ரஜினிக்கு வில்லனாக இயக்குநர் ஷங்கர்.. தலைவர் 173ல் காத்திருந்த சர்ப்ரைஸ்.. காஸ்ட்லி மிஸ்
சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்துக்கு தர்மன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்டோர் ரஜினியுடன் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. மேலும் மீனாட்சி சௌத்ரியும் இதில் கமிட்டாகியிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது.
தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்புக்குரிய மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இணைந்திருக்கும் படம் மாறியிருக்கிறது. முதலில் இப்படத்தை சுந்தர்.சி இயக்குவார் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் சில நாட்களிலேயே அவர் வெளியேறிவிட்டார். அவரைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி கமிட்டானார். அவரும் வெளியேற; இறுதியாக அஷ்வத் மாரிமுத்து கமிட்டானார். இவர்களுக்கெல்லாம் முன்னதாக, கே.எஸ்.ரவிக்குமாரும் இந்த லிஸ்ட்டில் இருந்தார்.

சிபி சக்கரவர்த்தி ஏன் வெளியேற்றம்: சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்குவதாக இருந்தபோது, 'கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்படியான படமாகத்தான் தலைவர் 173ஐ கொடுப்பேன். இது சத்தியம்' என்றெல்லாம் சொல்லியிருந்தார். ஆனாலும் ஐடியாவாக சொன்னபோது ரஜினிக்கும், கமலுக்கும் பிடித்திருந்தது. டெவலப் செய்த பிறகு சில விஷயங்கள் ஒத்து வராததால் அவர் வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் இந்தக் கதையை பிறகு செய்யலாம் என ரஜினியும், கமலும் சேர்ந்தே உறுதி கொடுத்திருக்கிறார்களாம்.
ஷங்கர் வில்லன்: இப்படத்தில் பெரிய சர்ப்ரைஸ் ஒன்று இருந்திருக்கிறது. அதாவது, இதில் வில்லனாக இயக்குநர் ஷங்கரை நடிக்க வைக்கத்தான் பிளான் செய்திருந்தாராம் சிபி சக்கரவர்த்தி. அவரை சந்தித்து கதை சொல்லியதாகவும்; பிரமாண்ட இயக்குநரும் உடனே ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஷங்கரை வில்லனாக்குவதற்கு ரஜினி, கமல் இரண்டு பேருக்கும் பரிபூரண சந்தோஷம் என்றும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால் படமே நடக்கவில்லை. ஒருவேளை நடந்திருந்தால் ஷங்கரை சூப்பர் வில்லனாக பார்த்திருக்கலாம். அது கொஞ்சம் காஸ்ட்லி மிஸ்தான்.
நடிப்பில் ஆர்வம்: அடிப்படையில் இயக்குநர் ஷங்கருக்கு நடிப்பில் மிகுந்த ஆர்வம் உண்டு. அவர் உதவி இயக்குநராக இருந்ததற்கு முன்பு சில நாடகங்களில் நடித்திருக்கிறார். பிஸ்கு எஸ்.ஏ.சியிடம் அசிஸ்டெண்ட்டாக மாறிய பிறகு இயக்கம் என்பதிலேயே வண்டி ஓடிவிட்டது. அவர் தன்னுடைய பட ஷூட்டிங்கிலேயே நடிகர்கள், நடிகைகளுக்கு நடித்துதான் காண்பிப்பார். பெரிய காமெடி ஆக்டராக வர வேண்டிய அத்தனை தகுதிகளும் அவருக்கு இருந்தது என்று அவரின் நண்பர்கள் சொல்வார்கள்.
இரண்டு பேரையும் இயக்கிய ஷங்கர்: முன்னதாக, ரஜினிகாந்த்தை வைத்து சிவாஜி, எந்திரன், 2.0 ஆகிய மூன்று படங்களையும், கமல்ஹாசனை வைத்து இந்தியன், இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களையும் இயக்கியிருக்கிறார். அடுத்ததாக இந்தியன் 3 திரைப்படத்தையும் கமல்ஹாசனை வைத்து இயக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவை தவிர்த்து வேள்பாரி படத்தையும், குறைந்த பட்ஜெட்டில் ஒரு த்ரில்லர் படத்தையும் ஷங்கர் இயக்கவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
