இன்னொரு தடவை அப்படி பேசினால் உன்னை தூக்கிடுவேன்.. கட்சிக்காரரை எச்சரித்த விஜய்.. செம வார்னிங்காம்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நாளை தனது 52வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் அதற்கான ஏற்பாடுகளும், கொண்டாட்டங்களும் தொடங்கிவிட்டன. அந்தவகையில் சென்னையில் இன்று, 'வாகை தலைவனுக்கு வாழ்த்தரங்கம்' என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் இயக்குநர் வெங்கட் பிரபு, அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
நடிகராக இருந்து முதலமைச்சராகிவிட்டார் விஜய். கட்சி ஆரம்பித்து சில வருடங்களில் சந்தித்த முதல் தேர்தலிலேயே அவர் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருப்பது பலருக்கும் ஆச்சரியம்தான். ஆட்சிக்கு வந்து ஒன்றரை மாதங்கள் ஓடிவிட்டன. அவரது செயல்பாடுகள் பெரும்பாலும் விமர்சிக்கப்படுகின்றன. முக்கியமாக சட்டப்பேரவையில் அவர் எதுவுமே பேசாமல் அமர்ந்திருப்பது பார்ப்பதற்கு அவ்வளவு உகந்ததாக இல்லை. அவரது அந்த சட்டப்பேரவை மௌனத்தையே அவருக்கு எதிரான ஆயுதமாக மாற்ற தொடங்கியிருக்கிறார்கள் விஜய் கட்சியினர்.

விஜய் பிறந்தநாள்: ஒரு முதலமைச்சரின் பிறந்தநாள் என்றாலே; அந்தக் கட்சியை சேர்ந்தவர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபவார்கள். புகழ்ந்து பேசுவார்கள், ஏகப்பட்ட கூட்டங்கள் கூட்டப்படும். இதற்கு முன்னர் முதலமைச்சராக இருந்த அத்தனை பேருக்கும் அது பொருந்தும். தற்போது முதலமைச்சரான பிறகு தனது முதல் பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி சென்னையில் இன்று, 'வாகை தலைவனுக்கு வாழ்த்தரங்கம்' என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் தமிழ்நாடு முழுவதும் ஏகப்பட்ட கொண்டாட்டங்கள், நலத்திட்டங்களுக்கான ஏற்பாடுகளும் தவெகவினர் செய்துவருகிறார்கள்.
ராஜ்மோகன் பேச்சு: சென்னையில் நடந்த வாழ்த்தரங்கில் இயக்குநர் வெங்கட் பிரபு, அமைச்சர் ராஜ்மோகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்கள். அப்போது பேசிய ராஜ்மோகன், 'ஒருமுறை நாங்கள் 40 பேரிடம் நின்றுகொண்டிருந்தோம். அப்போது எங்கள் தலைவர் விஜய் காரிலிருந்தபடி எங்களை நோக்கி இங்கே வரும்படி சைகை காண்பித்தார். அவர் என்னை அழைக்கிறார் என்று நினைத்துக்கொண்டு, 'நானா?' என்று கேட்டேன். அவரோ இல்லை பக்கத்தில் இருப்பவர் என்று சொன்னார்.
லயோலா மணி: பக்கத்தில் பார்த்தால் லயோலா மணி நின்றுகொண்டிருந்தார். அவரும் தன்னைத்தான் கூப்பிடுகிறார் என்பதை புரிந்துகொண்டு வேகவேகமாக விஜய்யிடம் ஓடினார். அங்கே மணியின் தோள்களில் தட்டியும், நெஞ்சில் கை வைத்தும் விஜய் பேசிக்கொண்டிருந்தார். தூரத்திலிருந்து பார்த்துகொண்டிருந்த நானோ என்னுடன் இருந்தவர்களிடம், 'ஏதோ பெரிதாக இம்ப்ரெஸ் செய்துவிட்டார் போல. அதனால்தான் மணியை இவ்வளவு பாராட்டுகிறார்' என சொல்லிகொண்டு இருந்தேன்.
விஜய் செய்தது: மணி வந்ததும் என்ன நடந்தது என்று கேட்டோம். அட சும்மா இருங்க அண்ணே பாராட்டை சொல்ல கூச்சமா இருக்கு என கூறினார். 40 பேர் 20 பேர் ஆனோம்; 20 பேர் 5 பேர் ஆனோம். ஒருகட்டத்தில் டீ கடைக்கு என்று நானும், மணியும் டீ சாப்பிட்டோம். அந்த சமயத்தில் மணியிடம், 'மணி நீ யார் என்று எனக்கு தெரியும்; நான் யார் என்று உனக்கு தெரியும். உண்மையை சொல்; தலைவர் என்ன சொன்னார்' என கேட்டேன்.
அதற்கு மணியோ, 'அட ஏன் அண்ணே நீங்கள் வேற, 'நீ பங்கேற்ற ஒரு டிபேட்டை பார்த்தேன். நீ என்ன மற்ற கட்சிக்காரர்களை எல்லாம் தரக்குறைவாக பேசுகிறாய்' என கேட்டார். அதற்கு நானோ, 'இல்லை தலைவா உங்களை தவறாக பேசியவுடன் நெஞ்சு துடித்துவிட்டது' என சொன்னேன். உடனே தலைவர், 'அதெல்லாம் துடிக்கக்கூடாது. உள்ளே வெச்சுக்கோ. இன்னும் ஒரு தடவை இப்படி பேசினால் உன்னை தூக்கிவிடுவேன்' என சொல்லிவிட்டார் என்றார். திமுக, அதிமுகவை திட்டிய ஒருவரை விஜய் இப்படி கண்டித்தது எனக்கு ஆச்சரியத்தைத்தான் கொடுத்தது. அப்படிப்பட்ட தலைவர்தான் எங்கள் விஜய்" என்றார்.


Click it and Unblock the Notifications
