ஃப்ரிட்ஜ் முதல் அடுப்பு வரை.. பாவா லட்சுமணனுக்கு அள்ளி அள்ளி கொடுத்த லெஜண்ட் சரவணன்
சென்னை: நடிகர் பாவா லட்சுமணனுக்கு சர்க்கரை அளவு அதிகரித்ததால் சில வருடங்களுக்கு முன்பு கால் விரல்களை எடுக்கும் நிலை உருவானது. அதனையடுத்து அவர் தங்குவதற்கு இடம் இல்லாமல் தடுமாறி கொண்டிருந்தபோது; அமைச்சர் ராஜ்மோகன் நேரில் சந்தித்து; எம்.எல்.ஏ ஹாஸ்டலில் தங்குவதற்கு வீடு கொடுத்தார். இந்நிலையில் நடிகரும், தொழிலதிபருமான லெஜண்ட் சரவணன் அள்ளி அள்ளி கொடுத்திருக்கிறார். அது அனைவரிடமும் பாராட்டை பெற்றிருக்கிறது.
ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றியவர் பாவா லட்சுமணன். அந்த நிறுவனத்தின் நம்பிக்கையை பெற்ற அவர்; அந்த கம்பெனி படங்களிலேயே சின்ன சின்ன ரோல்களில் தலை காண்பிக்க ஆரம்பித்தார். இயல்பிலேயே அவருக்குள் இருந்த நகைச்சுவை உணர்வுகளும், நடிப்பும் அவருக்கு ஆக்டிங் ஏரியாவில் பக்கபலமாக இருந்தன. இதன் காரணமாக வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் சேர்ந்து பல காமெடிகளை செய்திருக்கிறார். மேலும் தனியாகவும் அவர் அசத்தியிருக்கிறார்.

லட்சுமணனுக்கு வந்த பிரச்னை: அவருக்கு வயது 60 ஆகிறது. ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை. தான் சினிமாக்காரன் என்பதால் யாரும் தனக்கு பெண் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். பிஸியாக இருந்த அவருக்கு திடீரென காலம் வேறு மாதிரியான சூழலை கொடுத்தது. இதனால் வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலைமையும் உருவானது. சரியாக அந்த நேரம் பார்த்து உடலில் சர்க்கரை அளவும் எகிறியதன் காரணமாக; அவருக்கு கால் விரல்கள் அகற்றப்பட்டன. அந்த சமயத்தில் கலக்கப்போவது யாரு பாலா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் உதவி செய்தார்கள்.
வடிவேலு செய்யவில்லையே: வடிவேலுவுடன்தான் பாவா அதிகம் நடித்திருக்கிறார். எனவே அவர் ஏதாவது உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் எதுவும் செய்யவில்லை என்றே தெரிகிறது. நிலைமை இப்படி இருக்க; அவர் தங்குவதற்குகூட வீடு இல்லாமல் தவித்துவருகிறார் என்றும் சில நாட்களுக்கு முன்பு பொதுவெளிக்கு தெரியவந்தது. உடனடியாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன்; நேரில் சந்தித்து எம்.எல்.ஏ ஹாஸ்டலில் ஒரு வீட்டை ஏற்பாடு செய்துகொடுத்தார்.
உதவிய லெஜண்ட் சரவணன்: அதனையடுத்து லட்சுமணனும் அங்கே குடியேறிவிட்டார். அதைத் தொடர்ந்து நடிகரும், தொழிலதிபருமான லெஜண்ட் சரவணன்; தன் பங்குக்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்தார். அதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் இப்போது பாவா லட்சுமணின் வீட்டு உபயோகத்துக்கு பயன்படக்கூடிய குளிர்சாதன பெட்டி, அடுப்பு, பாத்திரங்க, குக்கர் என பல பொருட்களை கொடுத்திருக்கிறார். திரைத்துறையிலிருந்து ஒருவர் கஷ்டப்படும்போது இப்படி ஓடி வந்து உதவிகளை அள்ளி கொடுக்கும் சரவணனுக்கு பாராட்டுக்கள் குவிந்துவருகின்றன.மேலும், எதுவுமே இதுவரை செய்யாத நடிகர் சங்கத்துக்கு கண்டனமும் வலுத்திருக்கின்றன.
ரஜினி செய்யும் உதவி: முன்னதாக, ரஜினிகாந்த்தும் பாவா லட்சுமணனுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார். மேலும், மாதா மாதம் பத்தாயிரம் ரூபாயை வங்கி கணக்கிலும் போட்டுவருகிறார். அது லட்சுமணனுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்பதில் எந்தவித மாற்று கருத்தும் இல்லை. தங்கள் துறையில் ஒருவர் நலிந்துபோனால் அப்படியே விட்டுவிடமாட்டோம் என்பதை ரஜினி, சரவணன் உள்ளிட்டோர் நிரூபித்துவிட்டதாக பலரும் நெகிழ்ச்சியோடு கூறிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
