விஜய் வழியில் விஜய் தேவரகொண்டா..மொத்தம் 180 மாணவ, மாணவிகளுக்கு உதவி.. சூப்பர் மனசு
ஹைதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டாவும், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் சில மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். திருமணம் முடிந்த கையோடு தனது பூர்வீக ஊருக்கு மனைவியை அழைத்து சென்ற தேவரகொண்டா, 44 அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையை தனது ஃபவுண்டேஷன் மூலம் வழங்கவிருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் அதுகுறித்து மகிழ்ச்சியோடு ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார் அவர்.
விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் கீதா கோவிந்தம் படத்தில்தான் முதல்முறையாக நடித்தார்கள். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. மேலும் அவர்கள் இரண்டு பேருக்குமான கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. அப்போதிருந்து அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாகவும் மாறியது. இரண்டு பேரின் காதலுக்கும் வீட்டில் சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து சிம்ப்பிளாக கடந்த வருடத்தில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்கள்.

கோலாகல திருமணம்: அதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் வைத்து கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டார்கள். அதில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். மணமுடிந்த சில நாட்கள் கழித்து ஹைதராபாத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பிரமாண்டமாக ரிசப்ஷன் நடந்தது. அதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி திரையுலகத்திலிருந்து பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.
சொந்த ஊரில்: இதையெல்லாம் முடித்துவிட்டு தனது மனைவி ராஷ்மிகாவுடன் நாகர்குர்னூல் மாவட்டத்தில் இருக்கும் தன்னுடைய சொந்த ஊரான தும்மன்பேட்டுக்கு சென்றார். அப்போது பேசிய அவர், "மாவட்டத்தில் இருக்கும் 44 அரசு பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்" என உறுதி கொடுத்திருந்தார். அவரது இந்த செயல் பலரிடமும் பாராட்டை பெற்றது குறிப்பிடத்தக்கது.
விஜய் தேவரகொண்டா பதிவு: இந்நிலையில் விஜய் தேவரகொண்டா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "நாங்கள் இப்போது தும்மன்பேட் நோக்கி பயணம் செய்துகொண்டிருக்கிறோம். அது எனது தந்தை பிறந்த சிறிய கிராமம். பிப்ரவரி மாதத்தில் நானும், ராஷ்மிகாவும் எங்கள் சிறிய கனவின் தொடக்கத்தை அறிவித்தோம். தெலங்கானாவின் அச்சம்பேட் மண்டலத்தில் இருக்கும் 9 மற்றும் பத்தாம் வகுப்பில் கடினமாக உழைக்கும் மாணவர்களை பாராட்டி ஊக்குவிக்க அந்த முயற்சியை தொடங்கினோம்.
குவியும் வாழ்த்து: தங்கள் பெற்றோர்களை பெருமைப்பட வைத்த 180 மாணவர்களின் பட்டியல் இதோ" என குறிப்பிட்டு; சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள், மாணவிகளின் லிஸ்ட்டையும் வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்களோ, 'சொன்னபடி மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்போகும் விஜய் - ராஷ்மிகா ஜோடிக்கு வாழ்த்துகள்' என கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
