மூக்குத்தி அம்மனில் கடவுள்.. காஞ்சனா 4ல் பேயா?.. ஆச்சரியப்படுத்தும் நயன்தாராவின் மூவ்
சென்னை: நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றார்கள். மணமுடிந்த பிறகும் செம பிஸியாக நடித்துவரும் நயன்; ஹிந்தியில் ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் காஞ்சனா 4 படத்தில் நடிக்கவிருப்பதாகவும் ஒரு தகவல் இப்போது வெளியாகியிருக்கிறது.
கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவரான நயன்தாரா; நானும் ரௌடிதான் திரைப்படத்தில் நடித்தபோது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்தார். இரண்டு பேரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்துவிட்டு; சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். அதனையடுத்து வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றார்கள். அதிலும் சர்ச்சைகள் கிளம்பி பிறகு அடங்கியது.

தொடர்ந்து பிஸி: திருமணம் முடிந்த பிறகு சில நடிகைகள் நடிப்பிலிருந்து ஒதுங்கிவிடுவார்கள். ஆனால் நயனோ இப்போதும் பிஸியாக இருக்கிறார். அடுத்ததாக தமிழில் அவரது நடிப்பில் மண்ணாங்கட்டி, ராக்காயி உள்ளிட்ட படங்கள் வரவிருக்கின்றன. மேலும் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் ஹீரோவாக நடித்திருக்கும் டாக்ஸிக் திரைப்படமும் மிக விரைவில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. நடித்திருக்கும் அனைத்து படங்களின் மீதும் அவருக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது.
ஹிந்தியிலும் கமிட்: தமிழ் போன்றே ஹிந்தியிலும் படங்கள் கமிட்டாகவிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் ஹிந்தியில் நயன் நடித்த முதல் படமான ஜவான் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்தின் வெற்றி அவருக்கு அங்கே அடுத்தடுத்து வாய்ப்புகள் வர கதவுகளை திறந்திருக்கின்றன. அந்தவகையில் வாரிசு இயக்குநர் வம்சி இயக்கத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார். ஷூட்டிங் கூடிய சீக்கிரம் நடக்கவிருக்கிறது.
மூக்குத்தி அம்மன் 2: தமிழில் அவர் இப்போது மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நடித்திருக்கிறார். சுந்தர்.சி அந்தப் படத்தை இயக்க வேல்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏற்கனவே இதன் முதல் பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கியிருந்தார். நயன் நடித்திருந்தார். படம் மெகா ஹிட்டானது. எனவே இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும என்ற கேள்வி ஒட்டுமொத்த திரைத்துறையினரிடமும் எழுந்திருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருவதாக தெரிகிறது.
புதிய படம்?: இந்நிலையில் நயன்தாரா குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது காஞ்சனா படத்தின் நான்காவது பாகத்தில் அவர் முக்கிய வேடத்தை ஏற்க ஒத்துக்கொண்டிருக்கிறாராம். படத்தின் பிளாஷ்பேக்கில் நயன் வருவார் என்றும் திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. அதேசமயம் அவர் பேயாக வருகிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக காஞ்சனா சீரிஸில் நயன் நடிக்கும்பட்சத்தில் அது கண்டிப்பாக மெகா ஹிட்டாகும் என லேடி சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இப்போதே உறுதியாக சொல்ல தொடங்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
