உயிரே சுமையாக தோன்றிய இரவுகள்.. இயக்குநர் இரா. சரவணன் பற்றி அன்பே டயானா தயாரிப்பாளர் நெகிழ்ச்சி
சென்னை: பாரி இளவழகன் இயக்கத்தில் அவரே ஹீரோவாக நடித்திருக்கும் அன்பே டயானா திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்திருக்கிறது. அப்படத்தை தயாரித்திருப்பவர் மில்லியன் டாலர்ஸ் ஸ்டூடியோஸின் யுவராஜ் ஆவார். இவர்தான் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் தயாரிப்பாளரும்கூட. இந்நிலையில் அவர் இயக்குந்ர் இரா.சரவணன் குறித்து போட்டிருக்கும் முகநூல் பதிவு கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஜமா படத்தின் இயக்குநர் பார் இளவழகனின் இரண்டாவது படம் அன்பே டயானா. இதனை டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட தரமான படங்களை தயாரித்த மில்லியன் டாலர்ஸ் ஸ்டூடியோஸின் யுவராஜ் தயாரித்திருக்கிறார். மேலும், உடன்பிறப்பே, நந்தன், கத்துக்குட்டி உள்ளிட்ட படங்களின் இயக்குநர் இரா.சரவணனும் தயாரிப்பில் பங்காற்றியிருக்கிறார். இந்நிலையில் சரவணனின் பிறந்தநாளை முன்னிட்டு யுவராஜ் போட்டிருக்கும் முகநூல் பதிவு இரண்டு பேருக்கும் இடையே இருக்கும் நட்பை உணர்த்துகிறது.

யுவராஜ் பதிவு: அவர் தன் முகநூலில், "ஒரு மனிதன் வாழ்க்கையில். எல்லாவற்றையும் இழக்கிற தருணம் வரும். நம்பிக்கை இல்லாமல்... "நாளை என்று ஒன்று இருக்குமா?" என்ற கேள்வியோடு உயிரே ஒரு சுமையாகத் தோன்றும் இரவுகளும் வரும். அப்படிப்பட்ட ஒரு இருளில் நான் நின்றிருந்தேன். எல்லாம் முடிந்துவிட்டது இனி வாழ வேண்டிய காரணமே இல்லை என்று நினைத்த அந்த நேரத்தில், என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல்... என்னை எந்தத் தீர்ப்பும் சொல்லாமல்... என் முதல் தொலைபேசி அழைப்பிலிருந்து இன்று வரை, ஒரே மாதிரி என் பக்கத்தில் நின்றவர் இரா. சரவணன் சார்.
கடலில் திசை தெரியாமல் தவிக்கும் ஒரு கப்பலுக்கு, தொலைவில் ஒரு கலங்கரை விளக்கம் தெரிந்தாலே போதும். "கரை இன்னும் இருக்கிறது" என்ற நம்பிக்கை வந்துவிடும் என் வாழ்க்கையின் அந்த கலங்கரை விளக்கம் இரா. சரவணன் சார். நான் பேச முடியாத நாட்களில் என் மௌனத்தைக் கேட்டவர். இரத்த உறவு இல்லாமல், ஒரு அண்ணன் என்ற உறவின் அர்த்தத்தை உணர வைத்த மனிதர்.
வாழ்க்கையில் சில மனிதர்களுக்கு "நன்றி" என்ற ஒரு வார்த்தை மிகவும் சிறியது.ஏனெனில் அவர்கள் செய்தது ஒரு உதவி அல்ல... ஒரு உயிர் மீண்டும் வாழ வேண்டும் என்ற நம்பிக்கையை விதைத்தது.இன்று உங்கள் பிறந்தநாள் சார். நீங்கள் இந்த உலகிற்கு கொடுத்த அன்பையும், பலரின் வாழ்க்கையில் ஏற்றிய நம்பிக்கையையும், இந்த உலகம் பல மடங்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்கிறேன். எப்போதும் இதே அன்போடும், இதே கருணையோடும், பலரின் வாழ்க்கையில் கலங்கரை விளக்கமாக ஒளிர்ந்து கொண்டே இருங்கள். பிறந்தநாள் வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
