1999லேயே ஏஐயா.. அதுவும் தமிழ் சீரியலில்.. இயக்குநர் செம தீர்க்கதரிசி ப்பா!
சென்னை: உலகம் முழுவதும் இப்போது ஏஐ டெக்னாலஜி அபரிமிதமாக வளர்ந்திருக்கிறது. எதை பற்றி வேண்டுமானாலும் ஏஐ சொல்லிக்கொடுக்கும் என்ற நிலைமை இருக்கிறது. அதேசமயம் அதன் காரணமாக பலரது வேலையும் பறிபோயிருக்கின்றன என்பதும் கசப்பான உண்மைதான். அதுமட்டுமின்றி அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அத்துமீறிய செயல்களையும் சிலர் செய்கிறார்கள்.
உலகத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கடந்த 30 வருடங்களில் எங்கேயோ சென்றுவிட்டது என்று சொல்ல வேண்டும். மொத்த விஷயங்களும் இப்போது கைப்பேசிக்குள் வந்துவிட்டன. இங்கே பெரும்பாலானோர் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை கையில் தொட்டு பார்ப்பது கூட இல்லை. மாறாக அத்தனையிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைதான். இப்படி எங்கு திரும்பினும் தொழில்நுட்பத்தின் ஆட்சிதான் இங்கே நடந்துகொண்டிருக்கிறது.

ஏஐ தொழில்நுட்பம்: அனைத்துக்கும் மேலாக கடந்த சில வருடங்களில் ஏஐ எனப்படும் Artificial Intelligence வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. மனிதர்கள் செய்யக்கூடிய பல வேலைகளை அந்த தொழில்நுட்பமே செய்துவிடுகிறது. மனிதர்களும் பல விஷயங்களுக்கு ஏஐயின் உதவியை நாடுகிறார்கள் என்பது உண்மைதான். அது அளவோடு இருக்கும் வரை நல்லது; அளவு மீறினால் அதுவே நஞ்சாகிவிடும் என்பதையும் உணர்த்துக்கொண்டுதான் இருக்கிறது.
அத்துமீறிய செயல்கள்: இந்த தொழில்நுட்பத்தால் உலகத்தில் பலர் வேலைகளை இழந்து தவிக்கிறார்கள். பத்து மனிதர்கள் செய்யக்கூடிய வேலையை ஏஐ செய்துவிடுவதால்; சில நிறுவனங்கள் அதற்கே முன்னுரிமை கொடுக்கவும் செய்கிறார்கள். இப்படியே போனால் மனிதர்களின் தேவை குறைந்துவிடும் அபாயமும் இருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல பிரபலங்களின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஆபாசமாக மாற்றும் செயல்களும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன.
மர்ம தேசம் சீரியலில் ஏஐ: இப்போது சினிமாக்களிலும் அதிகளவு ஏஐ பயன்படுத்தப்படுகின்றன என்பது உண்மைதான். ஆனால் 1999ஆம் ஆண்டே தமிழ் சீரியல் ஒன்றில் ஏஐ குறித்து உரையாடல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதை நம்ப முடிகிறதா. ஆம் நாகா இயக்கிய மர்ம தேசம் சீரியல்தான் அது. அதில் ஒரு சீனில் பப்லு பிருத்விராஜிடம் நீங்கள் யார் என்று ராம்ஜி கேட்பார். அதற்கு பப்லுவோ, 'எனக்கு சொந்த ஊர் மெட்ராஸ்தான். அமெரிக்காவில் கம்யூட்டர் சைன்ஸ் மற்று ஏஐயில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறேன்' என பதிலளிப்பார்.
தீர்க்கதரிசி நாகா: இந்த வீடியோதான் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இப்போது ஆட்டி படைத்துக்கொண்டிருக்கும் ஏஐ குறித்து 26 வருடங்களுக்கு முன்னரே நாகா பேசியிருக்கிறாரே அவர் செம தீர்க்கதரிசி ப்பா என்று நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். முன்னதாக, மர்மதேசம் என்ற சீரியல் கிட்டத்தட்ட 5 வருடங்கள் சன் டிவியிலும், ராஜ் டிவியிலும் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பை பெற்றது நினைவுகூரத்தக்கது. இப்போதும் அதுகுறித்த பழைய நினைவுகளில் மூழ்கும் 90ஸ் கிட்ஸ் இருக்கத்தான் செய்கிறார்கள்.


Click it and Unblock the Notifications
