twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆசின் விவகாரத்தில் புதுத் திருப்பம்

    By Staff
    |

    Asin
    நான் கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று எனது மகள் பியூலாவை, நடிகை ஆசின் மிரட்டி வருகிறார் என நரசம்மா புதிய புகார் கூறியுள்ளதால் ஆசின் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    நடிகை ஆசின் வீட்டில் வேலை பார்த்து வருபவர் பியூலா (21). இவரது தாயார் நரசம்மா என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனது மகள் பியூலாவைக் காணவில்லை என்றும், அவரை ஆசின் மும்பைக்கு அழைத்துச் சென்றார். அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

    இதையடுத்து நரசம்மாவை போலீஸார் அழைத்து விசாரித்தனர். அப்போது, தனது மகளை விபச்சார விடுதியில் விற்றிருக்கலாமோ என்று தான் சந்தேகப்படுவதாக தெரிவித்திருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆசினிடம் விசாரணை:

    மும்பையில் இருக்கும் ஆசினிடம் நேற்று மாலை போலீஸார் தொலைபேசியில் விசாரித்தனர்.

    அப்போது ஆசின் கூறுகையில், பியூலா எங்கும் போகவில்லை. என்னுடன்தான் இருக்கிறார். இப்போது நான் படப்பிடிப்பில் இருக்கிறேன். உடன் பியூலாவும் இருக்கிரார். அவரை நான் நன்றாகப் பார்த்து வருகிறேன் என்று கூறினார்.

    தாய் மீது பியூலா புகார்:

    இதையடுத்து பியூலாவிடம் போலீஸார் பேசினர். அவர் போலீஸாரிடம் கூறுகையில், நான் 16 வயதிலிருந்தே ஆசின் வீட்டில்தான் வேலை பார்த்து வருகிறேன். வீட்டில் கஷ்டமான நிலை. இதனால் ஆசின் வீட்டிலேயே தங்கி வேலை பார்த்து வருகிறேன்.

    எனக்கு ஆசின் எந்தக் குறையும் வைக்கவில்லை. நன்றாக பார்த்துக் கொள்கிறார். மாதம் ரூ 5,000 சம்பளமும், தினசரி ரூ. 200 பேட்டாவும் தருகிறார்.

    ஆரம்பத்தில் எனது தாயாரிடம்தான் பணத்தைக் கொடுத்து வந்தேன். ஆனால் எனது தாயார் அதை அனாவசியமாக செலவு செய்தார், ஊதாரித்தனாக பயன்படுத்தினார். இதனால் எனது சம்பளத்தை அம்மாவிடம் கொடுக்க வேண்டாம் என்று ஆசினிடம் கூறி விட்டேன். இதனால் அவர் என்னிடம் கொடுத்து வருகிறார்.

    மேலும் எனது வீட்டுக்கு முன்பு அடிக்கடி போவேன். ஆனால் எனது அம்மாவின் போக்கால் நான் வீட்டுக்குப் போவதையும் நிறுத்தி விட்டேன்.

    ஆசின் என்னை நன்றாகவே பார்த்துக் கொள்கிறார். அவரது பெற்றோர் என்னை தங்களது மகள் போலவே பார்த்துக் கொள்கின்றனர். நான் எனது தாயாருடன் போக விரும்பவில்லை. தொடர்ந்து ஆசினுடேயே இருக்க விரும்புகிறேன் என்றார்.

    இதையடுத்து ஆசின் மீது எந்தத் தவறும் இல்லை என்ற முடிவுக்கு வந்த போலீஸார் அவர் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் தீர்மானித்தனர். ஆனால் இப்போது இந்த விவகாரத்தில் புதுத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

    ஆசின் மிரட்டுகிறார்-நரசம்மா புதிய புகார்:

    இந் நிலையி்ல், நான் போலீஸில் கொடுத்துள்ள புகாரை வாபஸ் பெறுமாறு கூறி என் மகளை ஆசின் மிரட்டுகிறார். இதுகுறித்து எனது மகள் எனக்குப் போன் செய்து பதட்டத்துடன் கூறுகிறாள். எனவே எனது மகளை மீட்கும் வரை நான் ஓய மாட்டேன் என்று புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நரசம்மா.

    நரசம்மா கூறுகையில், என் மகள் 18 வயதாக இருக்கும் போது ஆசின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தாள். அப்போது மாதம் ரூ.2,000 சம்பளம் கொடுத்தார்கள். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மாத சம்பளமாக ரூ.3,000 கொடுத்தார்கள்.

    அதை அருகில் உள்ள வங்கியில் பியூலா பெயரிலேயே போட்டு வைத்துள்ளேன். அவர் சம்பள பணத்தில் நாங்கள் யாரும் சாப்பிடவில்லை. அவள் பணம் அப்படியே வங்கியில் உள்ளது. ஒரு நாள் லீவு போட்டால் கூட ரூ.200 கழித்து கொண்டுதான் சம்பளம் தருவார்கள்.

    டிசம்பர் 1ம் தேதி இந்தி கஜினி படத்தில் நடிப்பதற்காக ஆசின் மும்பை போவதாகவும், கூட வருமாறு தன்னை அழைக்கிறார் எனவும் பியூலா கூறினாள். மும்பை எல்லாம் வேண்டாம். சினி பீல்டு ஒரு மாதிரியான இடம் நமக்கு அதெல்லாம் சரிபட்டு வராது என்றேன். 3 மாதம்தான் ஷுட்டிங் பிப்ரவரி மாதம் மறுபடியும் சென்னைக்கு திரும்பி வந்து விடுவோம் என கெஞ்சி கேட்டதால் செல்ல அனுமதித்தேன்.

