விஜய் இவ்வளவு வித விதமாக சமைப்பாரா?.. அம்மா ஷோபா சொன்ன சூப்பர் சீக்ரெட்.. வேற லெவல்
சென்னை: முதலமைச்சர் விஜய் இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகள் தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில் அவரது அறியாத பக்கங்கள் குறித்து அவருடைய தாயார் ஷோபா தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில் அவர் கூறிய விஷயம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
நடிகராக இருந்த விஜய்; மக்கள் பலத்தாலும், ரசிகர்களின் துணையாலும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக மாறியிருக்கிறார். கண்டிப்பாக தனது ஐந்து வருட ஆட்சியை முழுவதுமாக செய்வார் என்றே கருதப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அவரது 52வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவர் வழக்கம்போல் சிம்ப்பிளாக இருந்தாலும் கட்சியின் தொண்டர்களும், அவரது ரசிகர்களும் இந்த நாளை விழா கோலம் பூண வைத்திருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடக்கவிருக்கின்றன.

முதல் பிறந்தநாள்: விஜய் முதலமைச்சரான பிறகு இதுதான் அவருக்கு முதல் பிறந்தநாள் ஆகும். அவர் நடிகராக இருக்கும்போதே அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் குறைவிருக்காது. இப்போது சி.எம் வேறு. சொல்லவா வேண்டும். நேற்று சென்னையில் வாகை தலைவனுக்கு வாழ்த்துகள் என்ற பெயரில் வாழ்த்தரங்கம் நடந்தது. அதில், தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
பெருமித போஸ்ட்டுகள்: அதேபோல் சோஷியல் மீடியாவிலும் எங்கு திரும்பினும் விஜய் பற்றிய போஸ்ட்டுகளாகத்தான் இருக்கின்றன. தமிழ்நாட்டின் அரசியல் முகத்தையே ஒற்றை ஆளாக மாற்றியவர், இன்னும் 20 வருடங்களுக்கு அண்ணனின் ஆட்சிதான், சினிமாவில் அரசன் மாதிரி அரசியலிலும் தான் ஒரு அரசன் என்பதை நிரூபித்துவிட்டார் என பலரும் வாழ்த்து போஸ்ட்டுகளாக போட்டு தள்ளுகிறார்கள். அதுமட்டுமின்றி, திமுகவினர்கூட நடிகர் விஜய்யை கொண்டாடத்தான் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷோபா பேட்டி: இந்நிலையில் விஜய்யின் தாயும், பின்னணி பாடகியுமான ஷோபா சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், "ஜூன் நான்காம் தேதி விஜய் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவரிடம் என்னுடைய கணவர், 'என்ன ப்பா வேலையெல்லாம் எப்படி போகுது.. ரெஸ்ட் எடுக்காம வேலை பார்த்துட்டே இருக்கியே ப்பா?' என கேட்டார். அதற்கு விஜய்யோ, 'என்ன ப்பா செய்வது பண்ணித்தானே ஆக வேண்டும். அதனால்தான் செய்கிறேன்' என கூறினார். அவர் ரொம்பவே கூலாக இருக்கிறார்.
சமையல் விஜய்: அவர் மாறவே இல்லை. இப்போது கோட் சூட் போட்டிருக்கிறார் அவ்வளவுதான். விஜய் பெரிய அளவில் சாப்பிட மாட்டார்.நொறுக்கு தீனியே சாப்பிடமாட்டார். எங்கள் குடும்பத்தில் யாருக்குமே அந்தப் பழக்கம் இல்லை. அவருக்கு தோசையும், மட்டன் குழம்பும் ரொம்ப பிடிக்கும். பல விதமான தோசைகள் அவர் சுட்டு தருவார். இப்போதுவரைக்கும் அவர் அதை செய்துகொண்டுதான் இருக்கிறார். எனக்கு முதலமைச்சர் விஜய், நடிகர் விஜய்யைவிட மகன் விஜய்யைத்தான் பிடிக்கும்" என்றார். முன்னதாக விஜய்க்கு பிடித்த உணவுகளில் தோசைதான் முதலிடம் வகிக்கிறது. அவருக்கு மூன்று வேளை தோசையை கொடுத்தாலும் சாப்பிட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் எழுந்து போய்விடுவார் என ஷோபா சில வருடங்களுக்கு முன்பு கொடுத்த ஒரு பேட்டியில் பேசியிருந்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications
