விஜய்யை கேள்வி கேட்பவர்கள் தெரு நாய்களா?.. ராகவா லாரன்ஸ் ஓவர் பேச்சு.. என்ன மாஸ்டரே இதெல்லாம்?
சென்னை: நடன இயக்குநர், நடிகர், இயக்குநர் என பல முகங்களை கொண்ட ராகவா லாரன்ஸ்; அரசியலுக்கு வரவிருக்கிறார். அதுதொடர்பாக சில நாட்களுக்கு முன்பு வீடியோ வெளியிட்டு; 'நான் அரசியலுக்கு வருவதற்கு அம்மா ஓகே சொல்லிவிட்டார். ரசிகர்களாகிய நீங்கள் நினைப்பதை கமெண்ட்ஸ் செய்யுங்கள்' என கோரியிருந்தார். இந்நிலையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்த கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
நடன இயக்குநராக இருந்த ராகவா லாரன்ஸ் முனி திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதற்கும் முன்னதாக அற்புதம் திரைப்படத்தில் ஹீரோவாக மாறிவிட்டார். முனியை தொடர்ந்து காஞ்சனா படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார். இதற்கிடையே பல வருடங்களாகவே அவர் பலருக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்துவருகிறார். அவர் தத்து எடுத்து வளர்த்த குழந்தைகள் அனைவரும் இன்று நல்ல நிலையில் உயர்ந்திருக்கிறார்கள் என்பது சந்தோஷமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலில் லாரன்ஸ்: சூழல் இப்படி இருக்க அரசியலுக்கு வருவது குறித்து சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், "ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னதும் தலை மேல் கையை வைத்து உட்கார்ந்துவிட்டேன். ஒருநாள் அம்மாவிடம், என்னுடைய அரசியல் என்ட்ரி கொடுத்து சொன்னேன். அவர் முகம் சட்டென்று மாறிவிட்டது. எழுந்து சென்றுவிட்டார்.
நீங்கள் சொல்லுங்கள்: இரண்டு, மூன்று நாட்கள் என்னிடம் பேச மறுத்துவிட்டார். நான் அரசியலுக்கு வருவதை அம்மா விரும்பவில்லை. விஜய் அரசியலுக்கு வந்தபோது அம்மாவிடம் சென்று, 'நண்பர் வருகிறார்' என கூறினேன்.விஜய் கடின உழைப்பாளி. அம்மாவிடம் மீண்டும் கேட்டேன். அவர் மீண்டும் வேண்டாம் என்றுதான் சொன்னார். விஜய்யிடமும் சொல்கிறேன் என கூறினார். தேர்தல் முடிவுகள் வந்ததும், அம்மாவிடம் பேசினேன். அதற்கு அவர், விஜய் அனைத்தையும் மாற்றிவிட்டார் என கூறி; அரசியலுக்கு வர அனுமதி கொடுத்தார். அம்மா ஓகே சொல்லிவிட்டார். ரசிகர்களாகிய நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என கமெண்ட்ஸ் செய்யுங்கள்" என கூறியிருந்தார்.
யார் பக்கம் செல்வார்?: அவர் அப்படி வீடியோ வெளியிட்டதை வைத்தே அவர் அரசியலுக்கு வருவது உறுதியாகியிருக்கிறது. அவர் வரும்போது தவெகவில் இணைவாரா இல்லை அண்ணாமலையோடு செல்வாரா; இல்லை தனியாக செயல்படுவாரா என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன. மேலும், தவெக சார்பில் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அவர்தான் களமிறங்குவார் என்றும் ஒரு தகவல் தொடர்ந்து ஓடுவதும் கவனிக்கத்தக்கது.
செய்தியாளர் சந்திப்பு: இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நிறைய ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்திருக்கிறார்கள். நான் யார் பக்கம் செல்வேன் என்பது பெர்சனல். விரைவில் எனது ரசிகர்களை கூட்டி நல்ல முடிவை அறிவிப்பேன். தவெக ஆட்சி அருமையாக இருக்கிறது. கோயில், பள்ளிக்கூடங்களுக்கு அருகே இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடியதற்கு பாராட்டுக்கள். யாராவது புது ஆள் வந்தால் ரோட்டில் இருக்கும் தெரு நாய்கூட கத்தும்.
அந்த தெரு நாய்க்கு பிடித்த பிஸ்கட் போட வேண்டும். சில தெரு நாய்களுக்கு பிஸ்கட் பிடிக்காது. பிரியாணிதான் பிடிக்கும். அந்த தெரு நாய்க்கு பிடித்ததை போட்டு அது நம்மை பார்த்து கத்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு நாய், வீட்டுக்கே இப்படி என்றால் ஒரு நாட்டை கொடுத்திருக்கிறீர்கள். கொஞ்சம் நேரம் கொடுங்கள். பாசிட்டிவ்வாக யோசியுங்கள். மாற்றம் வந்துவிட்டது. அதற்கு கொஞ்சம் டைம் கொடுக்க வேண்டும்" என்றார்.
விட்டு வெளுக்கும் ரசிகர்கள்: லாரன்ஸின் இந்தப் பேச்சு சோஷியல் மீடியாவில் கடும் கண்டனங்கள் வலுத்திருக்கின்றன. அவர் சொல்வதை பார்த்தால், 'விஜய்யின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்கள் எல்லாம் தெரு நாய்களா?.. மக்களை தெரு நாய்களோடு ஒப்பிட்டு பேசும் தைரியத்தை அவருக்கு யார் கொடுத்தது' என்று சகட்டுமேனிக்கு விளாசிவருகிறார்கள். மேலும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்திருக்கின்றன. என்ன மாஸ்டரே இதெல்லாம்?..


Click it and Unblock the Notifications
