பாக்யராஜ் மறைவுக்கு ஏன் வரவில்லை?.. அந்த சக்தி இல்லை.. விளக்கம் கொடுத்த ஊர்வசி
சென்னை: இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரும், திரைக்கதை மன்னனுமாகிய பாக்யராஜ் கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு பல மொழி திரைத்துறையிலிருந்தும் வந்திருந்தார்கள். ஆனால் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ஊர்வசி வரவில்லை. அது பெரிய விவாதமானது. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார்.
இயக்குநர் பாக்யராஜுக்கு அறிமுகமே தேவையில்லை. தன்னுடைய வசனங்களாலும், இயக்கத்தாலும், திரைக்கதையாலும் எல்லோரிடமும் நீக்கமற நிறைந்திருக்கிறார். தன்னை ஒரு சாமானியனாகவே வைத்துக்கொண்டு; எதார்த்த வாழ்க்கையை கதைக்குள் வைக்கும் வித்தையை அவர் தெரிந்து வைத்திருந்ததால்; கொடிகட்டி பறந்தார். அவரது படங்கள் தலைமுறைகள் கடந்து ரசிக்கப்படுவதுண்டு. இயக்குநர், ஹீரோவாக மட்டுமின்றி குணசித்திர நடிகராகவும் ஒரு ரவுண்டு வலம் வந்தார்.

உயிரிழந்த பாக்யராஜ்: ஆரோக்கியமாகவே காட்சியளித்த அவர்; கடந்த வாரத்தில் காலை வேளையில் நடைபயிற்சி செய்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது ஏற்பட்ட மாரடைப்பு அவரது உயிரை எடுத்துவிட்டது. இந்த துக்கம் நடக்கும் ஒருநாளுக்கு முன்புதான் குஷ்புவின் மகள் திருமணத்துக்காக கோவா வரை சென்றுவிட்டு வந்தார். எனவே அவரது இறப்பு அத்தனை பேரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பிறகு அனைத்து சடங்குகளும் முடிந்து முழு அரசு மரியாதையுடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவர் தகனம் செய்யப்பட்டார்.
அலைமோதிய கூட்டம்: பாக்யராஜ் இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் அவரது குருநாதர் பாரதிராஜா மறைந்திருந்தார். ஒரே மாதத்தில் இரண்டு ஜாம்பவான்களை இழந்துவிட்டதால் திரைத்துறையினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் சோகத்தின் உச்சத்துக்கு சென்றார்கள். இயக்குநர் இமயத்துக்கு எப்படி சாரை சாரையாக என்று இறுதி மரியாதை செலுத்தினார்களோ; அதேபோல் திரைக்கதை மன்னனுக்கும் செய்தார்கள். ஆனால் அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட ஊர்வசி வரவில்லை.
கிளைம்பிய விவாதம்: முந்தானை முடிச்சு திரைப்படம்தான் ஊர்வசிக்கு முதல் படம். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகுதான் அவரால் திரைத்துறையில் உச்ச நடிகையாக வளர முடிந்தது. இருப்பினும் அவர் வரவில்லையே என சிலர் வருத்தப்பட்டார்கள்; சிலர் கோபப்பட்டார்கள். இந்நிலையில் அதுகுறித்து அவரே பேசியிருக்கிறார். சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்தான் அதற்கான விளக்கத்தை தெளிவாகவும், பக்குவமாகவும் கூறியிருக்கிறார்.
ஊர்வசி சொன்னது: அந்தப் பேட்டியில் அவர், "பாக்யராஜ் மரணத்தில் என்னை தேடியவர்களுக்கு பின்னால் ஒரு கொடூரமான எண்ணம் இருந்தது. அங்கே வந்தால் அந்த ரியாக்ஷனை கொடுத்துவிட்டுதான் போக வேண்டும். என்ன ரியாக்ஷன் என்று எல்லோருக்குமே தெரியும். அதனை மற்றவர்கள் முன்னிலையில் காண்பிக்க எனக்கு விருப்பம் இல்லை. என் சாருடைய ஆத்மாவுக்கும், அவரது குடும்பத்துக்கும் தெரியும். அது மட்டும் எனக்கு போதும்.
பூர்ணிமாவிடம் பேசினேன்: நான் பூர்ணிமாவிடம் பேசினேன். தாங்கிக்கொள்ளும் சக்தி எனக்கு இல்லை. மீடியா முன்பு ஓவர் எமோஷனல் ஆக அவசியம் இல்லை. அதை எல்லாம் உண்மை என சிலர் சொல்வார்கள்; பொய் என சிலர் சொல்வார்கள். இந்த விமர்சனத்துக்கு எல்லாம் அங்கே இடம் கிடையாது. நான் எப்போதுமே சிரித்து பேச வேண்டும், கலாய்க்க வேண்டும் என்றுதான் அவர் விரும்புவார். அவருக்கு பிடித்த மாணவி நான். நான் அழுவது அவருக்கு பிடிக்காது. அவர் அப்படி படுத்திருப்பதை பார்ப்பதற்கான சக்தி எனக்கு கிடையாது" என்றார்.


Click it and Unblock the Notifications
