நிவேதா தாமஸின் கவர்ச்சி ஏஐ ஃபோட்டோ.. கொந்தளித்த நடிகை.. கடுமையான எச்சரிக்கை கொடுத்திருக்காங்க
சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நிவேதா தாமஸ் இப்போது குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். நவீன் சரஸ்வதி சபதம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவரை கவர்ச்சியாக சித்தரித்து ஏஐ புகைப்படம் ஒன்று சில நாட்களாக ட்ரெண்டானது. அதை பார்த்து கொந்தளிப்பின் உச்சத்துக்கு சென்றிருக்கிறார் நிவேதா.
தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் நாம். டெக்னாலஜியை பயன்படுத்தி ஏராளமான ஆரோக்கிய விஷயங்கள் சாத்தியமாகியிருக்கின்றன. ஆனால் அதே டெக்னாலஜி நடிகைகளின் வாழ்க்கையில் பெரிய அச்சத்தைத்தான் இன்றுவரை கொடுத்துக்கொண்டிருக்கிறது. அதிலும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகைகளை ஆபாசமாக சித்தரித்து புகைப்படங்கள் வெளியாவது வாடிக்கையாகி இருப்பது கவலைக்குரிய மற்றும் ஆபத்தான விஷயம் ஆகும்.

நடிகைகளின் ரியாக்ட்: அப்படி பாதிக்கப்பட்ட ராஷ்மிகா மந்தனா, "நான் வேதனைப்படுகிறேன். இதுபற்றி பேசுவதற்கு வருத்தமாக இருக்கிறது. ஆன்லைனில் பரப்பப்படும் வீடியோ பற்றி பேச வேண்டும். இதுபோன்ற வீடியோ எனக்கு மட்டுமில்லை இவ்வாறு தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவாதால் இன்று நாம் அனைவருக்குமே பயமாக இருக்கிறது.இந்த விஷயத்தில் எனக்கு பாதுகாப்பாகவும், ஆதரவாகவும் இருக்கும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு நன்றி. இப்படி ஒரு விஷயம் பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்தில் நடந்திருந்தால் அதை எப்படி சமாளித்திருப்பேன் என கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. இதேபோன்ற பாதிப்பால் பலர் பாதிக்கப்படும் முன்பு இதை அவசரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
அவர் மட்டுமில்லை: ராஷ்மிகா தொடர்பான விவகாரத்தில் ஒட்டுமொத்த திரைத்துறையினரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தார்கள். ஆனால் அதோடு அந்த விஷயம் நின்றபாடில்லை. அடுத்ததாக பிரியங்கா மோகன், சமீபத்தில் ஸ்ரீலீலா உள்ளிட்டோருக்கும் நடந்தது. தன்னை தவறாக சித்தரித்த புகைப்படம் பற்றி வேதனையோடு சில நாட்களுக்கு முன்பு பேசிய ஸ்ரீலீலா, "ஒவ்வொரு பெண்ணும் ஒருவரின் பேத்தியோ, மகளோ, அக்கா, தங்கையாகவோ இருப்பார்கள்தானே. பிறகு ஏன் இப்படி சொல்கிறீர்கள்.
விரைவில் நடவடிக்கை: ஆன்லைனில் நடக்கும் பல விஷயங்கள் பற்றி எனக்கு தெரியாமல் இருந்தது. இதை கவனத்துக்கு கொண்டு வந்த என்னுடைய நலம் விரும்பிகளுக்கு நன்றி. நான் எப்போதும் என்னுடைய உலகத்தில் வாழ்ந்துவருகிறேன். ஆனால் இது மிகவும் வருத்தமளிக்கிறது. பேரழிவை ஏற்படுத்தும்படி இருக்கிறது. சக ஊழியர்களும் இந்த சூழலை எதிர்கொள்கிறார்கள். அனுபுடனும், கண்ணியத்துடனும் எனது ரசிகர்களின் மீதுள்ள நம்பிக்கையிலும் தயவு செய்து எங்களுக்கு ஆதரவாக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவரின் சார்பாக இதை கேட்கிறேன். இனிமேல் சட்டத்துறையினர் இதனை கவனித்துக்கொள்வார்கள்" என தெரிவித்திருந்தார்.
நிவேதா தாமஸும் காட்டம்: இவர்கள் மட்டுமின்றி நடிகை நிவேதா தாமஸும் புடவையில் கவர்ச்சியாக இருக்கும் மாதிரியான புகைப்படங்களை சில விஷமிகள் ஏஐ வைத்து உருவாக்கி சுத்தலில் விட்டார்கள். அதனைப் பார்த்து உச்சக்கட்ட கோபமடைந்த நிவேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "என்னுடைய புகைப்படங்களை கவர்ச்சியாக சித்தரித்து வெளியிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவிருக்கிறேன். இது தனிப்பட்ட நபர் மீதான தாக்குதல். தேவையற்ற விஷயங்களை பகிர்ந்து சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











