சாரி டார்லிங்.. சினிமாவிலிருந்து ஒதுங்கிய விஜய்.. அவர் பெயரை வைத்து பக்கா பிளானில் விஷால்
சென்னை: திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு ஆட்சியில் அமர்ந்திருக்கிறது தவெக. இதற்கு ஒரே காரணம் விஜய் என்ற பெயரும், அவரது முகமும்தான். அனைத்து தொகுதிகளிலும் விஜய்க்குத்தான் வாக்களிக்கிறோம் என்ற நினைப்பில் தவெக வேட்பாளர்களுக்கு வாக்களித்தார்கள் மக்கள். இந்நிலையில் விஜய்யை சந்தித்தது குறித்து விஷால் மகுடம் பட இசை வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறார்.
விஜய் கட்சி ஆரம்பித்து சில வருடங்களே ஆனதால்; நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அவரால் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால் அவரது கட்சியோ மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று; திமுகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தது. அவர் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து திரைத்துறையிலிருந்து ஏராளமானோர் நேரில் சென்று அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.

விஷால் பேச்சு: அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு விஜய்யை சந்தித்தார் நடிகரும், இயக்குநருமான விஷால். இந்நிலையில் அவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மகுடம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் விஜய் குறித்து பேசிய அவர், "முதலமைச்சர் விஜய்யை 30 வருடங்களாக எனக்கு தெரியும். கல்லூரியில் அவர் என் அண்ணனுடன் படித்தவர். அப்போதிருந்தே அவரை நான் சந்தித்துவருகிறேன்.
சாரி டார்லிங்: இப்போது அவர் முதலமைச்சரான பிறகும் சந்தித்தேன். அவரிடம் எந்த மாற்றமும் இல்லை. அதே நபர். அதே உடல்மொழி, அதே நல்ல குணம் அப்படியே இருக்கின்றன. பதவி மட்டும் மாறியிருக்கிறது. நான் விஜய்யிடம் பேசும்போது, 'சாரி டார்லிங்' என்றுதான் சொன்னேன். ஒரு முதலமைச்சரை டார்லிங் என கூப்பிடுவது எவ்வளவு நல்ல விஷயம் என்று நினைத்து பாருங்கள். ஒரு நண்பரிடம் பேசுவது போன்றே இருந்தது. அந்த சூழ்நிலையே அழகாக இருந்தது.
படிக்க வைக்கிறேன்: நான் அவரிடம், 'உங்களுக்கு பூங்கொத்து கொடுப்பதற்கு பதிலாக உங்களது பெயரில் மூன்று குழந்தைகளை படிக்க வைக்கிறேன்' என கூறினேன். அதை கேட்டு அவர் ரொம்பவே மகிழ்ச்சியடைந்தார். முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுக்காததன் மூலம் நான் மரபை மீறிவிட்டேன் என்பது உண்மைதான். இருப்பினும் நான் சொன்னதை அவர் மனபூர்வமாக ஏற்றுக்கொண்டார். அவருடைய பெருந்தன்மை அது.
இது நடந்திருக்காது: அவர் சம்மதித்ததில்தான் எனக்கு மகிழ்ச்சி. அவர் ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் இது நடந்திருக்காது. அந்த மூன்று பெண் குழந்தைகளும் அடுத்த மூன்று வருடங்களுக்கு விஜய் பெயரில்தான் படிக்கப்போகிறார்கள். முதலமைச்சரின் பெயரால் அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் அமையப்போகிறது. எனவே விஜய்க்கு நன்றி சொல்ல வேண்டும். இரண்டு வருடங்களுக்கு பிறகு நான் சந்தித்டஹ் அதே விஜய்தான் இப்போதும் இருக்கிறார்.
கதை சொல்வதற்காக: இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரிடம் ஒரு கதை சொல்வதற்காக அதே இடத்துக்கு சென்றிருந்தேன். அதே விஜய்யிடம் சென்று, 'கடந்த முறை நான் கதை சொல்வதற்காக உங்களிடம் அப்பாயிண்ட்மென்ட் கேட்டது நினைவிருக்கிறதா?' என கேட்டேன். அதற்கு அவர், 'ஆமாம், ஆமாம் நன்றாக நினைவிருக்கிறது' என்றார். இப்போது நீங்கள் சினிமாவில் இல்லை என்பதால், நான் உங்கள் பெயரை பயன்படுத்திக்கொள்ளப்போகிறேன் என்றேன். அதற்கு விஜய் சிரித்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications
