்லா'க்களிலும் மாஸாக அதுவும் காரணம்.. சொல்லி அடித்த கில்லி!
சென்னை: விஜய் ஆட்சியை பிடித்ததற்கு அவருக்கு இருந்த பலங்களில் பெண்கள், குழந்தைகளும் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அவர்களை எப்படி அவர் தன்னுடைய திரைப்படங்கள் மூலம் தன்வசப்படுத்தினார் என்பது ஆச்சரியமான ஒன்று. ஒவ்வொரு படத்திலும் அந்த செங்கல்லை உயர உயர கட்டி கொண்டு சென்றவர் வேலாயுதம் திரைப்படத்தில் உச்சத்துக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஆட்சியை பிடித்ததில் பெண்கள்,குழந்தைகளின் பங்கு இருக்கிறது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். அதற்கு அவருடைய திரைப்படங்களில் அவர் ஏற்றிருந்த கேரக்டர்கள்தான் முக்கிய காரணம். கமர்ஷியல் ரூட்டுக்கு வந்த பிறகு தன்னை சாமானியனாக, அண்ணனாக வைத்துக்கொண்டிருந்த விஜய்; வேலாயுதம் திரைப்படத்தில்தான் உச்சக்கட்டமாக சமூகத்தை காக்கும் சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்தார்.

விஜய்யின் ஆயுதம் வேலாயுதம்: அந்தப் படத்தை இயக்குநர் ராஜா இயக்கியிருந்தார். அவர்தான் பின்நாட்களில் தனி ஒருவன் இயக்கியவர். விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஜெனிலியா, எம்.எஸ்.பாஸ்கர், சரண்யா, சந்தானம் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. திருப்பாச்சி படத்தின் நீட்சியாக இதில் வரும் அண்ணன் - தங்கை பாசத்தை எடுத்துக்கொள்ளலாம். அந்தப் படத்தில் தன் தங்கைக்காக சென்னையை காப்பாற்றினார். இந்தப் படத்தில் தங்கைக்காக சூப்பர் ஹீரோ அவதாரம் எடுத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் காப்பாற்றினார்.
எல்லாம் பக்கா: ரசிகர்கள், ரசிகைகள் மத்தியில் தான் என்ன மாதிரியான இமேஜில் இருக்க வேண்டும் என்று விரும்பினாரோ அதை முழுதாக கொடுத்த படம் வேலாயுதம். தங்கைக்காக ஓடும் ரயிலையே நிறுத்தி இருக்கை பிடித்து கொடுத்து, தங்கை கல்யாணத்தை முன்நின்று நடத்தி, அந்த தங்கைக்கு தந்தையும், தாயுமாய் இருந்து வாழ்க்கையை வடிவமைத்து அவரது ரசிகைகளிடம் எல்லாமுமாய் மாறி நின்றார். கூடவே அதிமுக வாசகமான, 'ரத்தத்தின் ரத்தமே' வரியில் பாடலை தொடங்கி, திமுக வாசகமான, 'என் இனிய உடன் பிறப்பே' என பாடலை பாடியும் இருப்பார்.

அப்போதைக்கு இரண்டு கட்சிகளையும் பேலன்ஸ் செய்து தன்னுடைய வண்டி ஓடும்படிதான் பார்த்துக்கொண்டார். அதிலெல்லாம் விஜய் உஷார்தான். ரியல் வாழ்க்கையில் தன்னை சாந்தமாக வைத்துக்கொண்டு; திரையின் மூலம் ஒரு தேவதூதனாக மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் வீரியமாக சென்று சேர்ந்துகொண்டிருந்தார். நடந்து முடிந்த தேர்தலில் விஜய்யை குறைத்து மதிப்பிட்டுவிட்டார்கள் என்று பெரும்பாலானோர் சொல்வதுண்டு. அது உண்மைதான். கூடுதலாக இன்னொன்றையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரை 2010க்கு பிறகிலிருந்தே பலரும் குறைத்து மதிப்பிட்டுதான் வந்திருக்கிறார்கள். அவரோ யாருக்கும் தெரியாமல் ஒவ்வொரு வீட்டிலும் ஆலமரமாக வளர்ந்துகொண்டிருந்தார்.
அடித்து ஆடிய விஜய்: வேலாயுதம் படத்துக்கு முன்னதாக அவர் நடித்த படங்களில் சமூக அக்கறை ஒரு அளவுக்கு இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் முழுக்க முழுக்க அதுதான். போனஸாக தங்கை சென்ட்டிமென்ட்டும். வேலாயுதம் என்னும் கல் ஆயுதத்தை கொண்டு அவர், 'ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் காக்க வந்த சூப்பர் ஹீரோ, தங்கைக்காக உயிரை கொடுக்கவோ,உயிரை எடுக்கவோ தயங்காத அண்ணன்' என இரண்டு இமேஜ்களை அடித்து தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.

வேலாயுதமாக பார்த்தார்கள்: உண்மையில் சொல்லப்போனால் நடந்து முடிந்த தேர்தலில் விஜய்யை பெரும்பாலானோர் வேலாயுதமாகவே பார்த்தார்கள். அவரும் பரப்புரையின்போதெல்லாம் அந்த மோடில்தான் பேசினார், செயல்பட்டார். அப்படத்தில், கடத்தி வரப்பட்டு ஏலம் விடப்படும் இளம் பெண்களை வேலாயுதம் காப்பாற்றும் சீன் எல்லாம் அந்தப் படம் ரிலீஸான சமயத்தில் ரொம்பவே ஃபேமஸ். அதிலும், ஒரு பெண், 'அவனை அடிங்க அண்ணா' என கூற; தமிழ்நாட்டில் பல இளம்பெண்கள் விஜய்யிடம் அண்ணன் என்ற உரிமையை எடுத்துக்கொள்ள தொடங்கிவிட்டார்கள்.

தூவப்பட்ட விதை: 'இதுதான் விதி என்று வாழும் மக்களின் தலை விதியையே மாற்றப்போகிறவன் நீ' என விஜய்யை நோக்கி பேசப்பட்ட வசனத்தில் தூவப்பட்ட விதை, 15 வருடங்கள் கழித்து வளர்ந்து செழித்திருக்கிறது. அதற்கு துணையாக இருந்தது வேலாயுதம். திரையில் எடுத்த சூப்பர் ஹீரோ அவதாரத்தை முழுமையாக தரையில் எடுக்க முடியாது என்பது உண்மைதான். இருப்பினும் குறைந்தபட்சம் தன்னுடைய தங்கைகள், குட்டி நண்பீஸ்களுக்காகவாவது ஆயுதத்தை கொஞ்சம் கூராக்கி பாதுகாக்கலாம் என்பது அனைவரது கருத்து.
முக்கியமாக, கடந்த ஐந்து நாட்களில் மட்டும் பல கொலைகள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமை என நித்தம் நித்தம் நடக்கின்றன. வேலாயுதம் திரைப்படம்தான் விஜய்யை பெண்கள் மத்தியில் இன்னும் இன்னும் ஆழமாக வேரூன்ற செய்தது. அவர் ஒரு சமூக பாதுகாவலன் என்ற இமேஜையும் அழுத்தமாக குத்தியது. அந்த இமேஜ்தான் தமிழ்நாட்டின் எல்லா ஜில்லாக்களிலும் விஜய்யின் கொடியை உயர பறக்க வைத்தது. திரையில் தன் மீது மக்கள் வைத்த எதிர்பார்ப்புகளை தரையிலும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் அவருக்கு இப்போது உண்டாகியிருக்கிறது. எனவே விரைவில் அவர் அனைத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்து, திரையில் மட்டுமல்ல தரையிலும் தான் ஒரு சூப்பர் ஹீரோ வேலாயுதம்தான் என்பதை நிரூபிப்பார் என நம்புவோமாக..


Click it and Unblock the Notifications
