பாக்யராஜ் துக்க வீடு சர்க்கஸ் போல் ஆகிவிட்டது.. இரக்கமே இல்லையா?.. விஜய்க்கு ராதிகா கோரிக்கை
சென்னை: திரைக்கதை மன்னன் என்று கொண்டாடப்பட்ட பாக்யராஜ் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்துவிட்டார். அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்தபோது பல யூடியூப் சேனல்கள் எல்லாம் அங்கே மொய்த்துவிட்டன. இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. ராதிகாதான் அங்கே அநாகரீகமாக கூடியிருந்தவர்களை நோக்கி, இப்படி செய்யாதீர்கள் என கோரிக்கை வைத்தார்.
இயக்குநர் இமயத்தின் உதவி இயக்குநராக இருந்து இயக்குநரான பாக்யராஜ்; இந்திய திரையுலகின் திரைக்கதை மன்னன். அவர் நேற்று முன்தினம் காலை வாக்கிங் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது; மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றார்கள். ஆனால் எந்த பலனுமின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 73 ஆகும்.

அரசு மரியாதையுடன் தகனம்: அவரது உடல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்கு பிறகு பெசன்ட் நகர் மின் மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பாக்யராஜின் பிரிவு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமின்றி அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பூர்ணிமா, சாந்தனு, கிகி, சரண்யா ஆகியோர் எல்லாம் சுத்தமாக நொறுங்கிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
அநாகரீக செயல்கள்: இதற்கிடையே பிரபலங்கள் மறைந்த வீட்டில் கேமராக்களை தூக்கிக்கொண்டு படையெடுப்பவர்களின் எண்ணிக்கை வர வர அதிகரித்திருக்கிறது. பாரதிராஜா மரணத்தின்போது கேமராவை தூக்கிக்கொண்டு வந்தவரை தியாகராஜன் குமாரராஜா டீல் செய்த விதம் வரவேற்பை பெற்றது. இப்போது பாக்யராஜ் வீட்டிலோ அத்தனையும் எல்லை மீறி சென்றுவிட்டது. சோகத்துடன் வருபவர்களிடம் சென்று மைக்கை நீட்டுவது, யாரையும் உள்ளே செல்ல விடாமல் வழியை மறித்துக்கொண்டு நிற்பது என இஷ்டத்துக்கு செய்தார்கள்.
ராதிகா பதிவு: நடிகை ராதிகா இதையெல்லாம் பார்த்து டென்ஷன் ஆகி, 'உங்களுக்கு டிஆர்பி வேண்டுமென்றால் தனியாக நடித்து தருகிறோம். இந்த இடத்தை சர்க்கஸ் ஆக்காதீர்கள்' என கூறினார். பிறகு அவரே கூட்ட நெரிசலிலும் சிக்கினார். இந்நிலையில் பாக்யராஜ் குறித்தும், நடந்த சம்பவங்கள் குறித்தும் அவர் இப்போது பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "50 ஆண்டுகளாக சிறப்பான நட்புக்கு என் இறுதி வழியனுப்புதல். சிறந்த படைப்பாளி, எழுத்தாளர். சினிமாவில் பல எல்லைகளை கடந்தவர்.
மறக்க முடியாதது: நான் பல சிரிப்புகளையும், மறக்க முடியாத அனுபவங்களையும் பகிர்ந்துகொண்ட மனிதர். என் குடும்பத்துக்கு எப்போதும் துணையாக நின்றவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் இது அதிர்ச்சியான பிரிவு. அமைதியாக துக்கம் அனுசரிக்க வேண்டிய இடம் ஒரு சர்க்கஸ் போல் ஆகிவிட்டது. நாம் எப்போது இவ்வளவு இரக்கமற்றவர்களாக மாறினோம். இனி இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாத வகையில் அரசும், திரையுலகமும் சேர்ந்து உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும். மறைந்தவருக்கு மரியாதையும், கண்ணியமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