    சேத்துப்பட்டில் உள்ள ஆசின் வீட்டில் வேலை செய்யும் வரை காலையில் போய்விட்டு மாலையில் வீடு திரும்பிய என் மகள் மும்பை போன பிறகு எங்களிடம் பேசவே இல்லை. 3 மாதத்தில் 2 முறை நாங்கள் போன் செய்து பேசினோம். அப்போது ஆசின் நிறைய செலவு செய்து மார்டன் டிரஸ் வாங்கி கொடுத்திருக்காங்க, என்னை வெளிநாடு சுற்றி பார்க்க அழைத்துச் சென்றார் என்றார் பியூலா.

    ஆனால், சினிமா பீல்ட் ஒரு மாதிரி. நீ திரும்பி வந்து விடு என்று பியூலாவிடம் கூறினேன். பியூலா கேட்கவில்லை.

    இதையடுத்து ஆசினிடம் பேச முயன்றோம் அவரோ எங்களுடன் பேச விரும்பவில்லை. சேத்துப்பட்டில் உள்ள ஆசின் வீட்டிற்கு போனேன். அப்போது தான் அவர் சென்னை வீட்டை காலி செய்து மும்பையில் குடியேறுகிறார் என்ற தகவல் தெரிந்தது.

    தொடர்ந்து ஆசினிடம் இருந்து என் மகளை காப்பாற்ற முயன்றேன். முடியவில்லை. நாங்கள் போன் செய்து பேசினால் யாரும் போனை எடுப்பதில்லை. அப்படியே போன் எடுக்கும் போது பியூலா பற்றி கேட்டால் இந்தி, ஆங்கிலம், தெலுங்கு என குரல் மாற்றி பேசி போனை கட் செய்து விடுவார்கள். சில நேரங்களில் மிரட்டுவார்கள்.

    எனது உறவினர்களோ, திருமணமாகாத பெண்ணை நடிகையுடன் மும்பைக்கு ஏன் அனுப்பி வைத்தாய் என கேட்டு சத்தம் போட்டார்கள். ஆசின் வீட்டில் உள்ளோர்களிடம் போராடி பார்த்தும் என் மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    தசாவதாரம் பாடல் வெளியிட்டு விழாவுக்கு ஆசின் வந்தபோது கூட பியூலா வரவில்லை.

    எனக்கு பணம் முக்கியமல்ல, மானம்தான் முக்கியம். என் மகளை மீட்டு தாருங்கள் என முதல்வரின் புகார் பிரிவில் மனு கொடுத்தேன். பின்னர் சென்னை போலீஸ் கமிஷனரிடமும் புகார் கொடுத்தேன். அதில் எனது மகளை மும்பையில் ஆசின் அடைத்து வைத்துள்ளார் என்று கூறினேன்.

    போலீசார் விசாரிக்க ஆரம்பித்த பின்பும் ஆசின், தரப்பில் யாரும் பேசவில்லை. பியூலாவை அனுப்பவதாக கூறவில்லை. பத்திரிகையில் செய்தி வந்தவுடன் ஆசின் பயந்து விட்டார். நேற்று இரவு 11 மணிக்கு பியூலா என்னிடம் பேசினாள்.

    "அம்மா, என்ன காரியம் பண்ணிட்டீங்க. மேடம் கதறி அழுகிறார்கள். உடனடியாக வழக்கை வாபஸ் வாங்க சொல்றாங்க. நீங்க செய்த புகாரால் அவங்க பெயர் கெட்டு போகும்னு சொல்றாங்க. நீங்க பண்ணின புகாரால் எனக்கு ஏதாவதாயிடுமோ என்று பயமாக இருக்கு. நான் வசதியாக வாழ்ந்து கிட்டிருக்கேன். அதை கெடுத்து விடாதீர்கள். என்ன பண்ணுவீங்களோ தெரியாது. புகாரை வாபஸ் வாங்குங்க. நான் சென்னைக்கு இனி வர மாட்டேன். மேடம் கூடவே இருக்க போகிறேன்'' என காரசாரமாக பேசிவிட்டு போனை கட் செய்து விட்டாள்.

    அவள் பேசும் போது ஆசின் பக்கத்தில் இருப்பதாக கூறினாள். ஆசின் கிட்ட போனை கொடுக்க சொன்ன போது அருகில் இருந்த அவர் நோ... நோ... என கூறி பேச மறுத்தார். அவங்க என் மகளை ஏதோ கூறி மிரட்டி அடைத்து வைத்துள்ளனர்.

    என் மகள் என்னிடம் இதுமாதிரி எல்லாம் பேசியதே கிடையாது. அவளை அவர்கள் ஏதாவது செய்து விடுவார்களோ என பயமாக உள்ளது. பாதுகாப்பாக இருக்கிறாள் என்றால் ஒரு முறை என்னை பார்த்து விட்டு செல்ல வேண்டியது தானே. எதற்காக இப்படி ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள் என்று கூறியுள்ளார் நரசம்மா.

    ஆசின் தனது மகளை மிரட்டி வருவதாக நரசம்மா கூறியுள்ளதால் இந்தப் புகாரைப் பதிவு செய்ய போலீஸ் தரப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இந்த விவகாரம் குறித்து இதுவரை ஆசின் தரப்பிலிருந்து எந்தவித பத்திரிக்கை விளக்கமும் வெளியிடப்படவில்லை.

    தாய்-மகள் சண்டையில் ஆசினின் தலையை தேவையில்லாமல் உருட்டுகிறார்கள் என்றே தெரிகிறது.

    ஆசின் வேலைக்கார பெண் மாயம்

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X