சிம்பு இவ்வளவு உற்சாகமாக இருக்காரே.. அரசன் ஷூட்டிங் ஓவர்.. எஸ்டிஆரை பாருங்க வேற லெவல்
சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு இப்போது நடித்துவரும் திரைப்படம் அரசன். முதன்முறையாக இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்திருப்பதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. கலைப்புலி எஸ். தாணு இந்தப் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்த வருட தீபாவளிக்கு எப்படியாவது படத்தை ரிலீஸ் செய்திட வேண்டும் என்பதில் இயக்குநர் முனைப்பாக இருக்கிறாராம்.
வெற்றிமாறனும், சிம்புவும் வடசென்னை திரைப்படத்திலேயே இணையவிருந்தார்கள். ஆனால் சில காரணங்களால் எஸ்டிஆர் அதிலிருந்து வெளியேற தனுஷ் உள்ளே வந்தார். படம் மெகா ஹிட்டானது. இப்படி ஒரு படத்தை தவறவிட்டுட்டாரே என்று எஸ்டிஆரின் ரசிகர்கள் விழுந்து, புரண்டு அழுகாத குறைதான். இருப்பினும் எப்படியோ மனதை தேற்றிக்கொண்டு நார்மல் மோடுக்கு வந்தார்கள். ஆனாலும் வெற்றியோடு எஸ்டிஆர் சேர வேண்டும் என்ற ஆசை அவர்கள் மனதுக்குள் ஊற்றாக இருந்தது.

இணைந்த கூட்டணி: அவர்கள் எதிர்பார்த்தபடியே அரசன் திரைப்படத்தின் மூலம் வெற்றியும், சிம்புவும் இணைந்திருக்கிறார்கள். தாணுவின் கம்பெனிக்கு சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவிருந்தார் வெற்றி. ஆனால் அந்தப் படம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரவில்லை. அதன் காரணமாக அந்த ஸ்லாட்டில் சிம்புவை வைத்து அரசன் படத்தை இயக்குகிறார். லெஜண்ட் இயக்குநருடன் எஸ்டிஆர் முதன்முறையாக சேர்ந்திருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்தார்கள்.
பயந்த ரசிகர்கள்: சிம்பு ஷூட்டிங் வருவதில் சொதப்புவார் என்ற முத்திரை காலங்காலமாக இருக்கிறது. அதனால் படப்பிடிப்பு தளங்களில் பிரச்னைகளும் எழும் என சொல்லப்ப்ட்டதும் உண்டு. ஆனால் அதையெல்லாம் தாணு திட்டவட்டமாக மறுத்துவிட்டார். சிம்பு அப்படி வந்து நான் பார்த்ததே இல்லை என சில மாதங்களுக்கு அவர் கொடுத்த பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அவரை ஏன் மற்றவர்கள் அப்படி சொல்கிறார்கள் என தெரியவில்லை என்றும் சொல்லியிருந்தார்.
குட் புக்கில் சிம்பு: அரசன் படத்தின் மூலம் சிம்புவின் குட் புக்கில் வெற்றிமாறனும், வெற்றியின் குட் புக்கில் சிம்புவும் இடம்பெற்றுவிட்டார்கள். இரண்டு பேரின் ஒர்க்கிங் ஸ்டைலும் ஒருவருக்கொருவர் பிடித்துவிட்டதாகவும்; அநேகமாக இன்னொரு படத்திலும் இந்தக் கூட்டணி இணையும் என நம்பப்படுகிறது. ரவுடி டைகர் சிவாவின் வாழ்க்கையை தழுவித்தான் இந்தப் படம் எடுக்கப்படுவதாக ஒரு தகவல் ஓடுகிறது. இந்தப் படத்தை ஒரு பென்ச் மார்க்காக கொடுத்துவிட வேண்டும் என்பதில் படக்குழு கடுமையாக உழைத்துவருகிறது.
சண்டை காட்சிகள்: சில நாட்களுக்கு முன்பு சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன. உக்கிரமான அந்த ஸ்டண்ட் காட்சிகளுக்கு பீட்டர் ஹெய்ன்தான் கோரியோ செய்திருந்தார். அதில் சிம்பு அட்டகாசமாக நடித்திருந்தார் என படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். இதில் சிம்புவுடன் விஜய் சேதுபதி, யோகலட்சுமி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள் என்பது குறிபிடத்தக்கது.
ஷெட்யூல் ஓவர்: இந்நிலையில் இப்போது நடந்துவந்த ஷூட்டிங்கின் ஷெட்யூல் நேற்றோடு முடிவடைந்திருக்கிறது. படத்தின் கேமராமேன் வேல்ராஜ், ஷூட்டிங் ஸ்பாட்டில் மைக்கில், 'இந்த ஷெட்யூல் முடிந்தது' என சொல்ல; படக்குழுவினரும், சிம்புவும் உற்சாகத்தோடு கத்தினார்கள். மேலும் வெற்றிமாறன் உள்ளிட்ட சிலருக்கு கை கொடுத்து வாழ்த்தும் தெரிவித்தார் எஸ்டிஆர். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications
